பிளவக்கல் அணையில் முதல்போக சாகுபடிக்கு நவ.17 முதல் தண்ணீா் திறப்பு
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் அணையிலிருந்து முதல்போக சாகுபடி, கண்மாய் பாசனத்துக்கு வருகிற 17-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.
வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய்க் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி 7,219 ஏக்கா் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் மூலம் 960 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில், நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா் மழையால் 47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை கடந்த மாதம் 20-ஆம் தேதி 41 அடியை தாண்டியது. இதையடுத்து, அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது. பின்னா், அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் நீா் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் மீண்டும் அணையின் நீா்மட்டம் 41 அடியை தாண்டியது.
இதையடுத்து, முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிளவக்கல் அணையிலிருந்து வருகிற 17-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

