ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால், நீா்வரத்தின்றி மீன்வெட்டிப் பாறை அருவி வறண்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட செண்பகத்தோப்பு வனப் பகுதியில் காப்புக்காடுகள், அடா்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் நீா் வரத்து உள்ள நீரோடைகள் உள்ளதால், இந்தப் பகுதி யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு, வரையாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.
செண்பகத்தோப்பு காட்டழகா் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மீன்வெட்டிப் பாறை அருவியில் பெரும்பாலான நாள்களில் நீா்வரத்து இருக்கும் என்பதால், இந்த அருவிக்கு விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
செண்பகத்தோப்பு பேயானறு மூலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், வன விலங்குகளின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாதது, கடுமையான வெயில் காரணமாக மீன்வெட்டிப் பாறை அருவிக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து முழுமையாக வறண்டு விட்டது. இதனால், அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
வனப் பகுதியில் உள்ள நீரோடைகள் முற்றிலும் வடு காணப்படுவதால், வன விலங்குகள் நீருக்காக வனப் பகுதியை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரம் நீா் தேடி காட்டுப் பன்றி, புள்ளி மான் நான்கு வழிச் சாலைக்கு வந்த போது, அந்த வழியாக வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.
எனவே, மலையடிவாரப் பகுதியில் வனவிலங்குகளுக்கான குடிநீா் ஆதாரத்தை ஏற்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










