புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

127. பிறையணி படர்சடை - பாடல் 6

பெருமானின் திருவடிகள்

News image
Updated On :25 ஏப்ரல் 2019, 6:30 pm


பாடல் 6:

    வரை பொருது இழி அருவிகள் பல பருகொரு கடல் வரி மணலிடை
    கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்
    அரை பொரு புலியதள் உடையினன் அடியிணை தொழ வருவினை எனும்
    உரை பொடிபட உறுதுயர் கெட உயருலகு எய்தலொரு தலைமையே

விளக்கம்:

வருவினை என்ற சொல் பொடியாக மாறிவிடும் என்று கூறுவதன் மூலம், வினைகளும் பொடிபொடியாக மாறி வலிமை இழந்துவிடும் என்று சம்பந்தர் குறிப்பாக உணர்த்துகின்றார்.. மலையில் தோன்றும் அருவிகள் பல கற்களுடன் மோதி அவற்றை உடைத்து மணல் பொடிகளாக கடலின் அருகே கொண்டு வந்து சேர்க்கும் தன்மை, சம்பந்தர்க்கு பெருமானின் திருவடிகள் வினைகளை பொடியாக்கும் தன்மையை நினைவூட்டியது போலும். சென்ற பாடலில் பெருமானின் வல்லமையை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் அந்த வல்லமை நம்மை முக்தி உலகுக்கு அழைத்துச் செல்லும் என்று இங்கே கூறுகின்றார். பருகொரு கடல் என்று அனைத்து நதிகளின் நீரும் இறுதியில் கடலினைச் சென்று அடையும் நிலையை குறிப்பிடுகின்றார். 
 
பொழிப்புரை:

மலைகளில் உள்ள கற்களில் மோதி கீழே இறங்கும் பல அருவிகள் நதிகளாக மாறி கடலினைச் சென்று அடைவதன் முன்னம், அந்த கடலின் கரையினில் வரிவரியாக மணலினை கொணர்ந்து சேர்க்கின்றன. இந்த மணற்கரையினில் பல முறையும் மோதும் அலைகளைக் கொண்ட கடலின் கரையில் அமைந்துள்ள கழுமலம் என்ற தலத்தினில் மிகுந்த விருப்பமுடன் பெருமான் உறைகின்றான். அவன் கொழுந்து விட்டெரியும் தீயின் நிறத்தில் திருமேனியை உடையவனாகவும், தனது இடுப்பினில் புலித்தோலை உடையாக அணிந்தவனாகவும் காட்சி தரும் பெருமானின் திருவடிகளை தொழுவதால், நம்மை பிணித்துள்ள வினைகள் பொடியாக அழிந்து, அந்த வினைகளால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் தடுக்கப்பட்டு, உயர்ந்த உலகமாகிய சிவலோகத்தில் இடம் பெறுகின்ற வாய்ப்பு நமக்கு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.