வாஸ்து: வாஸ்து சாஸ்திரமும் ஐடி நெருக்கடியும்!
மிக அழகான வீடு ஒன்றைக் கட்டியிருப்பார்கள். சிறிதுநாள் கழித்துப் பார்த்தால் அந்த வீட்டின் ஒரு பகுதியை இடித்துக் கொண்டிருப்பார்கள். என்ன என்று கேட்டால், வாஸ்துப்படி திருத்தி அமைக்கிறோம் என்பார்கள். சிலர


மிக அழகான வீடு ஒன்றைக் கட்டியிருப்பார்கள். சிறிதுநாள் கழித்துப் பார்த்தால் அந்த வீட்டின் ஒரு பகுதியை இடித்துக் கொண்டிருப்பார்கள். என்ன என்று கேட்டால், வாஸ்துப்படி திருத்தி அமைக்கிறோம் என்பார்கள். சிலர் வீடு கட்ட ஆரம்பிக்கும்போதே வாஸ்து நிபுணரை கலந்து ஆலோசித்து வீடு கட்டுவார்கள். எந்த இடத்தில் தண்ணீருக்காக ஆழ்குழாய் அமைப்பது, எந்த இடத்தில் சமையலறை கட்டுவது என்றெல்லாம் வாஸ்து நிபுணர்கள் சொல்லித் தருவார்கள்.
வீடுகளுக்கு மட்டுமில்லை, தொழிற்சாலைகளையும் வாஸ்து சாஸ்திரப்படி எவ்வாறு அமைப்பது? என்று ஆலோசனை தருகிறார் வாஸ்து சாஸ்திர நிபுணர் மகேஷ் வர்மா. இதற்காக இந்தியாவின் பல இடங்களுக்கு அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறார் அவர்.
வாஸ்து சாஸ்திரம் நவீன அறிவியலோடு பொருந்திப் போகும் ஒன்று என்று கூறுகிறார் மகேஷ் வர்மா.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சோதிடம், எண்கணிதம், வாஸ்து போன்றவற்றில் அனுபவமிக்கவரான அவரை சென்னை செüகார்பேட்டையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
வாஸ்து சாஸ்திரம் விஞ்ஞானத்துக்குப் பொருத்தமானது என்று எப்படிக் கூறுகிறீர்கள்?
வாஸ்து என்று சொன்னால் அதை மூடநம்பிக்கை என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். உண்மையில் வாஸ்து சாஸ்திரம் நமது முன்னோர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததன் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று.
வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டின் சமையலறை அக்னிமூலையில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அக்னிமூலையில் அமைக்காமல் வீட்டின் நடுவில் சமையலறையை அமைத்தால் என்ன ஆகும்? சமையல் வாசனை, சமையல் அறையில் இருந்து வரும் புகை எல்லாமும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே போகாது. அதைச் சுவாசிப்பவர்களுக்கு சுவாச நோய்கள் உண்டாகும். மேலும் வீட்டின் நடுப்பாகத்தில் சமையலறை இருந்தால் எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டால் வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வரமுடியாமல் தீ விபத்தில் சிக்கிக் கொள்வார்கள். இதையெல்லாம் யோசித்துத்தான் வீட்டின் சமையலறை இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.
சமையலறை கிழக்குப் பாகத்தில் அமைக்கப்படும்போது நல்ல சூரிய வெளிச்சம் வரும். காற்று வரும். புகையை வெளியே அடித்துக் கொண்டு போகும்.
அதுபோல ஈசான மூலையில் தண்ணீர் இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்வார்கள். ஆழ்குழாய், கிணறு போன்றவற்றை அந்த இடத்தில் அமைப்பது நல்லது. வீட்டின் தென்மேற்கு மூலையைக் கழிவுகள் போடும் இடமாக அமைக்க வேண்டும் என்று வாஸ்து சொல்கிறது. ஈசானமூலை இருக்கும் இடத்துக்கு எதிர்ப்புறத்தில் தென்மேற்கு அமைகிறது. கழிவுகளும் தண்ணீரும் ஒரே இடத்தில் இருந்தால் வியாதி பரவும் அல்லவா? அதற்காகத்தான் வேறு இடத்தில் கழிவுகளைப் போடும் இந்த ஏற்பாடு.
