புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

127. பிறையணி படர்சடை - பாடல் 10

வேதங்களும் ஆகமங்களும்

News image
Updated On :29 ஏப்ரல் 2019, 6:30 pm


பாடல் 10:

    அமைவன துவர் இழுகிய துகில் அணியுடையினர் அமண் உருவர்கள்
    சமையமும் ஒரு பொருளெனும் அவை சல நெறியன அறவுரைகளும்
    இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
    நமையல வினை நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே

விளக்கம்:

அமைவன=பொருந்துவன; இழுகிய=தோய்ந்த; நமையல=வருத்தம் உண்டாக்காது; சல நெறி= வஞ்சக நெறி; உண்மையான மெய்ப்பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனை நாடிச் சென்று வணங்கி அவனது அருளினால் முக்தி நிலை பெறுவதற்கு வழி வகுப்பது, வேதங்களும் ஆகமங்களும் உணர்த்தும் சைவநெறியாகும். அந்த வழியினில் நாம் செல்வதைத் தடுப்பதால் சமணர்கள் மற்றும் புத்தர்களின் கொள்கைகள் வஞ்சக நெறிகள் என்று கூறப்படுகின்றன.   

பொழிப்புரை:

தமக்கு பொருந்தும் வண்ணம் துவர் நிறம் தோய்க்கப்பட்ட ஆடையினை அணியும் புத்தர்களும், உடையேதும் இல்லாமல் அம்மணமாக திரியும் சமணர்களும் பின்பற்றும் மதங்கள், பொருள் என உணர்த்தும் கொள்கைகள் வஞ்சக நெறிக்கு உயிரினை அழைத்துச் செல்லும் வழிகளாகும். அவர்களது அறிவுரைகளும் வஞ்சகம் நிறைந்த மொழிகள். ஆனால், விண்ணவரும் தொழும் வண்ணம் கழுமலம் நகரில் வீற்றிருக்கும் பெருமானது திருவடிகளைத் தொழும் அடியார்களின் வினைகள் அவர்கள் வருத்தாத வண்ணம் பெருமான் அருள் செய்வதால், அத்தகைய அடியார்கள் வினைகளின் தன்மைகள் நீங்கப்பெற்று உயர்ந்த முக்திநெறியினை சென்று அடைவார்கள்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.