

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடங்கி பிரதமர் நரேந்திர மோடி உள்பட பெரும் பிரபலங்கள் பலரின் பெயர்கள் வரை உலகையே உலுக்கிக்கொண்டிருக்கின்றன எப்ஸ்டீன் ஃபைல்ஸ் (கோப்புகள்)!
அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தண்டனையாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவர் தற்கொலை செய்துகொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், எப்ஸ்டீனுக்கும் டிரம்ப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், அதுபற்றிய ரகசியம் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக எப்ஸ்டீன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பின.
இந்த நிலையில், எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அமெரிக்காவில் கோரிக்கை வலுத்தது.
தொடர் அழுத்தத்தை அடுத்து, ”எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தை” அமெரிக்க நாடாளுமன்றம் கடந்தாண்டு நவம்பரில் நிறைவேற்றியது.
இதனை அடுத்து, கடந்தாண்டு இறுதியில் முதல்கட்டமாக எப்ஸ்டீன் கோப்புகளை (மின்னஞ்சல்கள், விடியோக்கள்) அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஜன. 30 ஆம் தேதி சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில், 2,000 விடியோக்களும், 1.8 லட்சம் புகைப்படங்களும் அடங்கும். பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்பட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 25 ஆண்டுகளுக்கு முன்பு, நியூ ஜெர்சியில் 13 - 14 வயதுடைய சிறுமியிடம் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக எப்ஸ்டீன் கோப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழி எஃப்பிஐ விசாரணையில் அளித்த வாக்குமூலத்தில், பாலியல் ரீதியாக தனது தோழிக்குத் தொல்லை அளித்து முறையற்ற உறவுகொள்ளத் தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால், டிரம்ப்பின் * * * தனது தோழி கடித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, தனது தோழி சிரித்ததால் அவர் முகத்தில் தாக்கப்பட்டதாகவும், எப்ஸ்டீனும் தோழியைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த மற்றொரு வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது:
”குழந்தைகளை விற்பனை செய்வதற்காக மரலோகாவில் நடத்தப்பட்ட ஒரு விருந்துக்கு எப்ஸ்டீன் அழைத்து வந்தார். அந்த விருந்தில் பெண் குழந்தைகளை 'முற்றிலும் தகாத அருவருப்பான முறையில்' டிரம்பே மதிப்பிட்டார்.
இந்த விருந்தில் எலான் மஸ்க் மற்றும் வயதான பலர் கலந்துகொண்டனர். ஜூனியர் டிரம்ப், இவான்கா டிரம்ப், எரிக் டிரம்ப் உள்ளிட்டோரும் இருந்தனர். பின்னர், எங்களை அறைக்கு அழைத்துச் சென்று தகாத பாலியல் உறவுக்கு ஒத்துழைக்க கட்டாயப்படுத்தப்பட்டோம். பின்னர், டிரம்ப் என்னுடன் வல்லுறவு கொண்டார். அப்போது எனக்கு வயது 13. எப்ஸ்டீனின் நண்பர் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லும் உடனிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்ப்பின் பெயர் 3,000-க்கும் அதிகமான முறை இடம்பெற்றிருப்பதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், 18 வயதுக்குள்பட்ட சிறுவனிடம் பாலுறவு கொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஜூலை 18 எப்ஸ்டீன் மின்னஞ்சலில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ரஷிய பெண் ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதால் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டதாகவும், குணப்படுத்தும் மருந்தைத் தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பெயர்
எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 9, 2017 தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், “இந்திய பிரதமர் மோடி ஆலோசனை பெற்றார், இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்காகத் தேவையான எல்லாவற்றையும் (டேன்ஸ்ட் அன்ட் சாங்ட் - danced and sanged) செய்தார். அது நல்ல பலனளித்தது” என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மின்னஞ்சலை எப்ஸ்டீன் அனுப்பியதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக, அதாவது ஜூலை 4 - 6 வரை இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக, 2017 ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பைச் சந்தித்திருந்தார்.
மேலும், 2017 மார்ச் 16 அன்று எப்ஸ்டீனுக்கு தொழிலதிபர் அனில் அம்பானி அனுப்பிய செய்தியில், அதிபர் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, கடந்த 2014 டிசம்பர் மாதத்தில், எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய செய்தியும் வெளியாகியுள்ளது.
அதில், ”உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்” என்று ஹர்தீப் சிங் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கேள்வி
"குழந்தைகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு இருக்கும் ஆழமான மற்றும் நீண்டகாலத் தொடர்பு தெளிவாகியுள்ளது. இது இந்தியாவுக்கு அவமானகரமானது.
இது தேசத்தின் கண்ணியம் மற்றும் சர்வதேச அளவிலான நமது நற்பெயர் தொடர்பான விஷயம்.
1. பிரதமர் நரேந்திர மோடி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன மாதிரியான ஆலோசனைகளைப் பெற்றார்?
2. மோடியின் இஸ்ரேல் பயணத்தின் மூலம் டிரம்ப்புக்கு என்ன நன்மை கிடைத்தது?
3. அது பலனளித்தது! என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்ததன் பொருள் என்ன?
இந்த கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது” என்று எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர் இடம்பெற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கும் மத்திய அரசு, “2017 ஜூலையில் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தைத் தவிர, மின்னஞ்சல் உரையாடலில் உள்ள அனைத்தும் வதந்தியைவிட மிகவும் மோசமானவை. அவற்றைப் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் வேண்டுமென்றும், நாடாளுமன்றத்தில் விவாதித்து பிரதமர் மோடி அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில் யார் யார் பெயர்களோ இடம் பெற்றிருக்கின்றன. டிரம்ப்க்கு எதிரான மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து டிரம்ப் என்ன செய்யப் போகிறார்? பிரதமர் மோடி என்ன சொல்வார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.