வீடுகளுக்கு மட்டும் இல்லை. தொழிற்சாலைகளுக்கும் கூட இந்த வாஸ்து பொருந்தும். தண்ணீர் உள்ள பகுதியும், கழிவுகள் செல்லும் பகுதியும் ஒரே இடத்தில் இருந்தால் என்ன ஆகும்? தொழிற்சாலைக் கழிவுகளில் பல ரசாயனப் பொருள்களாகவும் கூட இருக்கலாம்.
அவை நிலத்தடி நீரில் கலந்தால் அதைப் பயன்படுத்தும் மனிதர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே வாஸ்து முறைப்படி அமைத்தால் தொழிற்சாலைக் கழிவுகள் செல்லும் பகுதியும், தண்ணீர் இருக்கும் பகுதியும் வேறு வேறு இடத்தில் இருக்கும்.
வீட்டில் ஜன்னல்களை கிழக்குப் பகுதியில் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அதிலும் கீழ்த்தளத்தில் அதிக ஜன்னல்களும், மேல் மாடியில் அதைவிடக் குறைந்த ஜன்னல்களும் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. ஜன்னல்கள் வழியாக காலையில் சூரிய வெளிச்சம வீட்டுக்குள் வரும்.
அதனால் புழு,பூச்சிகள், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிந்துவிடும். வடகிழக்குப் பகுதியில் இருந்து வரும் காற்று வீட்டுக்குள் புகுந்து சுற்றிவரும். காற்றோட்டமாக இருக்கவும், வியாதிகள் வராமல் தடுக்கவும்தான் கிழக்குப் பகுதியில் ஜன்னல்கள் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
வீட்டின் கீழ்த்தளத்தில் காற்று குறைவாக வீசும். எனவே அதிக ஜன்னல்கள் வைக்க வேண்டும். மேலே செல்லச் செல்ல காற்று அதிமாக வீசும். எனவே குறைவான ஜன்னல்கள் போதும்.
தொழிற்சாலையின் மெயின் வாசல் வடகிழக்கில் இருந்தால் நல்லது. ஏனென்றால் நல்ல காற்று நிறைய வரும். அதனால் தொழிற்சாலையின் வடபாகத்தைக் காலியாக விட வேண்டும். அதில் குப்பைகளைப் போடக் கூடாது. போட்டால் அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு தொழிற்சாலைக்குள் கொண்டுவந்துவிடும்.
தொழிற்சாலையின் தென்கிழக்குப் பாகத்தில் புகைக் கூண்டு அமைத்தால் புகைக்கூண்டிலிருந்து வெளிவரும் புகை தொழிற்சாலைக்குள் வராது. காரணம் வடகிழக்கில் பகுதியில் இருந்தே காற்று வீசுகிறது. அதனால் புகை வேறு பகுதிக்குச் சென்றுவிடும். சில தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கான குடியிருப்பு தொழிற்சாலைக்குள்ளேயே இருக்கும்.
அந்தக் குடியிருப்புகளை வடமேற்குப் பகுதியில் அமைப்பது நல்லது. வடமேற்குப் பகுதி சந்திரனைச் சார்ந்தது. அதனால் மன அமைதி ஏற்படும் என்று வாஸ்து சொல்கிறது. உண்மையில் அந்தப் பகுதியில் தொழிற்சாலைப் பணியாளர்கள் குடியிருந்தால் தொழிற்சாலைக் கழிவுப் பொருட்களோ, புகையோ அவர்களைப் பாதிக்காது.
