பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

புதுமைகளைப் புகுத்துபவர்!

மழைக் காலத்தில்தான் அங்கங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். கொசு அதில் பலமடங்கு பெருகி, மனிதர்களை விரட்டி விரட்டிக் கடிக்கும். வெயில் காலத்தில் கொசு காணாமற் போகும். இது அந்தக் காலம்.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 10:23 am

ந. ஜீவா

மழைக் காலத்தில்தான் அங்கங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். கொசு அதில் பலமடங்கு பெருகி, மனிதர்களை விரட்டி விரட்டிக் கடிக்கும். வெயில் காலத்தில் கொசு காணாமற் போகும். இது அந்தக் காலம்.

இப்போது எவ்வளவு கடுமையான வெயில் அடித்தாலும், அந்த வெப்பத்தையும் தாங்கிக் கொண்டு உயிர் பிழைக்கக் கற்றுக் கொண்டுவிட்டது, கொசு இனம். அதனால் வீடுகள் தோறும் கொசுவர்த்தி... புகை வருவது, வராதது, நெடி அடிப்பது, அடிக்காதது என கொசு விரட்டிகள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம்.

இந்த கொசு விரட்டிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றை விற்பதற்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்து தொலைக்காட்சிகளில் நிறைய விளம்பரங்களைச் செய்கிறார்கள்.

என்றாலும் இவற்றை வேறுவழியில்லாமல் பயன்படுத்துகிறோம் நாம். இந்த கொசுவிரட்டிகளைச் சுவாசிக்கிறோமே, நமக்கு அதனால் பாதிப்பு ஏற்படுமா? என்ற பயம் வரத்தான் செய்கிறது.

""நான் உருவாக்கியுள்ள கொசு விரட்டி எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது'' என்கிறார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெ.சாரதி.

கொசு விரட்டி மட்டுமல்ல, கைகளினால் சுற்றும் வாஷிங் மெஷின், நவீன விறகு அடுப்பு என அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் பலவற்றை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த கண்டுபிடிக்கும் எண்ணம் அவருக்கு எப்படி ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன? என்று கேட்டோம்:

""என் அப்பா வெங்கடசாமி ஒரு மருத்துவர். சுதந்திரப் போராட்ட வீரர். சென்னைத் துறைமுகத்தில் வேலை செய்து வந்த அவரை அவருடைய தீவிரமான சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளுக்காக, வேலை நீக்கம் செய்தார்கள். அவர் துறைமுகத்தில் வெல்டர் வேலை செய்து வந்தார். அதற்குப் பின்பு 1947 இல் அவர் இந்தப் பகுதியில் அச்சு வேலை தொடர்பான இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிலில் இறங்கினார். இருந்தாலும் அவ்வப்போது மூலிகைகளின் மருத்துவ குணங்களைப் பற்றி எங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவை என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.

அவர் இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிலை நடத்தியதாலும், நானும் ஐடிஐயில் மெக்கானிக்கல் ட்ராப்ட்ஸ்மேன் படித்திருந்ததாலும், புதிய இயந்திரங்களை உருவாக்கும் அறிவும் எனக்கு ஏற்பட்டது.

1973 இல் இருந்து, கைகளினால் கண்ணாடியை அறுக்கும் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலையை நானும் என்னுடைய சகோதரரும் நடத்தி வந்தோம். அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக, ஜப்பான், கொரிய நாட்டு மோட்டார் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் இந்தியாவில் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கின. நாங்கள் செய்த கண்ணாடி அறுக்கும் இயந்திரத்தின் விற்பனை பாதிக்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட அரசின் வரிக்கொள்கை இடம் தரவில்லை.

இதனால், தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது. பலர் வேலை செய்துவந்த தொழிற்சாலையில் பூனைகள் சுற்றித் திரிந்தன. அவற்றின் உடலின் மேல் உள்ள பூச்சிகள், மனிதர்களைக் கடித்தன. அப்போதுதான் நான் கற்பூரவல்லி இலையை அரைத்து உடம்பில் பூசிக் கொண்டேன். என்னை ஒரு பூச்சியும் கடிக்கவில்லை. பூச்சிகள் விலகி ஓடின. அதிலிருந்துதான் கற்பூரவல்லி கொசுவை விரட்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நான் உருவாக்கியுள்ள இந்த கொசுவிரட்டியை யார் வேண்டுமானாலும் வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம். வீட்டுக்கு அருகே கற்பூரவல்லி வளர்ந்து கிடக்கும். சோற்றுக் கற்றாழையை நம்மால் வளர்க்க முடியும். கற்பூரவல்லி ஒரு பங்கு, சோற்றுக் கற்றாழை ஒரு பங்கு, தண்ணீர் ஒரு பங்கு இந்த மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அரைத்ததை பத்துநாட்கள் ஊற வைக்க வேண்டும். தினமும் அதை நிழலில் காய வைக்க வேண்டும்.

