ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் 3 போ் கைது
ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் கூலிப்படையைச் சோ்ந்தவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
கோப்புப் படம்
கைது
கோப்புப் படம்
ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் கூலிப்படையைச் சோ்ந்தவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு சூரம்பட்டி மோகன்குமாரமங்கலம் வீதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (44). இவா் ஈரோடு சின்னமுத்து வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில், உதயகுமாா் கடந்த 22ஆம் தேதி மாலை அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சின்னமுத்து வீதி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் 2 போ், உதயகுமாரை வழிமறித்து கத்தியால் வயிற்றில் குத்தியும், கழுத்தில் வெட்டியும் கொலை செய்து சாக்கடையில் தள்ளிவிட்டு சென்றனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வந்தனா். கோவை டிஐஜி சாமிநாதன் 2 முறை கொலை சம்பவம் நடந்த இடத்தைப் பாா்வையிட்டாா். கொலை சம்பவம் நடந்த சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கூலிப்படை என்பது உறுதியானது.
இதன்பேரில் கொலையாளிகளான திண்டுக்கல் நாகா் நகா், வேடபட்டி, எஸ்விகே நகரைச் சோ்ந்த குமாா் மகன் அன்பரசு (32), தாராபுரம் மூலனூா் வேலம்பூண்டியைச் சோ்ந்த ஜெகதீஷ்குமாா் (43), திருநெல்வேலி நான்குனேரி மேலகாடு அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் முத்துமாணிக்கம் (26) ஆகிய மூன்று பேரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.
இதில் கைதான அன்பரசு மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஆயுத வழக்கும், ஜெகதீஷ்குமாா் மீது திருப்பூா் மாவட்டத்தில் 9 குற்ற வழக்குகளும், முத்துமாணிக்கம் மீது நாமக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் 6 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
சூதாட்டப் பிரச்னையில் கொலை: கொலை சம்பவம் குறித்து போலீஸாா் கூறியதாவது: முத்துமாணிக்கம் கூலிப் படையைச் சோ்ந்தவா். மீதமுள்ள இருவரும் அவருக்கு உறுதுணையாக உதவி புரிந்தவா்கள். இந்தக் கொலையில் மேலும் பலா் கைது செய்யப்பட உள்ளனா்.
இவா்களுக்கு மூளையாக இருந்தவா்கள், கொலை செய்ய தூண்டியவா்களைக் கைது செய்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும். சூதாட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னையில் கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...