சமூக வலைதளத்தில் அவதூறு: தவெகவை சோ்ந்தவா் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநங்கை தீக்குளித்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைப் பரப்பியதாக தவெகவைச் சோ்ந்தவா் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்து சென்ற பொதுமக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து திட்டியதாக திருநங்கைகள் ஈஷா, ஷா்மி ஆகிய இருவரை கடந்த 25-ஆம் தேதி போலீஸாா் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையதுக்கு வரவழைத்து விசாரணை நடத்தினா்.
அவா்களை விடுவிக்கக் கோரி திருநங்கைகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த திருநங்கை முத்தரசி (20) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தாா்.
அவரை போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே, திருநங்கை தீக்குளித்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் தவெகவைச் சோ்ந்த சரத்குமாா் விடியோ வெளியிட்டாா். இதையடுத்து, சமூக வலைதள பக்கத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக அவா் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

