பாடல் 5:
பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும் போய்
வேய் அடைந்த தோளி அஞ்ச வேழம் உரித்தது என்னே
வாய் அடைந்த நான்மறை ஆறு அங்கமோடு ஐ வேள்வி
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே
விளக்கம்:
வாய் அடைந்த=எழுதப் படாமல் வாய் வழியே தலைமுறை தலைமுறையாக வந்த வேதங்கள்; இந்த தன்மை கருதியே எழுதாக் கிளவி என்ற பெயரும் எழுந்தது. குரு சீடன் என்ற சங்கிலி வழியாக வேதங்கள் கற்றுக் கொடுக்கப் பட்டு வந்தன. ஐ வேள்வி=ஐந்து யாகங்கள்; அந்தணர்கள் தினமும் செய்ய வேண்டிய ஐந்து செயல்களை ஐந்து வேள்விகள் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. தேவயக்ஞம், பிரம்மயக்ஞம், பூதயக்ஞம், மனித யக்ஞம் மற்றும் பித்ருயக்ஞம் என்பன இந்த ஐந்து வேள்விகள். வேள்வி வளர்த்து சமித்துக்களாலும் அன்னத்தாலும் ஹோமம் செய்வது தேவயக்ஞம் என்று அழைக்கப் படுகின்றது. தான் கற்ற வேதத்தை ஓதுவது பிரம்மயக்ஞம் என்று அழைக்கப்படுகின்றது. தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் ஜீவராசிகளுக்கு அன்னம் வைத்தல் பூதயக்ஞம் என்று அழைக்கப்படுகின்றது. அதிதிகளுக்கு விருந்து அளித்தல், விருந்தோம்புதல் மனிதயக்ஞம் என்று அழைக்கப்படுகின்றது. இறந்த மூதாதையர்க்கு அன்னம் அல்லது தீர்த்தம் அளித்தல் பித்ருயக்ஞம் என்று அழைக்கப் படுகின்றது.
சிட்சை, வியாகரணம், நிருத்தம், ஜோதிடம், கல்பம், சந்தஸ் என்பன ஆறு அங்கங்கள். வாய்மொழியாக தலைமுறை தலைமுறையாக குருவிடமிருந்து அவரது சீடனுக்கு சொல்லப்பட்டு பரவிய வேதங்களுக்கு இந்த ஆறு அங்கங்கள் அரணாக இருந்து தவறாக வேதங்கள் ஓதப்படுவதை தவிர்த்தன. எனவே தான் வேதங்களையும் அங்கங்களையும் ஒன்றாக கற்றுக்கொள்வது அவசியமாக கருதப் பட்டது. இந்த ஆறு அங்கங்களில் ஒன்று ஊனமடைந்தாலோ அல்லது ஒன்று இல்லாமல் போனாலோ, ஓதப்படும் வேதம் குறைபாடு உடையதாக மாறுகின்றது. எனவே இந்த ஆறு அங்கங்களும் முறையாக இருக்குமாறு வேதங்கள் ஓதப் படவேண்டும். இந்த ஆறு அங்கங்களும் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் இப்போது பார்ப்போம்.
சிட்சை என்றால் எழுத்து என்று பொருள். வேதத்திற்கு அழகு சேர்ப்பது சிட்சை எனப்படும் அங்கமாகும். ஒரு மனிதனுக்கு அவனது மூக்கு அழகு சேர்ப்பதைப் போன்று சிட்சை அழகு சேர்ப்பதால், இதனை வேத புருடனின் மூக்கு என்றும் கூறுவார்கள். மூக்கும் முழியுமாக இருப்பதைத் தானே அழகாக இருப்பதாக நாம் கருதுகின்றோம். மூக்குக் குழாய் பழுதடைந்தால், நமது சொற்களின் உச்சரிப்பு சரியாக இருப்பதில்லை. ஜலதோஷம் பாதிக்கும் போது நமது குரல் கெட்டுப்போவதை நாம் உணருகின்றோம். ஒவ்வொரு எழுத்தினையும் அதற்கு உரிய முறையில் உச்சரித்தால் தான் வேதம் கேட்பதற்கு அழகாகவும் முறையாகவும் தவறில்லாமலும் இருக்கும்.
சிட்சைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுவது வியாகரணம். வியாகரணம் என்றால் இலக்கணம் என்று பொருள். வழக்கத்தில் உள்ள பல சொற்கள், சற்று மாறுபட்டு பாடல்களில், இலக்கியங்களில் கையாளப்படுவதை நாம் காண்கின்றோம். இலக்கியங்களில் நாம் காணும் பல சொற்கள் காலப்போக்கில் திரிந்து, இன்று நாம் பயன்படுத்தும் நிலையில் உள்ளதைக் காண்கின்றோம். ஆனால் அத்தகைய இலக்கியச் சொற்கள், கவிதைகளின் இலக்கணத்திற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை, சற்று ஆராய்ந்தால் நாம் உணரலாம். அவ்வாறே வேதத்தில் காணப்படும் பல சொற்கள் இன்றும் நாம் நடைமுறையில் கையாளும் வடமொழிச் சொற்களிலிருந்து மாறுபட்டு இருக்கின்றன. அத்தகைய வேதச் சொற்கள், இன்றைய நடைமுறைச் சொற்களிலிருந்து வேறுபட்டாலும் இலக்கண ரீதியில் சரியாக இருப்பதை, நாம் உணரலாம். இவ்வாறு பல சொற்களின் பயன்பாட்டினை நமக்கு உணர்த்தும் வியாகரணம், வேதத்தில் அமைந்திருக்கும் சொற்களை பாதுகாக்கின்றன. எனவே வியாகரணத்தை வேதத்தின் மெய்க்காப்பாளன் என்றும் வேத புருடனுக்கு வாய் என்றும் கூறுவார்கள். மேலும் ஒரே சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளதை நாம் தமிழ் மொழியில் காண்பது போல், வடமொழியிலும் காணலாம். சொற்களை பயன்படுத்தும் முறையும் வியாகரணத்தில் விளக்கப் படுகின்றது.