பத்துநாள் கழித்து ஒரே ஒரு மூடி - சிறிதளவு - அந்த திரவத்தை ஒரு டம்ளரில் ஊற்ற வேண்டும். அந்த டம்ளருக்குள் இன்னொரு டம்ளரை வைக்க வேண்டும். பிறகு ஒரு ஜீரோ வாட்ஸ் பல்ப்பை அந்த இன்னொரு டம்ளருக்குள் எரிய விட வேண்டும். ஜீரோ வாட்ஸ் பல்ப் ஏற்படுத்தும் வெப்பத்தில் அந்த மூலிகைக் கலவை மெல்லிய ஆவியாகி காற்றில் கலக்கும். உடனே அந்தப் பகுதியில் உள்ள கொசுக்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பறந்தோடி விடும். எட்டு மணிநேரத்துக்கு ஒருமுறை ஒரு மூடி திரவத்தை ஊற்ற வேண்டும். இந்தக் கலவை உள்ள பகுதியில் கொசுக்கள் செத்து விழுவதும் உண்டு.

இதே கற்பூரவல்லி, சோற்றுக் கற்றாழைக் கலவையைப் பயன்படுத்தி கொசுவர்த்தியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தயாரித்திருக்கிறேன்.

கொசுவிரட்டி மட்டுமல்ல, நான் உருவாக்கியுள்ள பல இயந்திரங்கள் மக்களுக்குப் பயன்படும்படி உள்ளன. நான் உருவாக்கியுள்ள இயந்திரங்களுள் ஒன்றுதான் கைகளினால் சுற்றும் வாஷிங் மெஷின். மூன்று நான்கு துணிகளைப் போட்டு, வாஷிங் பவுடரை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி 30 சுற்றுகள் கைகளினால் சுற்றினால்போதும், அதிக விலை கொடுத்து வாங்கியுள்ள நவீன வாஷிங் மெஷின்களை விட இந்த வாஷிங் மெஷின் மிக நன்றாகத் துணிகளில் உள்ள அழுக்குகளை நீக்கிவிடும். இத்தனைக்கும் நான் தயாரித்துள்ள வாஷிங் மெஷினுக்குள் கிடப்பது நான்கைந்து ரப்பர் பந்துகள். அந்தப் பந்துகள்தாம் துணியில் மோதி அழுக்குகளை நீக்குகின்றன.

சமையல் கேஸ் நாளுக்குநாள் விலை உயர்ந்து கொண்டே போகிறது. புக் செய்தாலும் சில சமயங்களில் 20 நாட்களுக்கு மேல்தான் சமையல் கேஸ் கிடைக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நான் தயாரித்துள்ள நவீன அடுப்பு நிச்சயம் உதவும்.

நான் உருவாக்கியுள்ள அடுப்பை அரை மணி நேரம் எரிக்க வெறும் அரை கிலோ விறகுபோதும். சாதாரண அடுப்புகளைப் போல விறகு வைக்கும் இடம் இந்த அடுப்பில் திறந்திருக்காது. விறகுகளைப் போட்டதும் அடுப்பில் உள்ள சிறு கதவை மூடி விட வேண்டும். அடுப்பில் உள்ள சிறு துவாரங்களின் வழியாக காற்று உள்ளே சென்று விறகை எரிய வைக்கும். விறகு வெளித் தெரியும்படி இருந்தால், சுற்றிலும் உள்ள அதிக அளவிலான காற்றின் காரணமாக, எரியும் திறனை விறகு இழந்துவிடுகிறது. விறகு உருவாக்கும் வெப்பத்தின் பெரும் பகுதி வீணாகக் காற்றில் கலந்தும்விடுகிறது. நான் உருவாக்கியுள்ள அடுப்பில் வெப்பம் வீணாவது தடுக்கப்படுகிறது. குறைந்த செலவில் அதிக எரியும் திறன் கிடைக்கிறது.

""கொசு விரட்டிக்கு அதிகத் தேவை உள்ள இக்காலத்தில் நீங்கள் வெளிப்படையாக அதைத் தயாரிக்கும்முறைகளைச் சொல்கிறீர்களே... நீங்களே ஓர் இயற்கை கொசுவிரட்டி தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கி லாபகரமாக நடத்தலாமே?'' என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது இதுதான்:

சாதாரண மக்கள் ஒவ்வொரு நாளும் கொசு விரட்டிகளுக்காகச் செலவு செய்வது அதிகமாக உள்ளது. மேலும் இந்தக் கொசுவிரட்டிகளால் மனித உடல் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, எல்லாரும் அதிகச் செலவில்லாமல் தங்களுடைய வீடுகளில் செய்து கொள்ளும் இந்தக் கொசுவிரட்டியைத் தயாரிக்கும் முறை பற்றி வெளிப்படையாகச் சொன்னால், ஏழை மக்கள் பயன் அடைவார்கள் அல்லவா?'' என்று கேட்டு நம்மை நெகிழ வைக்கிறார் சாரதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.