நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புகைப்படக் கலைக்கென்று ஓர் இதழ்!

சென்னை போன்ற பெருநகரங்களிலேயே ஒரு பத்திரிகை நடத்துவது சிரமமான பணி. அப்படியிருக்க, மதுரையில் இருந்து கொண்டு நாகர்கோவிலில் புகைப்படக் கலைஞர்களுக்காக மட்டுமே ஒரு பத்திரிகையை நடத்தி, தற்போது பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் புகைப்படக் கலைஞரான பழனிகுமார்.

News image
Updated On :4 அக்டோபர் 2015, 9:04 am

ஸ்ரீதேவி குமரேசன

சென்னை போன்ற பெருநகரங்களிலேயே ஒரு பத்திரிகை நடத்துவது சிரமமான பணி. அப்படியிருக்க, மதுரையில் இருந்து கொண்டு நாகர்கோவிலில் புகைப்படக் கலைஞர்களுக்காக மட்டுமே ஒரு பத்திரிகையை நடத்தி, தற்போது பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் புகைப்படக் கலைஞரான பழனிகுமார். இது எப்படி சாத்தியம்? பழனிகுமாரிடம் பேசுவோம்:

உங்களுடைய பின்னணி?

எனக்கு பூர்வீகம் மதுரை. "காந்தி நிகேதன்' பள்ளியில்தான் படித்தது வளர்ந்தது எல்லாம். இது காந்தியவாதிகளால் உருவாக்கப்பட்ட கல்வித்திட்டம். பாடத்தை விட பொது அறிவுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். காலை முழுவதும் நூலகப் படிப்பு, மதியத்திற்கு பிறகு வகுப்பறை படிப்பு. பாடத்திட்டமும் ஏதாவதொரு பண்டிகையை முன் வைத்தே இருக்கும். மூன்றாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி வரை அவரவர் அணிந்து கொள்ளும் ஆடைக்கு அவர்களே நூல்நூற்று, ஆடை தயாரித்து, தைத்து அணிந்து கொள்வோம். எங்களுக்குத் தேவையான உணவுக்கு நாங்களே பயிர் செய்து விளைய வைத்து நாங்களே சமைத்து உண்பதில் இருந்து குளியலுக்குத் தேவையான சோப்பு முதல் கழிவறை சுத்தம் செய்வது முதல் அனைத்தையும் நாங்களே செய்து கொள்வோம்.

அதுபோன்று இந்திய அரசியலமைப்பில் இருப்பது போன்று சுகாதாரத்துறை, உணவுத்துறை, என்று பிரித்து ஓட்டு போட்டு முதல்வர் முதல் துறைத் தலைவராக மாணவர் தலைவரை தேர்ந்தெடுப்போம். இதனால் பள்ளியிலேயே அரசியல் சார்ந்த முழு அறிவும் எங்களுக்குக் கிடைத்துவிட்டது. உதாரணமாக, 1967- ஆம் ஆண்டு வரை ஒருவர் ஐ.ஏ. எஸ். முடித்தால் கல்லுப்பட்டியில் முதல் 6 மாதம் பயிற்சி எடுத்துக் கொள்ளாமல் போக முடியாது. இதனால் அந்த வயதிலேயே வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் பழகிக் கொண்டோம்.

புகைப்படத் துறைக்கு வந்தது எப்படி?

கல்லூரி முடித்ததும் குரூப்-4 எழுதி, அரசு வேலையில் இருந்தேன். இதற்கிடையில் புகைப்படம் எடுக்கக் கற்றுக் கொண்டு ஓய்வு நேரங்களில் புகைப்படமும் எடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் அரசு வேலையில் கிடைத்த வருமானத்தை விட புகைப்படத் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கவே, முழுநேரப் புகைப்படக் கலைஞராக ஆனேன்.

இந்நிலையில் 1998-ஆம் காலகட்டத்தில் புகைப்பட டெக்னாலாஜி பிலிம்மில் இருந்து டிஜிட்டலுக்கு மாறிக் கொண்டிருந்த நேரம். அப்போது "பிளான் இண்டர் நேஷனல்' என்ற அமைப்பில் போட்டோகிராபராக சேர்ந்தேன். 14 ஆண்டுகள் இந்தியா முழுக்கச் சுற்றினேன். ஹார்க்கிடெக், ஜென்டர், டான்ஸ் கேப், ஹவுசிங் என அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டேன்.

"பெஸ்ட் போட்டோகிராபி டூடே' மாத இதழ் குறித்து?

உலக அளவில் சிறந்த 10 புகைப்படக் கலைஞர்கள் பற்றி செய்தி இருந்தால் அதில் நிச்சயம் ஒரு தமிழனாவது இருப்பார். உதாரணமாக பூச்சிகள் பற்றி என்றால் கோயம்புத்தூரில் ஜெயராமன், அண்டர் வேர்ல்டூ போட்டோகிராபி என்றால் ராஜபாளையத்தில் ரமணன் என்று இவர்களைப் பற்றி தமிழகப் புகைப்படக் கலைஞர்கள் தெரிந்து கொண்டால் உபயோகமாக இருக்கும் என்று நினைத்தேன். அதற்காக தொடங்கப்பட்டதுதான் "பெஸ்ட் போட்டோகிராபி டூடே' மாத இதழ். நாகர்கோவிலில் இருந்து வெளியிடுகிறோம். வெளியிட்டாளர்: எஸ்.பி.சேகர்.

ப்ளஸ்டூ படித்துவிட்டு வேறு எந்தத் துறைக்கும் போக முடியாமல் போடோகிராபியைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் இது உபயோகமாக இருக்கும் வகையில் இதில் "உலகை திகைக்க வைத்த ஒளிப்படக் கலைஞர்கள்' தொகுப்பு எழுத ஆரம்பித்தேன். மேலும் புகைப்பட துறையில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, துறை சார்ந்த நுணுக்கங்கள், உபகரணங்கள் கிடைக்குமிடம் என செய்திப் பத்திரிகையாக இல்லாமல் வழிகாட்டியாக இருக்கும். இதனால் புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 3000 பிரதிகளுடன் ஆரம்பித்த பத்திரிகை இன்று 10000 பிரதிகள் வந்து கொண்டிருக்கிறது. இதன் சிறப்பு என்றால் புகைப்பட ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும். இத்தனை ஆண்டுகளில் பழைய புத்தகக் கடையில் எங்களது ஓர் இதழைக் கூடப் பார்த்திருக்க முடியாது.

இது தவிர தனித்தனி தலைப்புகளில் புகைப்படக்கலைப் பற்றி நாங்கள் வெளியிட்ட ஆறு புத்தகங்களும் புத்தகக் கடைகளுக்குப் போகாமலேயே 1000 பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பிரான்ஸ், இலங்கை, ஜெர்மன், சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் எங்களுக்கு சந்தாதாரர்கள் உண்டு.

தற்போது புகைப்படத் தொழில் எப்படி இருக்கிறது?

இப்போது புகைப்படக் கலையில் பல்வேறு தொழில் நுட்ப வளர்ச்சிகள் வந்துவிட்டன. இதனால் படம் எடுப்பவர் ஒருவர், அதை திருத்துபவர் ஒருவர், டிசைன் செய்பவர் வேறு ஒருவர், டெவலப் செய்பவர் ஒருவர், பிரிண்ட் எடுப்பவர் ஒருவர், ஆல்பம் மேக்கிங் செய்பவர் இன்னொருவர் என ஒரே புரொஜக்ட்டில் இத்தனை பேருக்கு வேலை இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் புகைப்படத் தொழிலை நம்பி இரண்டரை லட்சம் பேர் நேரடியாக இருக்கிறார்கள். மறைமுகமாக 7 லட்சம் பேர் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொழில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது.

புகைப்படக்காரர்கள் வெற்றி பெற உங்கள் டிப்ஸ்?

இந்தத் துறையில் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். தங்களது ஆங்கில திறமையை வளர்த்துக் கொண்டு, தாழ்வு மனப்பான்மையை தகர்த்துவிட வேண்டும்.

டெக்னாலஜி வளர்ந்துவிட்ட போதிலும் பெண்கள் அவ்வளவாக இந்தத் துறையில் இல்லையே?

இந்தத் துறையில் பெண்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் இந்தத் துறையில் வாய்ப்பிருக்கிறது. காரணம், ஒரு சடங்கு வீட்டிற்குச் சென்று அந்தப் பிள்ளையைப் படம் பிடிப்பது என்பது ஆண்களுக்கும் சங்கடம், அந்த குழந்தைக்கும் சங்கடமாக இருக்கும். அதுவே ஒரு பெண் புகைப்படக் கலைஞராக இருந்தால். எந்த தயக்கமும் இருக்காது. அதுபோன்று முஸ்லிம் வீட்டு விசேஷங்களுக்குச் சென்று பெண்கள் பகுதியில் படம் பிடிப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

இதனால் பெண்கள் இந்தத் துறைக்கு வர வேண்டும். மேலும் போட்டோகிராபி துறையைப் பொறுத்தவரை நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் அதைச் சரியான முறையில் தேர்வு செய்தார்களே ஆனால் இந்தத் துறையில் நிச்சயம் ஜெயிக்க முடியும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.