வேதங்களில் கூறப்படும் பல மந்திரங்களுக்கு உரிய முனிவர்கள், சந்தம், தேவதை ஆகியவற்றின் பெயர்களை சொன்ன பின்னரே அந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது விதி. சந்தம் என்பது அந்தந்த மந்திரங்களில் அமைந்துள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். மந்திரங்களில் உள்ள எழுத்துக்களில், ஒரு எழுத்தைக் குறைத்தோ அல்லது கூட்டியோ சொல்வதைத் தவிர்ப்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தணர்கள் தினமும் சொல்லவேண்டிய காயத்ரி மந்திரத்தில் இருபத்து நான்கு எழுத்துகள் இருப்பதாக வேதம் கூறுகின்றது. சந்தஸ் என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த அங்கம், மூன்றாவது முக்கிய அங்கமாக கருதப்படுகின்றது. இந்த அங்கம் வேத புருடனின் பாதமாக கருதப் படுகின்றது.
அடுத்த அங்கம் நிருக்தம் என்று அழைக்கப்படுகின்றது. நிருக்தம் என்றால் விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். பல பொருள்களைக் கொண்ட சொற்கள், வேதங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த விளக்கத்தினைத் தெரிந்து கொண்டால் தான், அந்தந்த இடங்களுக்கு ஏற்ப, வேதத்தின் பல சொற்கள் உணர்த்தும் சரியான பொருளை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இவ்வாறு சரியான விளக்கங்களை அறிந்து கொள்வதற்கு வியாகரணமும் உதவி செய்கின்றது. எனவே சொற்களின் விளக்கம், இலக்கணம் ஆகியவற்றை அறிந்து கொண்டால் தான், சரியான உச்சரிப்புடன் பல வேத மந்திரங்களை நாம் சொல்ல முடியும். இந்த அங்கம் வேத புரடனின் காதுகளாக கருதப் படுகின்றன.
அடுத்ததாக சொல்லப்படும் ஜோதிடம் என்ற அங்கம், வேத புருடனின் கண்ணாக கருதப் படுகின்றது. இது கணித ஸ்கந்தம் என்றும் ஹோரா ஸ்கந்தம் இரண்டு பிரிவாக உள்ளது. முதல் பகுதியில் கால தத்துவங்கள் சொல்லப்படுகின்றன. மேலும் அந்தந்த காலங்களில் செய்ய வேண்டிய கடமைகள், காரியங்கள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றன, மேலும் பல சுப மற்றும் அசுப நிகழ்ச்சிகள், வேள்விகள், பூஜைகள் செய்ய வேண்டிய காலங்களை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதையும் விளக்குகின்றன. இரண்டாவது பிரிவான ஹோரை, ஜாதகங்களின் மூலம் நடந்த நிகழ்ச்சிகள், நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை அறிய உதவுகின்றன.
கல்பம் என்றால் பிரயோகம் என்று பொருள். வேள்வி முதலான பல சடங்குகளை, பல விதமான மந்திரங்களை பயன்படுத்தும் முறை இந்த அங்கத்தில் சொல்லப்படுகின்றது. மேற்கூறிய விளக்கங்கள் எவ்வாறு அங்கங்கள், வேதங்களை ஓதுவதிலும், வேதத்தின் பொருளை புரிந்து கொள்வதிலும், வேத மந்திரங்களை பயன்படுத்துவதிலும் எவ்வாறு நமக்கு உதவியாக உள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த அங்கத்தை வேத புருடனின் கைகள் என்று கருதுகின்றனர். எனவே வேதங்களை முற்றும் கற்றால் மட்டும் போதாது, வேதங்களின் அங்கங்களையும் முறையாக கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தினை நாம் உணர்கின்றோம். மேலும் இந்த அங்கங்கள் மூலம், உணர்வதற்கு மிகவும் அரியனவாக காணப்படும் வேதங்களை நாம் அறிந்து கொள்ள அங்கங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம்.
பொழிப்புரை:
பேய்கள் நாடமாடும் காட்டினை சிறந்த இடமாக கருதி தான் உறையும் இடமாகவும் நடமாடும் இடமாகவும் கொண்டு பேணிப் பாதுகாப்பதும், மூங்கில் போன்று அழகான தோள்களை உடைய அன்னை அச்சம் கொள்ளும் வண்ணம் தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலினை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டதும், இறைவன் செய்த வியப்பூட்டும் செயல்கள் ஆகும். இவ்வாறு மற்றவரை வியப்பு அடையச் செய்யும் இறைவன், எழுதிப் படிக்காமல் வாய்மொழியாக ஒருவருக்கு ஒருவர் தலைமுறை தலைமுறையாக வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் கற்றுக் கொண்டு, ஐந்து வகையான வேள்விகளை தினமும் செய்யும் அந்தணர்கள், தீமூட்டி வேள்வி செய்யும் சிவந்த கைகளை உடைய அந்தணர்கள் வாழும் சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


