/

121. அரனை உள்குவீர் - பாடல் 9

சிவபெருமானின் வலிமையையும்

News image
Updated On :22 பிப்ரவரி 2019, 6:30 pm

பாடல் 9:

    தென்றில் அரக்கனைக்
    குன்றில் சண்பையான்
    அன்று நெரித்தவா
    நின்று நினைமினே
 

விளக்கம்:

தென்றில்=பகை; தென்றில் என்ற சொல் தெற்கு திசையினை உணர்த்துவதாக பொருள் கொண்டு தமிழகத்தின் தெற்கே உள்ள இலங்கைத் தீவின் மன்னன் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. குன்றில்=கயிலை மலையில்; சீர்காழி தலத்தில் கட்டு மலையில் மேல் அமைந்துள்ள கயிலாயக் காட்சி சன்னதி சம்பந்தர்க்கு அரக்கன் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை நிகழ்ச்சியை நினைவூட்டியது போலும். அரக்கன் இராவணனது கயிலை நிகழ்ச்சி, சிவபெருமானின் வலிமையையும் அவரது கருணைத் திறத்தையும் ஒரு சேர உணர்த்தும் நிகழ்ச்சி. எவராலும் வெற்றி கொள்ள முடியாமல் அகந்தையுடன் திரிந்த அரக்கனது வலிமை குறைக்கப்பட்டு, அவனது அகந்தை அழிக்கப்பட்டது. தான் தங்கியிருந்த கயிலை மலையினை பேர்க்கத் துணிந்தவன் என்பதையும் பொருட்படுத்தாது, அரக்கன் சாம கானம் பாடி இறைஞ்சிய போது, அரக்கன் கொண்டிருந்த இடரிலிருந்து விடுவித்ததும் அன்றி, அவனுக்கு பல வரங்களும் அருளிய பெருமான், எல்லையில்லா கருணை உள்ளவன் கொண்டவன் என்பதையும் நாம் உணர்கின்றோம்.     

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.43..10) அப்பர் பிரான் இலங்கை மன்னனை தென்னவன் என்று குறிப்பிடுகின்றார். தென்னவன்=தென்னிலங்கை மன்னவனாகிய இராவணன்; கன்னல்=கரும்பு; இன்=இன்னருள்; சேயிழை=அணிகலன்கள் பூண்ட இளம் பெண், இங்கே பார்வதி தேவி

    தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
    மன்னவன் விரலால் ஊன்ற மணிமுடி நெரிய வாயால்
    கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
    இன் அவற்கு அருளிச் செய்தார் இலங்கு மேற்றளியானாரே 

பொழிப்புரை:

தென் திசையில் இருந்த இலங்கை தீவுக்கு அரசனாகிய அரக்கன் இராவணனை கயிலை மலையில் கீழே பண்டைய நாளில் நெரித்து அவனது வலிமையை அடக்கிய இறைவன் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைகின்றான். உலகத்தவரே, இறைவனின் எல்லையற்ற ஆற்றலையும் அளவு கடந்த கருணையையும் உணர்த்தும் இந்த செயலை நினைவு கூர்ந்து அவனை போற்றி புகழ்வீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.