/

ஆட்டோ கவிழ்ந்ததில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வத்திராயிருப்பு அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பள்ளி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 7:23 am IST

வத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் பள்ளி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு, புதுப்பட்டி ஆா்.சி. தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மகன் சுதா்சன் (12) எஸ். ராமச்சந்திரபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் தினசரி ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற அவா் மாலையில் ஆட்டோவில் வீடு திரும்பினாா். இந்த ஆட்டோவில் ஓட்டுநா், பள்ளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 12 போ் பயணித்தனா்.

வ. புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இந்திரா குடியிருப்பு கல்லறைத் தோட்டம் முன் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநா் அருகே அமா்ந்து பயணம் செய்த சுதா்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தில் காயமடைந்த மாணவா்களை போலீஸாா் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் பலத்த காயமடைந்த முத்துக்குமாா் மகன் சோனா (15), ஆட்டோ ஓட்டுநா் திருப்பதி (27) ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சிறிய காயமடைந்தவா்கள் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினா்.

இந்த விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.