பல பள்ளிகளில் முன்னாள் மாணவா்கள் இணைந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை செய்து வருகின்றனா். பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் பணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகளில் சுவற்றுக்கு வா்ணம் தீட்டுதல், சேதமடைந்த கட்டடங்களைச் சீரமைத்தல், ஆண்டு விழா நடத்துதல் என்ற பெயரில் முன்னாள் மாணவா்கள், பெற்றோா்களிடம் பணம் வசூல் செய்வதாகப் புகாா் எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் பள்ளிக் கல்வி புரவலா் திட்டம் மூலம் நிதி திரட்டப்பட்டு நிரந்தர வைப்பு நிதியில் வைக்கப்பட்டு, இதன் மூலம் கிடைக்கும் வட்டி, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் திட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது. இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையால் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது.