ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வாய் வழியாகச் சுவாசிப்பதை நிறுத்த...

சுவாசப் பைகளில் மூக்கு வழியே உள் செல்லும் காற்று ரத்தத்துடன் நெருங்கிச் சம்பந்தப்பட்டு
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வாய் வழியாகச் சுவாசிப்பதை நிறுத்த...
Updated on
2 min read

என் கணவருக்கு சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற எந்த உபாதையுமில்லை. ஆனாலும் அவரை அறியாமலேயே வாயைத் திறந்து கொண்டேதான் உறங்குகிறார். வாய் வழியாகத்தான் காற்றை உள்ளிழுத்து வெளியே விடுகிறார். இது கெடுதலா? இதனால் ஏதேனும் உபாதைகள் ஏற்படுமா? அவர் மூக்கு வழியாகச் சுவாசம் விட்டு உறங்க வழி என்ன?

சீதாலட்சுமி, காஞ்சிபுரம்.

சுவாசப் பைகளில் மூக்கு வழியே உள் செல்லும் காற்று ரத்தத்துடன் நெருங்கிச் சம்பந்தப்பட்டு ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பலருக்கும் சுவாசிப்பது எப்படி? என்பதே தெரியவில்லை. இந்தக் குறையினால், ரத்தம் போதிய அளவு சுத்தம் அடைவதில்லை. மூக்கு வழியாக காற்றை உள்ளே இழுப்பதால், காற்று வடிகட்டப்படுவதுடன், அதற்கு வெப்பமும் கொடுக்கக் கூடிய வகையில் இயற்கையானது மூக்கைப் படைத்திருக்கிறது. வாய் வழியாகச் சுவாசித்தால் இந்த இரு நன்மைகளையும் நாம் இழப்பதுடன் மூக்கிலும், தலையிலும் நீர்க்கோர்வை எனும் உபாதைக்கு அது வித்திடவும் காரணமாகிறது.

அதனால் உங்கள் கணவர் சுவாசப் பயிற்சிகளைக் கற்றுக் கொள்வது மிகவும் பயன்தரக் கூடியதாக இருக்கும். அவர் யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்ட பிறகுதான் சுவாசப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. மூக்கு வழியாகச் சுவாசிக்கவும், மார்பு தாராளமாக விரியவும் உதவக்கூடிய ஏதேனும் ஒரு வசதியான ஆசனமும் பிராணாயாம முறையுமே அவருக்குப் போதுமானது. நாம் வாயை இறுக மூடிக் கொண்டாலேயே மூக்கின் வழியாக சுவாசிக்க வேண்டி வரும். சுத்தமாகச் சுவாசிக்க வாயையும் மூக்கையும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். நன்றாகப் பல் துலக்குவதாலும், நாக்கை வழித்துக் கொள்வதாலும், வாயில் தண்ணீர் விட்டு அடிக்கடி கொப்பளிப்பதாலும் வாயிலுள்ள துர்நாற்றத்தை அகற்றிக் கொள்ளலாம். அப்படியே மூக்கையும் நன்கு கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

 தாடைப் பகுதிகளிலுள்ள நரம்புகளும், தசைகளும் தளர்வடையும் வகையில் அதிகம் பேசுவதாலும், எதையாவது அடிக்கடி மென்று சாப்பிட்டாலும், இரவில் தன்னை அறியாமலேயே வாய் திறந்து கொள்ளும். அதனால் முகத்திலுள்ள நரம்புகளும், தசைகளும் வலுப்பெறச் செய்யும் கார்ப்பாஸôஸ்த்யாதி தைலம், நாரயண தைலம், தான் வந்திரம் தைலம் போன்றவற்றிலொன்றை மருத்துவரின் ஆலோசனைப்படி, இளஞ்சூடாக முகத்தில் உருட்டித் தேய்த்து சுமார் 20 -30 நிமிடங்களுக்குப் பிறகு, பாலில் வெந்து கொண்டிருக்கக் கூடிய பூண்டிலிருந்து வரும் நீராவியை, முகச் சதைகளில் படுமாறு 5 -10 நிமிடங்கள் செய்து கொள்வது மிகவும் சிறந்த சிகிச்சைமுறையாகும்.  இதற்குச் க்ஷீரதூமம் என்று பெயராகும். வாய்கோணிக் கொள்ளும் உபாதையில் இந்தச் சிகிச்சை முறை நல்ல பயனைத் தருகிறது.

மூக்கினுள் அணுதைலம் எனும் மூலிகைத் தைலத்தை 2 -4 சொட்டுகள் விட்டு, அது, தொண்டைப் பகுதி வழியாக, வாய்க்குள் வந்தவுடன் காறித் துப்பிவிடுவதால், மூக்குப் பகுதி  எப்போதும் சுத்தமாக இருக்கும்.

 காலை, இரவு பல் தேய்த்த பிறகு இவ்வாறு செய்து கொள்வது நல்லது. வாயினுள் வலிய அறிமேதஸ் தைலம் 5 மி.லி. விட்டு, வாயினுள் குலுக்கி, எச்சில் சேர்ந்ததும் துப்பிவிடுவதன் மூலம், வாய்ப்பகுதி சுத்தமாவதுடன், அதனைச் சுற்றியுள்ள நரம்புகளும் வலுப்படும், காலை, இரவு உணவிற்குப் பிறகு இவ்வாறு செய்வது நலம். மூளையிலிருந்துதான், நரம்புகள் முகப் பகுதிக்கு வருவதால் தலையில் மட்டுமே உபயோகிக்கத் தகுந்த மூலிகைத் தைலங்கள் உள்ளன. அவற்றையும் வெதுவெதுப்பாக தலையில் ஊற வைத்துக் குளிப்பதன் மூலமாகவும், நரம்புகளை வலுப்படுத்தலாம். நபருக்கு நபர் இத் தைலங்கள் வேறுபடுவதால், ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றை உபயோகிப்பதே நலம். 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com