பணத்தை விரும்பாதவர்!
சத்யஜித் ரேயின் மனைவி பிஜோயா ரே, தன் கணவரைப் பற்றி சொல்கிறார்: உங்களுடைய வாழ்க்கை முழுவதும் தோழனாகவும் நண்பனாகவும் அன்புக்குரிய கணவனாகவும் வாழ்ந்து வந்த ஒருவரை இழந்துவிட்டால் அதன் பின்னர் வாழும் வாழ்க


சத்யஜித் ரேயின் மனைவி பிஜோயா ரே,
தன் கணவரைப் பற்றி சொல்கிறார்:
உங்களுடைய வாழ்க்கை முழுவதும் தோழனாகவும் நண்பனாகவும் அன்புக்குரிய கணவனாகவும் வாழ்ந்து வந்த ஒருவரை இழந்துவிட்டால் அதன் பின்னர் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.
நானும் மானிக்கும் (சத்யஜித்ரே) ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஒருவகையில் அவர் என்னுடைய உறவினரும் கூட. பாட்னாவில் என் தந்தை பாரிஸ்டராக வாழ்ந்தபோது ஆதர்ச தம்பதிகளான என் பெற்றோர்களுடனும் மூன்று மூத்த சகோதரிகளுடனும் என் குழந்தைப் பருவம் கழிந்தது. கொல்கத்தாவில் உள்ள என் தந்தையின் உறவினர் வீட்டிற்கு ஆண்டுதோறும் இருமுறை சென்று தங்குவோம். எனக்கு மாமா உறவான அவரது வீட்டில் தந்தையை இழந்த மானிக் அவரது தாயுடன் தங்கியிருந்தார். அவரைவிட சில வயது மூத்தவளான நான் அவரிடம் வேலை வாங்குவேன். ஒல்லியாக இருந்த அவரை கேலி செய்வேன். அதை அவர் பொருட்படுத்தமாட்டார்.
1931-ம் ஆண்டில் என் தந்தை காலமானாவுடன், எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் என் பெற்றோர்கள் செலழித்ததன் காரணமாக பொருளாதாரச் சரிவை சந்தித்தோம். எங்களைக் கொல்கத்தா அழைத்து வந்த மாமா, எவ்விதக் கவலையுமின்றி முழுமையாகக் கவனித்துக் கொண்டார். நானும் மானிக்கும் நண்பர்களானோம். எங்களிருவருக்கும் மேற்கத்திய இசையில் ஈடுபாடு இருந்தது. மானிக் தன்னிடமிருந்த சிறிய கிராமபோனில் பிரபலமான மேற்கத்திய இசைத்தட்டுகளைப் போட்டு ரசித்துக் கேட்பார்.
அப்போதுதான் நாங்கள் ஒருவரையொருவர் காதலிப்பதாக உணர்ந்தோம். ஆனால் உறவுமுறை சரியில்லாததால், திருமணம் செய்துகொள்ள முடியாதென்பதை உணர்ந்து தனித்தனியாகவே இருந்தோம். தோழமை உணர்வுடன் திரைப்படங்களுக்கு ஒன்றாகச் செல்வோம். எங்களிருவருக்குமே ஹாலிவுட் திரைப்பட இசை மிகவும் பிடிக்கும். நான் பாடும்போது மானிக் விசில் சத்தமெழுப்பி இசை சேர்ப்பார்.
பட்டப்படிப்பு முடிந்தவுடன் அவரது தாயின் விருப்பப்படி மானிக், சாந்தி நிகேதனுக்குப் புறப்பட்டார். நாங்களிருவரும் தினமும் அன்பை வெளிப்படுத்தி கடிதங்களை எழுதிக் கொள்வோம். என்னுடைய மாமா வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என்றும், என்னுடைய கால்கள் மீதுதான் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதை உணர்ந்திருந்தேன். சம்பளம் குறைவாக இருந்தாலும் பள்ளி ஆசிரியை வேலை கிடைத்தது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததால் என் மாமா மூலம் விநியோகத்துறையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது.
தாகூர் இறந்த பின்பும் ஓராண்டு காலம் சாந்திநிகேதனில் தங்கியிருந்த மானிக், பின்னர் கொல்கத்தா திரும்பினார். ஓவியத்தை தொழிலாக ஏற்க விரும்பவில்லை என்றாலும், முன்னணி விளம்பர நிறுவனமான கெய்மரில் விஷூவலைசராகச் சேர்ந்தார். ஆரம்ப காலத்தில் சம்பளம் குறைவு என்றாலும் அவர் ஆர்ட் டைரக்டராக உயர்ந்தவுடன் மாதம் இரண்டாயிரம் ரூபாய் ஊதியம் பெற்றார். அந்த நாளில் அது மிக உயர்ந்த ஊதியமாகும்.
சாந்திநிகேதனிலிருந்து அவர் திரும்பியவுடன் நான் சினிமாவில் சேர விரும்பியதால் மும்பைக்குப் புறப்பட்டேன். என்னுடைய மாமாவும் அத்தையும் சம்மதிக்கவில்லை. உன்னுடைய படங்கள் தோல்வியடைந்தால் பிறகு என்ன செய்யப்போகிறாய்? என்று மானிக் கேட்டதோடு, என்னுடைய பயணத்திற்கு முடிந்தவரை தடை போட நினைத்தார். இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்தேன். மானிக் சொன்னது உண்மையாயிற்று. முதல் படம் ஓரளவு போனாலும் இரண்டாவது படம் வந்த சுவடு தெரியாமல் ஓடிவிட்டது.
ஆண்டுக்கு இருமுறை மானிக் மும்பை வந்து செல்வார். 1948-ஆம் ஆண்டு எங்களைப் பொருத்தவரை முக்கியமான ஆண்டாகும். எங்களது உறவை பலப்படுத்த வேண்டுமென்று அவர் விரும்புவதை உணர்ந்தேன். அப்போது நாங்கள் தனிமையில் இருந்தோம். அம்மாவுக்குத் தெரியாமல் முடிந்தால் விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினார்.
1948-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி என் மாமாவின் சகோதரரின் மகள் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். 1949-ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் எங்கள் திருமணத்தை அவரது அம்மா ஏற்றுக்கொண்டதாக மானிக் எழுதிய கடிதம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கொல்கத்தா திரும்பியவுடன் மார்ச் 3-ஆம் தேதி குடும்ப சம்பிரதாயப்படி அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டோம். அது ஒரு அழகான திருமணம்.
அதன் பின்னர் பெரிய பிளாட் ஒன்றுக்கு மானிக் மாறினார். 1950- ஆம் ஆண்டு அவரது கம்பெனி அவரை ஆறுமாத காலத்திற்கு லண்டனுக்கு அனுப்பியது. நானும் அவருடன் சென்றேன். அனைத்துச் செலவுகளையும் கம்பெனி ஏற்றுக்கொண்டது.
ஹாலிவுட் சினிமாவைப் பற்றி ஆர்வம் காட்டிவந்த எங்களுக்கு உலக சினிமா மீது ஆர்வம் அதிகமாயிற்று. பெர்க்மன், குரேசவா, ரெய்னர், டெஸிகா போன்றவர்களின் படங்கள் அவரை பெரிதும் கவர்ந்தன. "பைசைக்கிள் தீவ்ஸ்' போன்ற படங்களை இந்தியாவிலும் தயாரிக்க முடியுமென நினைத்தார்.
படத்தயாரிப்புக்கான செலவு குறைவாக இருந்தாலும் ஸ்டூடியோ வாடகை அதிகமாகுமெனத் தெரிந்தது. லண்டனில் ஆறுமாத காலம் இசை நிகழ்ச்சி, நாடகங்கள், திரைப்படங்கள் என ரசித்துப் பார்த்தோம். அருகில் உள்ள லூசெர்னி, சல்ஸ்பெர்க், வெனிஸ், பாரீஸ் போன்ற நகரங்களுக்குச் சென்றோம். சல்ஸ்பெர்கில் ஒருநாள் முழுக்க முழுக்க மொசார்ட் இசையை கேட்டு ரசித்தோம்.
இவரது கம்பெனி இயக்குநர் குழந்தைகளுக்காக ஓவியங்களுடன் கூடிய புத்தகமொன்றை வெளியிட விரும்பினார். கப்பலில் திரும்பிக்கொண்டிருந்தபோது, "பதர் பஞ்சாலி'யை படித்த மானிக், அதுபோன்ற கதையைத்தான் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறினார். அதன் பின்னர் நடந்தவை அனைத்தும் சரித்திரம். அதற்காக நாங்கள் எடுத்துக்கொண்ட சிரமங்கள் அனைத்துமே பயனுடையவை. வெனிஸ் திரைப்பட விழாவில் "அபராஜிதோ'விற்கு "கோல்டன் லயன்' விருது கிடைத்த பின்னர், பணியாற்றி வந்த கம்பெனியைவிட்டு விலகிய மானிக், முழுநேர திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார்.
என்னுடைய கணவர் கடுமையாக உழைத்ததைப் போல் வேறு இயக்குநர்கள் உழைத்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான். படமாக்குவதற்காக ஒரு கருத்தை தேர்வு செய்தவுடன் திரைக்கதை, காட்சிகள், வசனம் அனைத்தையும் எழுதுவார். பின்னர் கதாநாயகன், கதாநாயகியைத் தீர்மானித்து அவர்களை வீட்டிற்கு வரவழைத்து காட்சிகளையும் வசனங்களையும் விளக்கிக் கூறி நடிப்பை சொல்லித் தருவார். ஆண்களுக்கான உடைகளை அவர் தேர்வு செய்ய, பெண்களுக்கான உடைகளை தேர்வு செய்ய நான் உதவி செய்வேன்.
எங்கள் வீட்டிலேயே மேக்-அப் ட்ரையல் நடக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஹேர்ஸ்டைல், மேக்-அப் எப்படியிருக்க வேண்டுமென்று வரைந்து காட்டுவார். அவருடன் பாணியாற்றும் ஆர்ட் டைரக்டருக்கும் காமிராமேனுக்கும் வேலை சுலபமாக இருக்கும். தரையில் அமர்ந்து பெரிய டிராயிங் ஷீட்டில் செட்டில் என்னென்ன எங்கெங்கு இருக்க வேண்டுமென்பதை விளக்கமாக வரைந்து காட்டுவார். மலர் அலங்காரங்களை என்னிடமும் என் ஒன்றுவிட்ட தங்கையிடமும் விட்டுவிடுவார். அவருக்கு என்ன தேவையோ அதை காமிராமேன் சுலபமாக செய்து காட்டுவார். எங்கே காமிரா இருக்க வேண்டும், எங்கே லைட்டுகள் இருக்க வேண்டுமென்பதையும் வரைந்து காட்டுவார்.
அவர் இயக்குவதைப் பார்ப்பதே ஓர் அனுபவமாக இருக்கும். நடிகர்கள் சரியாக நடித்துக் காட்டும்வரை இவரே நடித்துக் காட்டுவார். அதன் பின்னரே டேக்கிற்கு போவார். முதல் டேக்கிலேயே முடிக்க வேண்டுமென்பது அவரது விருப்பமாகும். அதுதான் இயற்கையாக இருக்குமென்பார். நடிகர்களின் நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதில் திறமைசாலி. குழந்தை நட்சத்திரங்களிடம் வேலை வாங்கும்போதும் பாரபட்சம் காட்டமாட்டார். அவரை பொருத்தவரை அனைவரும் சமம். அவரது ஆறடி நாலரை அங்குல உயரம் யாரையும் பயப்படுத்தியதில்லை.
அவரது முதல் விருப்பம் இசை. "தீன்கன்யா' படத்திற்கு அவரே இசையமைத்தார். அவரது படங்களுக்கு ரவிசங்கர், அலி அக்பர்கான், விலயத்கான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். மனதில் உதிக்கும் கருத்துகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லதென கூறுவார்.
இவரது தாத்தா உபேந்திரா கிஷோர் நடத்தி வந்த "சந்தேஷ்' என்ற குழந்தைகள் பத்திரிகையை இவரது தந்தை சுகுமாரே ஏற்று நடத்தினார். அந்தப் பத்திரிகையில் குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவார். ஆங்கிலத்தில் உள்ள பாடல்களை வங்க மொழியில் மொழிபெயர்ப்பார். துப்பறியும் நிபுணர் ஃபெலுடா, புரபசர் ஷொங்கு என்கிற விஞ்ஞானி பாத்திரத்தை உருவாக்கி வங்க மொழியில் மிகவும் பிரபலமாக்கினார். ஆங்கிலம், வங்க மொழிகளில் இவர் எழுதிய கதைகளைப் புத்தக வடிவில் வெளியானபோது விற்பனையில் சாதனை படைத்தது.
திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் ஊதியம்தான் எங்களுடைய ஒரே வருமானம். எல்லா வேலைகளையும் இவரே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தாலும் டைரக்டர் என்ற முறையில் மட்டுமே சம்பளம் பெறுவார். பணத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. சாதாரண மனிதனைப்போல் இரண்டு வேளை சாப்பாடு கிடைத்தால் போதும். இடைவிடாமல் சந்தோஷமாக வேலை செய்வார். இதற்காக நான் எவ்வளவு சிரமப்படுகிறேன் என்பதை அவர் எப்போதும் உணர்ந்ததில்லை.
ஒருமுறை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம், ""குறைந்தது படத்திற்கு இசையமைப்பதற்கான ஊதியத்தை மட்டுமாவது கேட்டு வாங்கலாமல்லவா?'' என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார். ""அது சரியல்ல. மேற்கு வங்காளம் மிகச்சிறிய மாநிலம். அதிகமாக பணம் கேட்பது தவறு. பணத்தைப்பற்றி அதிகமாகக் கவலைப்படாதே. வருமானவரி, கறுப்புப் பணம் என்று தூக்கமில்லாமல் கவலைப்படும் பணக்காரர்களைவிட நாம் சந்தோஷமாக இருக்கிறோம். நமக்குத் தேவையான பொருள்கள் இருக்கின்றன. நல்ல சாப்பாடு இருக்கிறது. வசதியான வீடு இருக்கிறது. வேறு என்ன வேண்டும் உனக்கு? என்ன இன்னமும் நாம் வாடகை வீட்டில் இருக்கிறோமே என்ற கவலைதானே?''
