காதலும் கிளியோபாட்ராவும்

மனித சமூகம் ஏன் இன்னும் சொல்லப் போனால் அனைத்து ஜீவராசிகளும் ஏன் காதலில் உய்த்து கிடக்கின்றன? காதலால் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் முதல் காதலால் அரியணையை  கைவிட்டவர்கள் வரை அவர்கள் இறுக்கப் பற்ற அ
காதலும் கிளியோபாட்ராவும்

இந்த 21 ஆம் நூற்றாண்டு வரை மாறாமல் பயணித்திருக்கிறது காதல். ஆதி சமூகம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை காதல் தான் மனித மனங்களை இன்னும் இளமையாக வைத்திருக்கிறது. அவளின்றி அணுவும் அசையாது என்கிற வசனத்தைத் சற்றே மாற்றி காதலின்றி அணுவும் அசையாது என உரக்கக் கூறினாலும் பொருத்தமானதாவே இருக்கும். 

மனித சமூகம், ஏன் இன்னும் சொல்லப் போனால் அனைத்து ஜீவராசிகளும் ஏன் காதலில் உய்த்துக் கிடக்கின்றன? காதலால் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் முதல் காதலால் அரியணையை  கைவிட்டவர்கள் வரை அவர்கள் இறுக்கப் பற்ற அப்படி என்ன வைத்திருக்கிறது காதல் தனக்குள்...?

உறவு முறைகளின் இலக்கணச் சட்டங்களுக்கு காதல் என்பது ஒன்று. ஆனால் அது காதல் சமுத்திரத்திற்கு போதுமானதாய் இருப்பதில்லை. அப்படி ஒரு காதல் அது. அவள் சாம்ராஜ்யங்களுக்காக திருமணம் செய்தாள். அதற்குப் பிறகு காதல் செய்தாள். காதலன் கொலைப்பட்ட பிறகு அவளுக்கு மீண்டும் காதல் வந்தது. அது அவளுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. அதுவே அவளை மந்திரக் கம்பளத்தில் அமர வைத்து உலகம் சுற்றியது. அதுவே அவளை மறுக்கவும் செய்தது. கிட்டத்தட்ட அவள் மறைந்து 2000 ஆண்டுகள் ஆன பின்னும் இன்றைக்கும் அவள்தான் உலகின் அழகி. ஒவ்வொரு பெண்ணையும் வர்ணிக்கும்போதும் அவள்தான் உவமையாக வந்தமர்கிறாள். காதலில், அது கொடுத்த அழகில் அவள்தான் இன்றைக்கும் ராணி.

கிளியோபாட்ரா

எகிப்தையே மயக்கும் பேரழகி கிளியோபாட்ரா. அதிகாரம் கைமீறி போய்விடாமல் இருக்க தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணையில் அமர்ந்தவள் கிளியோபாட்ரா. அதுவும் சொந்த சகோதரனையே கணவனாகக் கொண்டு அரியணையில் ருசி பார்த்தவள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 41 ஆம் ஆண்டு அன்றைய எகிப்து கடுமையான உள்நாட்டுப் போரை சந்திக்க தயாராகிக் கொண்டிருந்தது. அரியணையில் அவ்வளவு எளிதில் மங்கையை அமரவைப்பதில்லை. அப்படியும் அமரவைத்தால் அவர்கள் ஆளவிடுவதில்லை. இதற்கு கிளியோபாட்ராவும் விதிவிலக்கல்ல. முண்டு வரும் உள்நாட்டுப் போரைத் தடுக்க வரலாற்று நாயகன் ஜூலியஸ் சிசரிடம் தஞ்சமடைந்தாள் கிளியோபட்ரா. ஒரு உள்நாட்டுப் போரைத் தடுக்க நினைத்தவளுக்கு உதவியவன் ஒரு உள்நாட்டுப் போரை உருவாக்கியவன். ரோம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் அதே ரோமுக்குள் நுழைந்து உள்நாட்டுப் போரை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றி விரட்டியடிக்கப்பட்ட அதே அரியசானையை ஆண்ட அதே ஜூலியஸ் சீசர். 

மிகச்சிறந்த போர் திறன் உடையவனாகவும், ரோமை தன் காலடிக்கும் கைப்பற்றி வைத்திருந்தவனாகவும் இருந்தவன் ஜூலியஸ் சிசர். எந்த கண்களுக்கும் காதல் வரும் தானே...ஜூலியஸின் கண்கள் கிளியோபாட்ராவை தேடின. கிளியோபாட்ராவுக்காக எகிப்துக்கு படைகளைத் திரட்டிக் கொண்டு சென்று நின்றான். நைல் நதியை எதிரிகளின் ரத்தங்களால் சிவப்பாக்கினான். அந்த ஆக்ரோச கண்களுக்குள் காதல் செய்ய அவ்வளவு இடம் இருந்தது. கிளியோபாட்ராவும் ஜூலியஸை விரும்பினாள். ஜூலியஸும், கிளியோபாட்ராவும் ரோமையும், எகிப்தையும் தாண்டி ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

வரலாறுகள் எதிர்பார்த்த ஒரு போர்வீரனுக்கும், சித்திரங்கள் பொறாமைப்படும் பேரழகிக்கும் காதல். இந்தக் காதல் சுவாரஸ்யங்களை வெறுத்திருக்கிறது. இவர்கள் காதலில் கரைந்து கொண்டிருக்க ரோமோ ஜூலியஸுக்கு சவக்குழியை தயார் செய்து கொண்டிருந்தது. ஜூலியஸால் அரசு அதிகாரங்களை இழந்தவர்களும், செனட் அவையினரும் ஜூலியஸைக் கொல்ல திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். காத்திருந்து காத்திருந்து அந்த திட்டம் நிறைவேறியது. ஜூலியஸின் நண்பன் புரூட்டஸின் வஞ்சக முகத்தை ஜூலியஸ் மட்டுமல்ல உலகமே அப்போது தான் பார்த்தது. ஜூலியஸ் கொல்லப்பட்டான். 

ஜூலியஸின்  மரணம் கிளியோபாட்ராவை  உலுக்கியது. ஆனால் கற்பனை செய்து  பார்க்க முடிகிறதா? கிளியோபாட்ராவுக்கு காதல் தானே உயிர். மீண்டும் காதலில் விழுந்தாள். ஜூலியஸின் நம்பிக்கைக்குரிய வலதுகரம் மார்க் ஆண்டனிதான் அவன்.

தவித்துப் போயிருந்தவளுக்காக மார்க் ஆண்டனி முன்வந்தான். இழப்புகளுக்குப் பிறகும் காதல் தொலைந்து போய் விடுவதில்லையே..
மார்க் ஆண்டனியின் அன்பும், கிளியோபாட்ராவின் நேசமும் இருவரையும் ஒருவருக்கொருவராக மாற்றிக் காட்டியது.  ஜூலியஸுடன் முடிந்துபோன ரோம் உறவுக்கு ஆண்டனிதான் உயிரூட்டினான். 

இருவருக்குமான காதல் பலரையும் எரிச்சலடையச் செய்தது. அதில் முக்கியமானவன் அகஸ்டஸ்... தந்தை ஜூலியஸ் சீசரின் அதே ஆக்ரோஷங்களை கண்களாகக் கொண்டவன். எந்த மண்ணில் தந்தை கொல்லப்பாட்டாரோ அதே மண்ணிலிருந்து கிளம்பியவன்.
மார்க் ஆண்டனிக்கு எதிராக வாள்சுழற்றத் தயாரானான்.

ஜூலியஸுக்கு இருந்த அதே கோபங்களை தனதாக்கிக்கொண்டிருந்த அகஸ்டஸ், மார்க் ஆண்டனியை போரில் சந்தித்தான். வரலாற்றில் மிக முக்கியமான போர். வெற்றியும், தோல்வியும் களத்தில் இருப்பவனுக்கு ஒன்றுதான். ஆனால் அன்றைக்கு மார்க் ஆண்டனி அப்படி நினைத்திருக்கவில்லை. அகஸ்டஸிடம் தோற்று மண்டியிட்டவன் தன்னைத்தானே குத்திக் கொண்டு மரணித்தான். 

கிளியோபாட்ராவின் இந்தக் காதலும் குத்துயிராய் மறைந்து மடிந்தது. மார்க் ஆண்டனியின் முடிவால் ஒடிந்துபோன கிளியோபாட்ரா அடுத்த அடிக்கு தயாரானாள். காதல் பைத்தியக்கரத்தனமானதுதான். ஆனால் அதுதான் காலங்களைக் கடந்திருக்கிறது. மார்க்கின் இடத்திற்கு தானும் செல்வதாய் முடிவெடுத்து நஞ்சு கொண்ட பாம்பை கடிக்கச் செய்து மாண்டு போனாள். 

கிளியோபாட்ரா குறித்து பல கற்பனைக் கதைகள் உள்ளன. ஆனாலும் அவள் காதலித்ததும், அந்தக் கதை இவ்வளவு தூரம் பேசப்படுவதும் சாதாரணமானதும் அல்ல...

அவள் தீர்க்கமானவளாக இன்றைக்கும் வரலாறுகளில் இருப்பதற்கு காதலே காரணம்...

காதல் ஒரு பாதை...பயணித்துப் பார்த்து விடுவதே அதனை பருகும் வழி...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com