""நான் சின்னப் பையனாக இருந்தபோதே பிறருக்கு உதவும் பழக்கம் எனக்கிருந்தது. என் கூடப் படிக்கும் பையன்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா போன்றவற்றை வாங்கிக் கொடுப்பேன். இந்த உதவும் மனப்பான்மைக்கு என் அம்மாதான் காரணம். அம்மா மிகவும் பக்தியுடையவர். தெருவில் யாராவது சாமியாரைப் பார்த்தால்போதும், அவரை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு போடுவார். அதைப் பார்த்துப் பார்த்து எனக்கும் பிறருக்கு உதவுவதற்கு ஆர்வம் வந்துவிட்டது. அன்பாலயா தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த கல்யாணி அம்மாள் தனது தள்ளாத வயதிலும் தன் வயதுள்ள முதிய பெண்களுக்கு இலவசமாக உணவு அளித்து வந்தார். அது என்னைக் கவர்ந்தது. அப்போதே நானும் என்னால் முடிந்த உதவிகளை அவருக்குச் செய்து வந்தேன். அவர் இறந்த பிறகு ஆதரவில்லாமல் நின்ற அந்த முதியவர்களுக்குத் தொடர்ந்து உணவளித்து வருகிறேன். ஏனென்றால் பிறர் பசியோடு இருப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு மட்டுமின்றி, தெருவில் செல்லும் மனநிலை சரியில்லாதவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தினம்தோறும் உணவைப் பொட்டலங்களாகக் கட்டி வழங்குகிறோம். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் தர முடிகிறது'' என்கிறார் வருத்தத்துடன்.