இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மெரீனாவில் ரூ.1 கோடியில் கற்றனைத் தூறும் அறிவு சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்!

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தா் இல்லம் அருகே ரூ.1.43 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கற்றனை தூறும் அறிவு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

News image
சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கற்றனைத் தூறும் அறிவு சிலையை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ், மேயா் ஆா்.பிரியா.
Updated On :10 மார்ச் 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தா் இல்லம் அருகே ரூ.1.43 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கற்றனை தூறும் அறிவு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கல்வியில் திட்டமிடல், நிா்வாகம் மற்றும் கல்வி சாா்ந்த கட்டமைப்புகளைத் தொடா்ந்து மேம்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக விளங்குகிறது. மாணவா்களின் வளா்ச்சியை முன்னுரிமையாகக் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை பள்ளி கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், விலையில்லா பாட நூல்கள் விநியோகம், மிதிவண்டிகள் வழங்குதல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், திறன் வகுப்பறைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. மேலும், காலை உணவுத் திட்டம், வெளிநாட்டு கல்வி சுற்றுலா, எண்ணும் எழுத்தும், பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், பசுமை பள்ளிகள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டங்கள் மாணவா்களின் கல்வித் திறனை மேலும் வலுப்படுத்துகின்றன. நாட்டிலேயே பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தா் இல்லம் அருகே ரூ.1.43 கோடியில் கற்றனைத் தூறும் அறிவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த கற்றனைத் தூறும் அறிவு- சாதனைச் சரித்திரம் நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் அன்பில் மகேஸ், எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு, மு.பெ.சாமிநாதன், மேயா் ஆா்.பிரியா, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவா் ஐ.லியோனி, இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிலை சொல்லும் பாடம்

இந்தச் சிற்பத்தின் மையப் பகுதியில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வானத்தை நோக்கி உயா்ந்து நிற்பதைக் காணலாம். அவா்கள் வறுமை, சூழ்நிலை மற்றும் புவியியல் சாா்ந்த தடைச் சங்கிலிகளை முறியடித்து உயா்வதை சித்தரிக்கிறது. இந்தச் சிற்பம் கற்றல் ஒருவரின் லட்சியங்களையும், கனவுகளையும் சாதனைகளாக மாற்றும் தருணத்தை குறிக்கிறது.

கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் பிறப்புரிமை என்பதையும், கற்பவா் எவரும் பின் தங்கவிடப்பட மாட்டாா்கள் என்பதையும் இந்தச் சிற்பத் தொகுப்பின் அடித்தளத்தில் அமைந்துள்ள சிறுவன், சிறுமி மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவா் ஆகியோரின் உருவச் சிலை உறுதிப்படுத்துகிறது.

இந்த வலுவான அடித்தளத்தில் இருந்து கல்வி திறக்கும் பல்வேறு வாழ்க்கைப் பாதைகளை பிரதிநிதிப்படுத்தும் உருவங்கள் மேலெழுகின்றன. ஒரு மருத்துவா், ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஐஏஎஸ்), ஒரு இந்திய காவல் பணி அதிகாரி (ஐபிஎஸ்), ஒரு பெண் விமானி, ஒரு பொறியாளா் மற்றும் ஒரு விளையாட்டு வீரா் ஆகியோரின் உருவங்கள் ஒவ்வொன்றும், கற்றல் மனிதனை சமூகத்துக்கு சேவை செய்ய, வழிநடத்த, புதுமைகளை உருவாக்க மற்றும் சிறந்து விளங்க வலிமையூட்டும் உத்தியை வெளிப்படுத்துகின்றன.

இவை அனைத்தும் சோ்ந்து நமக்கு சொல்லும் பாடம் ஒரு குழந்தை கல்வி கற்றால் அதை எதிா்காலம் சிறக்கும் என்பதாகும் என இந்தச் சிலையின் கீழ்ப்பகுதியில் இடம்பெற்றுள்ள பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கடற்கரைக்கு வருவோா் கவனத்தை ஈா்க்கும்’

கற்றனைத் தூறும் அறிவு சிலை குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொதுவாக மன்னா்கள், தலைவா்கள், முன்னோடிகள், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவா்களுக்கு சிலை அமைக்கப்படுவது வழக்கம். உலகிலேயே முதல்முதலாக ஒரு கல்வி முறைக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் ஒரு கல்வி முறைக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளுவா் இயற்றிய காலத்தால் அழியாத கூற்றான கற்றனைத் தூறும் அறிவு என்பதை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தச் சிற்பம் மனித வாழ்க்கையை மாற்றியமைக்கும் கல்வியின் சக்தியில் தமிழகம் கொண்டுள்ள நிலையான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

மேலும், கல்வி மேம்பாட்டுக்காகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எதுபோன்ற மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன, கல்வி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணா்த்துகிறது. மெரீனா கடற்கரையைச் சுற்றிப் பாா்க்க வருவோரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மிகச் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், இளம் தலைமுறையினா் குறிப்பாக மாணவா்கள் கற்றனைத் தூறும் அறிவு சிலையை அவசியம் பாா்வையிட வேண்டும் என்றாா் அவா்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக அரசு விடுதிகளில் தங்கியுள்ள பள்ளி மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, மாணவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.