வெளிமாநிலங்களில் இருந்து மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்றுவிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன். பலர் நல்ல நிலையில் குணமடைந்துள்ளனர். பதினைந்து வருடங்கள் கழித்து ஒருவர் கர்நாடகாவில் உள்ள அவருடைய உறவினருடன் சேர்த்துவைத்துள்ளேன். சற்று குணமடைந்து வருபவர்களை பூங்கா, கோயில், சினிமா, பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வேன். இலவச மருத்துவ முகாம்களுக்கு அழைத்துச் செல்வேன். நோய்வாய்ப்பட்டு சாலையில் கிடப்பவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்து அவர்களை நானே சென்று கவனித்துக் கொள்வேன். மிகவும் வயதான நிலையில் இறந்தபோன இருபத்தைந்து பேரை காவல்துறைக்கு தகவல் கொடுத்து முறைப்படி அடக்கம் செய்துள்ளேன். எனது தந்தை பழனிசாமி ஒரு பாத்திர வியாபாரி. காலில் செருப்புக்கூட போடாமல் அந்தக் காசை மிச்சம் பிடித்து அடுத்தவர்களுக்கு செலவு செய்து மகிழ்பவர். என்னைப் பாராட்டி ஊக்கம் கொடுப்பார். எனது மனைவி கலைச்செல்வி இது போன்ற விஷயங்களில் கொஞ்சம் சங்கோஜப்படுபவர். தற்போது அவரும் என்னைப் புரிந்துகொண்டார். எந்தவித எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. என்ன செய்வது? எல்லோருக்கும் மனநிலை ஒரே மாதிரி இல்லை.