ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பனிக்காலத்துப் பசி!

பனிக்காலத்தில் எனக்குப் பசி அதிகமாக எடுக்கிறது. இது எதனால்? எப்படிப் பசியைச் சமாளிப்பது? உடற்பயிற்சி செய்யலாமா? பனிக்காலத்தில் தோலில் ஏற்படும் வெடிப்பு மாற வழி என்ன? முரளிகுமார், கம்பம். பனிக்காலத்தில
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பனிக்காலத்துப் பசி!
Updated on
1 min read

பனிக்காலத்தில் எனக்குப் பசி அதிகமாக எடுக்கிறது. இது எதனால்? எப்படிப் பசியைச் சமாளிப்பது? உடற்பயிற்சி செய்யலாமா? பனிக்காலத்தில் தோலில் ஏற்படும் வெடிப்பு மாற வழி என்ன?

முரளிகுமார், கம்பம்.

பனிக்காலத்தில் வெளியில் எங்கும் குளிர்ச்சி அதிகமாயிருப்பதால் உடலின் இயற்கையான சூடானது வெளியேற முடியாமல் உள்நோக்கிச் சென்று பாசகபித்தம் எனும் பசித்தீயை உள்ளடக்கிய பித்தம் சூடாகிவிடுகிறது. குடலின் உட்பகுதிகளில் வாயுவும் தங்கிவிடுவதால், கனன்று கொண்டிருக்கும் நெருப்பை மேலும் தூண்டிவிடுகிறது. அதனால்தான் உங்களுக்குப் பசி அதிகமாக எடுக்கிறது. இந்தப் பசியைச் சமாளிக்கத் தெரியாவிட்டால் அதுவே அல்சர் என்ற உபாதையைத் தோற்றுவிக்கக் கூடும். அதனால் இந்த அகோரப் பசியைச் சமாளிக்க இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகள் மிகுந்துள்ள நெய், வெண்ணெய், பால், தயிர், எண்ணெய் நெய்ப்புடன் கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும். மாமிச உணவு சாப்பிடுபவர்கள் தாராளமாய் இந்த பனிக்காலத்தில் புசிப்பது நல்லதே. மாமிசம் சாப்பிடாதவர்கள் உளுந்து, மொச்சை, பயிறு, கொத்துக்கடலை போன்றவற்றை ஊற வைத்து முளைக்கட்டி தேங்காய் வெல்லம் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால் போதுமானது. பூரண குணம் கிடைக்கும்.

இந்தக் காலத்தில் திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்வது கஷ்டமாக இருந்தாலும், வீட்டின் உள்ளேயே அவசியம் உடற்பயிற்சி அதிகமாய்ச் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் ரத்த ஓட்டத்தில் குறைவு ஏற்பட்டு, முடக்கு வாயுப் பிடிப்பு போன்றவை மூட்டுகளில் ஏற்படக்கூடும்.

பனியின் வறட்சியினால் இயற்கையாகவே மேல் தோலில் வறட்சி, வெடிப்புகள் உண்டாகும். இவற்றைக் குறைக்க க்ஷீரபலா தை லம், பலா சுவகந்தாதி தைலம் போன்ற வாத தோஷத்தைக் குறைக்கும் மூலிகைத் தைலங்களைச் சிறிது சுடவைத்து அவசியம் தினமும் உடலில் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். பனிக்காலத்தில் மட்டும் கடுகு எண்ணெய்யை மேலுக்கு மட்டும் தடவி சிறிது ஊறியதும் குளிப்பது மிக நல்லது. இந்த எண்ணெய்யைச் சுட வைக்காமல் தடவிய உடனேயே தோலில் குளிர்ச்சி குறைந்து சூடு தெரியும்.

தோல் வறண்டு விடாமல் இருக்க கைகால் கழுவ வெந்நீர் உபயோகித்தல், வெய்யிலில் சிறிதுநேரம் உட்காருதல், இரவில் தரையில் படுக்காமல், கட்டிலில் படுத்து கம்பளிப் போர்வையினால் போர்த்திப் படுக்க வேண்டும். பகலில் படுத்துத் தூங்கினால் கபம் எனும் தோஷம் வளர்ந்து, தலை மற்றும் மார்புப் பகுதிகளில் உறைந்துவிடும். நெஞ்சு மற்றும் தலைபாரம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பகல் தூக்கம் தவிர்ப்பது நல்லது.

உடலில் எல்லாத் தாதுக்களும் புஷ்டி பலம் நிறைந்துள்ள பனிக்காலத்தில் கருத்தடை முறைகளைக் கையாளாமல் இருப்பது விசேஷம்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com