இந்திராகாந்தி மத்திய தகவல்துறை அமைச்சராக இருந்தபோது தில்லி யூனிவர்சிட்டி இவருக்கு முதன்முறையாக டாக்டர் பட்டம் அளித்தது. அதன் பின்னர் ஏராளமான விருதுகள், பட்டங்கள் அவருக்குக் கிடைத்தன. எத்தனை என்பதை நான் கணக்கிடவில்லை. 1974-ஆம் ஆண்டு லண்டன் ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் டாக்டர் பட்டம் அளித்தது. தொடர்ந்து கொல்கத்தா யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம் அளித்தது. வழுக்கி விழுந்து மூட்டு பிசகி ஆறு மாத காலம் படுக்கையில் இருந்தபோதுதான் மகசேசே விருது கிடைத்தது.
அவருக்கு எப்போதும் ஈகோ பிரச்னை இருந்ததில்லை. உடனடியாக கவனம் செலுத்துவது அவருக்குப் பிடிக்கும். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பழகுவார். எப்போது பார்த்தாலும் அவர் அறைக்குள் கூட்டம் இருக்கும். நாற்காலியில் அமர்ந்து அவரது சிவப்பு நிற நோட்டுப் புத்தகத்தை மடி மீது திறந்து வைத்துக்கொண்டு அவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் எழுதிக்கொண்டே இருக்கும். ஒருமுறை இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ""ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகள் செய்யும் திறமையை சிறு வயதிலேயே கற்றுக்கொண்டேன்'' என்றார்.
உலக அளவில் அவருக்கு விருதுகள் கிடைத்தன. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டமளிப்பதாக முடிவு செய்தபோது எங்களால் நம்பமுடியவில்லை. இதுவரை அவர்கள் திரையுலகில் சார்லி சாப்ளின் ஒருவருக்குத்தான் அப்பட்டத்தை வழங்கியிருந்தார்கள். வேறு பல பிரபலங்களையெல்லாம் ஒதுக்கி வைத்தார்கள். என் கணவருக்கு டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்தது பெருமையாக இருந்தது.
1987-ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்கு ஏற்ப அவரது உடல்நிலை சரியில்லாததால் பிரான்ஸ் நாட்டு அதிபர் மிட்டராண்ட் நேரில் வந்து அவரைக் கெüரவித்தது எங்களைப் பொறுத்தவரை மகத்தான நாளாகும். ஹார்வார்ட் யூனிவர்சிட்டியில் இருந்த அமர்தியாசென், இவருக்கு டாக்டர் பட்டம் அளிக்கவுள்ள தகவலை எங்களுக்குத் தெரிவித்தார். நேரில் வந்தால் மட்டுமே பட்டம் அளிக்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்றுவதற்கில்லை என்ற காரணத்தால் இவருக்கு கிடைக்கவிருந்த அந்த வாய்ப்பு தவறிவிட்டது.
1991-ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருது வழங்குவதற்காக ஹாலிவுட்டிலிருந்து நேரடியாகத் தகவல் வந்தது. உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில் அன்று அவர் மகிழ்ச்சியடைந்ததைப் போல் என்றுமே நான் பார்த்ததில்லை. ஹாலிவுட்தான் அவரது முதல் கனவாக இருந்ததால் நோபல் பரிசு பெற்றதைப் போல் சந்தோஷப்பட்டார்.
வழக்கம்போல் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட பின்னர் குடும்பத்தோடு ஹாலிவுட் சென்று மதிப்பிற்குரிய விருதை நேரில் பெறலாமென்று நினைத்தோம். ஆனால் முடியவில்லை.
1992-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி நர்சிங் ஹோமில் படுத்திருந்த அவரிடம் ஆஸ்கர் பிரதிநிதிகள் நேரில் வந்து விருதை வழங்கினர். கம்பீரமான குரலில் அருமையாகப் பேசுவார். அவரது நகைச்சுவை உணர்வை மறக்கவே முடியாது.
நர்சிங் ஹோமிலிருந்து அவர் வீடு திரும்பவில்லை. அனைத்துப் போராட்டங்களிலும் வெற்றிப் பெற்ற அவரால் இறுதி போராட்டத்தில் வெற்றிப் பெற முடியவில்லை.
"சத்யஜித் ரே அட் வொர்க்: பிஜோயாரே
ரிமெம்பர்ஸ்' என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகள் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...