தொழிற்சாலையின் மேற்கூரையில் விழும் மழைத் தண்ணீர் கிழக்கு அல்லது மேற்குப் பக்கம் இறங்கும்படி அமைக்க வேண்டும். தென்மேற்கில் இறங்கும்படி அமைத்தால் அங்குள்ள குப்பை, கழிவுப் பொருட்களுடன் மழைத் தண்ணீர் கலந்து பல தீய விளைவுகளை உருவாக்கும்.
இப்படி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் பல விஷயங்கள் இன்றைய நவீன வாழ்க்கைக்குப் பொருந்தும் விதத்தில் உள்ளன.
நவீன வாழ்க்கைக்குப் பொருந்தும்விதத்தில் இருக்கின்றன என்கிறீர்கள். ஆனால் நெரிசலான நகர்ப்புறங்களில் வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளைக் கட்ட முடியாதே?
நகரத்தில் ஒரு வீட்டையோ, தொழிற்சாலையையோ முழுக்க முழுக்க வாஸ்து சாஸ்திரத்தின்படி அமைப்பது சிரமம். நகரத்தின் நெரிசலான தெருக்களில் ஒரு வீடும் இன்னொரு வீடும் ஒட்டிக் கொண்டு இருக்கும். கிழக்குப் பக்கத்தில் ஜன்னல்களே வைக்க முடியாது. வாஸ்து சாஸ்திரம் சொல்லிய பலவற்றைக் கடைப்பிடிக்க முடியாது.
அதிலும் ஏற்கனவே கட்டி முடித்த வீட்டை ஒன்றும் செய்ய முடியாது. நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வாஸ்து சாஸ்திரப்படி சில திருத்தங்களை வேண்டுமானால் செய்யலாம். முழுக்க முழுக்க வாஸ்து சாஸ்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் பங்களாதான் கட்ட வேண்டும்.
ஆனால் நகரத்தின் மையமான பகுதியில் கூட புதிதாக வீட்டையோ அல்லது 50 - 100 ஃபிளாட்களையோ கட்ட வேண்டும் என்றால் வாஸ்து சாஸ்திரத்தைக் கடைப்பிடித்துக் கட்ட முடியும். ஆனால் பூமி முழுவதையும் பயன்படுத்தி வீடு கட்ட முடியாது. தேவையான அளவுக்குக் காலி இடம் விட்டு வீடு கட்டினால் 80 சதவீதம் வரை வாஸ்து சாஸ்திரத்தின்படி கட்டலாம்.
ஒரு தொழில் நல்லமுறையில் நடப்பதற்கும், நலிவடைவதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தற்போது ஐடி தொழில் நலிவுக்குக் காரணம், உலக அளவிலான பொருளாதார நெருக்கடி. அப்படியிருக்க வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ நன்றாக இயங்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?
வாஸ்து சாஸ்திரத்தின்படி அமைக்கப்பட்ட தொழிலகங்கள் கூட சரிவர இயங்க முடியாதநிலை ஏற்படுவதுண்டு. ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். பொதுவான சூழ்நிலைக்கு உட்பட்டே எல்லாரும் செயல்பட முடியும். உதாரணமாக ஐடி தொழிலுக்கான வாய்ப்பு உலக அளவில் குறைந்துவிட்டது என்றால் நமது நாட்டிலும் பல தொழிலகங்கள் நஷ்டம் அடையும்.
இழுத்து மூடக் கூடிய நிலையும் ஏற்படலாம். அதில் பல வாஸ்து சாஸ்திரத்தின்படி அமைக்கப்பட்ட தொழிலகங்களாகக் கூட இருக்கலாம். இங்கே இன்னொன்றையும் பார்க்க வேண்டும். என்னதான் உலகம் முழுதும் பாதிப்பு இருந்தாலும் சில ஐடி நிறுவனங்கள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இயங்கிக் கொண்டுதானே இருக்கின்றன? அதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்?
அனுபவப்பூர்வமாக உண்மையாக இருக்கும் பல விஷயங்களை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிப்பது எல்லாச் சமயங்களிலும் முடியாது. வாஸ்து, சோதிடம் போன்றவையும் இதில் சேர்ந்ததே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...