சேவைக்கு வயதில்லை!

தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுயநலமாய் மாறிப்போன இந்தக் கால கட்டத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் 76 வயதிலும்,
சேவைக்கு வயதில்லை!
Updated on
2 min read

தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுயநலமாய் மாறிப்போன இந்தக் கால கட்டத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் 76 வயதிலும், தனது ஓய்வூதியத்தைக் கொண்டு "உண்டி கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே' என்ற முதுமொழிக்கேற்ப பசித்தோர்க்கு கடந்த 25 ஆண்டுகளாக உணவளித்து வருகிறார் குடியாத்தத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வி.ராமகிருஷ்ணன் (76).

 எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் 4 ஆண்டுகள் ஹிந்தி முதல் கிரேடு படித்தவர் ராமகிருஷ்ணன்.

1960-இல் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1997-இல் ஓய்வுபெற்றார். இனி ராமகிருஷ்ணன் சொல்கிறார்:

""மனைவி விட்டோபாயுடன், தங்கம் நகரை அடுத்த கூட நகரம் ரோடு, ராஜாஜி தெருவில் வசித்து வருகிறேன்.

தாத்தா நாராயணசாமியும், தாய் பத்மாவதி அம்மாளும், வீட்டை நாடி வரும் ஏழைகளுக்கு அக்காலத்தில் கஞ்சி ஊற்றுவார்களாம். அதைப் பார்த்து வளர்ந்ததனால் பசியால் வாடுபவர்களுக்கு என்னால் முடிந்த வரை உணவு அளிக்க விரும்பினேன். ஆரம்பத்தில் கஞ்சியைக் காய்ச்சி எடுத்துச் சென்று ஏழைகளுக்கு அளித்து வந்தேன். காலப்போக்கில் அறுசுவை உணவைத் தயாரித்து, வாழை இலையில் ஏழைகளுக்குப் பரிமாறி வருகிறேன்.

அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து, சாதம் வடித்து, சாம்பார், காய்கறி பதார்த்தங்கள் செய்து தனது டி.வி.எஸ். மொபெட்டில் எடுத்துச்சென்று, சந்தைப்பேட்டை ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோயில் வாசலில் காத்திருக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்குவேன்.

உணவு மீதமானால், அதை எடுத்துச் சென்று நெல்லூர்பேட்டை மாசுபடா அம்மன் கோயில் வாசலில் உள்ளவர்களுக்கு வழங்கி விடுவேன்.

விசேஷ நாள்களிலும், சனிக்கிழமைகளிலும் ரசம், மோர், இனிப்பு, வடையுடன் உணவு தயாரித்துச் சென்று வழங்குவேன்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு உணவு வழங்காத நாள்களில் பைத்தியம் பிடித்த மாதிரி ஆகி விடும். நோய் கண்டாலும் முடிந்தவரை உணவு தயாரித்து எடுத்துச் செல்வேன்.

வயதாகிவிட்டதுதான். இருந்தாலும் உணவு தயாரிக்கும்போது உடல் பலம் தானாகவே கூடிவிடுகிறது. யார் உதவியும் இல்லாமல் நானே தினமும் உணவைத் தயாரிக்கிறேன்.

இதற்காக வீட்டின் முன்பக்கத்தில், தனியாக 3 காஸ் சிலிண்டர்களைக் கொண்டு அடுப்பு அமைத்துள்ளேன்.

அதேபோல் மாணவர்கள் எளிய முறையில் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கில இலக்கண நூலையும் எழுதி 3 பதிப்புகளாக வெளியிட்டுள்ளேன்.

அந்த இலக்கண நூல்களை ஏழை மாணவர்களும் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிப்புச் செலவையே விலையாக நிர்ணயித்து விற்பனை செய்து வருகிறேன்.

எனது ஆங்கில அறிவை தங்கள் பள்ளி ஆசிரியர்களும் பெற வேண்டும் என்பதால், சில தனியார் பள்ளி நிர்வாகிகள் என்னை அழைத்துச் சென்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்கின்றனர். நம்மால் முடிந்ததைச் சேவையாகச் செய்து கொண்டே இருக்க வேண்டும்'' என்கிறார் ராமகிருஷ்ணன்.

இவருக்கு இரு மகன்கள். ஒரு மகன் ரவிசங்கர் ரயில்வேயில் டிரைவர். இன்னொரு மகன் ரமேஷ்பாபு சென்னை காவல்துறையின் உதவி ஆய்வாளர். இரு மகள்களும் உண்டு.

வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், புலவர் வே.பதுமனார் உள்ளிட்டோர் தன் வகுப்புத் தோழர்கள் எனக் கூறுகிறார் ராமகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com