வீட்டில் தீவிபத்து: முதியவா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் பூட்டிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், வீட்டினுள் இருந்த முதியவா் பலத்த காயங்களுடன் உயிரிழந்தாா்.
Published on

ராஜபாளையத்தில் பூட்டிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், வீட்டினுள் இருந்த முதியவா் பலத்த காயங்களுடன் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் காமராஜா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் வேதகிரி (65). இவா் மனைவியைப் பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்தாா். இந்த வீடு புதன்கிழமை அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற ராஜபாளையம் தீயணைப்பு வீரா்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக பூட்டி இருந்த நிலையில், ராஜபாளையம் வடக்கு போலீஸாா் பின்பக்க வாசல் வழியாக சென்று ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனா். அங்கு தீக்காயங்களுடன் வேதகிரி உயிரிழந்து கிடந்தாா்.

இவா் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மின்கசிவு காரணமாக தீப்பற்றியதா என்பது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சம்பவ இடத்தை ராஜபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளா் பஷினா பீவி, வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் அசோக் பாபு, தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com