ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் : எளிதில் செரிக்கும் பச்சைப் பயறு!

புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் : எளிதில் செரிக்கும் பச்சைப் பயறு!
Updated on
2 min read

ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பச்சைப் பயறு பெரும் பங்கு வகிப்பதாக கேரள தேசத்தில் பொதுவாக நம்பப்படுகிறது. முழுப் பச்சைப் பயறு பற்றி குறிப்புகள் ஏதேனும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

 மனோகரன், திருநெல்வேலி.

 புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் ஜீரணமாவதும், வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும்தான் காரணம். பயறு அறுவடையாகி ஆறுமாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும். கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு, அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து, உபயோகிக்க மிக எளிதில் ஜீரணமாகக் கூடியது.

 நீர்த்த கஞ்சி, குழைந்த கஞ்சி, பாயசம், வேகவைத்த பருப்பு, துவையல், ஊறவைத்து, வறுத்து, உப்பு, காரமிட்ட பயறு, சுண்டல், கறிகாய்களுடன் சேர்த்து அரைகுறையாக வெந்த கோசுமலி, பொங்கல் எனப் பலவகைகளில் உணவுப் பொருளாக இது சேர்கிறது.

 பயறு பல வகைப்படும். பாசிப் பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு என்று. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்ற பெயரில் குறிப்பிடப்படுபவையாயினும், வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப் பயிறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.

 பச்சைப் பயறு இரண்டுவிதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சை தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாட்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சை தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றேறக்குறைய ஒரே குணமுள்ளவைதான்.

 பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.

 பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும். உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின், பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும். பச்சைப் பயிரை வேக வைத்து, கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.

 தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது, இது அதிகம் உதவுகின்றது. இதன் மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி, தாய்ப்பால் தரும் மாதரின் மார்பில் பற்றிட பால்க்கட்டு குறைந்து, வீக்கம் குறையும். மார்பின் நெறிக் கட்டிகளும் குறையும்.

 இவ்வாறு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பச்சைப் பயறு பெரும் பங்கு வகிப்பதாக கேரளத்தில் நம்புவதுபோல, தமிழகத்திலும் பயறின் மகத்துவத்தை நாமும் உணர்ந்து அதைப் பயன்படுத்தத் துவங்குவோம்.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com