ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அம்மாவின் கைமணம்!

கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள்தானப்பா இருக்கு.. இன்னமும் ஒங்க சித்தப்பா, அத்தைகளுக்கு பத்திரிகை கொடுக்கலையே..''

News image
Updated On :23 ஜூன் 2018, 10:54 am

செல்வகதிரவன்

கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள்தானப்பா இருக்கு.. இன்னமும் ஒங்க சித்தப்பா, அத்தைகளுக்கு பத்திரிகை கொடுக்கலையே..''
""என்னப்பா செய்றது. நேரம் சரியா இருக்கே.. என்னோட ஆபீஸ் ஆட்களுக்கு இன்று கொடுத்து முடிக்கல. தபால்ல அனுப்புவோம்னு சொன்னா கேக்க மாட்டீங்கிறிங்க.. நேர்லதான் போய் கொடுக்கணும்னு சொல்றீங்க.. அதுலயும் நானும் ஒங்க கூட வரணும்ங்கிறீங்க''
""இல்லப்பா. என்னோட ஒடம்பொறப்புக்களுக்கும் மூணாவது மனுஷாளுக்கு அனுப்புற மாதிரி தபால்ல அனுப்புறது சரி இல்லப்பா. நாம எல்லாரும் நேர்ல போய்த் தர்றதுதான் மரியாத..''
""அப்ப கொஞ்சம் பொறுங்க.. என்னோட வேலைகள முடிச்சுக்கிடுறேன்''
மகனின் வார்த்தைகள், கல்யாணசுந்தரத்திற்கு அவ்வளவாக நம்பிக்கையைத் தரவில்லை. அடுத்த வாரம் போகலாம்.. அதுக்கடுத்த வாரம் போகலாம்னு சொல்லி நேரத்தயும் நாளயும் கடத்தி.. கடேசியில், எல்லாருக்குமே கூர்யர்ல அனுப்பிடலாம்ப்பான்னு சொல்லிப்பிட்டா என்ன செய்றது.?
இதுக்கெல்லாம் காரணம் அப்பா கூடப் பிறந்தவுங்க கிட்ட அன்னியோன்யம் இல்லாமல் போனதுதான். 
அந்தக்காலங்களில்... அத்தைகள், சித்தப்பாக்கள், அவர்களது பிள்ளைகள் அவ்வப்போது வந்து போவார்கள். முழு வருசத் தேர்வு முடிந்ததும். மாமா வீட்டுக்குப் போவோம். சித்தப்பா வீட்டுக்குப் போவோமெனத் துள்ளிக் குதித்துக் கிளம்பி வருவார்கள். சேட்டை செய்யும் சிறுவர்களை யார் வேண்டுமானாலும் கண்டிக்கலாம். காதைப் பிடித்துத் திருகலாம். ஏன் ? வால்த்தனங்கள் அதிகமானால்... அடிக்கக் கூடச் செய்யலாம்.. மாமா அடிச்சிட்டாரு.. சித்தப்பா திட்டிட்டாருன்னு பிள்ளைகள், அப்பா அம்மாக்களிடம் வந்து சொன்னால் கண்டுகொள்ள மாட்டார்கள். 
""நீ சேட்ட பண்ணி இருப்ப..அதான் அடிச்சிருப்பாங்க.. பேசி இருப்பாங்க.. நீ சும்மா இருக்கும் போது யாரும் எதுக்கு அடிக்கிறாங்க?'' என்பதே அவர்களிடம் இருந்து வருகிற பதிலாக இருக்கும்.
இன்று நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டது. அடிக்க என்ன? மாமா சித்தப்பாக்களுக்கு அதட்டக் கூட உரிமை இல்லாமல் போயிற்று. சின்னப் பயல் சில்மிஷம் பண்ணுகிறான்... வயதுக்கு மீறி வாலாட்டுறான்னு கண்டித்தால் போச்சு... "ஒங்க அண்ணனுக்கு... ஒங்க தங்கைக்கு எம்பிள்ளயக் கண்டாலே ஆக மாட்டேங்கிது' பெண்மணிகளின் புகார் தத்தம் கணவன்மார்களிடம் போகும். சம்பந்தப்பட்டவர்கள் சற்று பொறுமை காக்காவிட்டால் அவ்வளவுதான். சண்டை சச்சரவுகள் சர்வசாதாரணமாக உருவாகி... அது ஊதி பெரிதாகி... உறவுக்குள் ஒரு வித இடைவெளிகளை உருவாக்கி வைத்து விடும்.
"நாமும், மீனாட்சியும் போய் தம்பி தங்கைகள் வீட்டுக்குப் பத்திரிக்க வச்சா என்ன? அவன் எதுக்கு?' என்று யோசித்தார் கல்யாணசுந்தரம். பாலாவிடம் கேட்டபோது ""சரிப்பா... நீங்களும் அம்மாவும் போய்ட்டு வாங்க...'' சம்மதம் தெரிவித்துவிட்டான். 
மீனாட்சிக்கு முழு சம்மதம் இல்லைதான்... இப்போது முடியாதென்றால் தமது சகோதரிகள் வீட்டுக்கு நேரில் போய் பத்திரிகை வைக்கத் தடங்கல் வந்துவிடலாம். அதனால் அரைமனதுடன் அவரின் யோசனையை ஆமோதித்தாள்.
கல்யாணசுந்தரத்திற்கு ஒரு தம்பி, மூன்று தங்கைகள். கலகலப்பான கலந்துரையாடல், அரட்டைக் கச்சேரி, சீண்டல், சிறு சிறு சச்சரவுகள் முதலியனவற்றால் சுவாரசியமாய் ஓடிய இளம் பிராயங்களை இன்று நினைத்துப் பார்த்தாலும் ஆனந்தப்பட முடிகிறது. வளர்ந்து பெரியயவர்களாகி, திருமணம், மனைவி, கணவர் குழந்தைகள் என்றான பிறகு ஏற்பட்ட இடைவெளிகள் சிறிது சிறிதாக அகலமாகி... அப்பா, அம்மா மறைவிற்குப் பின் மிகப் பெரிய பள்ளமாக விழுந்து போயிற்று.
உற்ற உறவுகளின் விசேஷங்களில் சந்திக்கும் போது மட்டும், ""நல்ல இருக்கீங்களா?'' ""நல்லா இருக்கோம்'' என்கிற நல விசாரிப்புகளுடன் தொடர்புகள் சுருங்கிப் போய்விட்டன.
கல்யாணசுந்தரத்தின் தம்பி கனகராஜ் தாம்பரம், தங்கைமார்களில் மூத்தவள் பெரம்பலூர், நடுத்தங்கை திருச்சி, கடைக்குட்டித் தங்கை புதுக்கோட்டை என்று செட்டிலாகிவிட்டார்கள். கல்யாணசுந்தரம் வசிப்பது மானாமதுரை. அதனால் முதலில் தாம்பரம் போய் அங்கிருந்து பெரம்பலூர், அப்புறம் திருச்சி... திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வந்து... மானாமதுரை திரும்புவதாகப் பயணத் திட்டம் வகுக்கப்பட்டது. அழைப்பிதழ் வைக்க வருகிற விவரம் அலைபேசி வாயிலாக உடன் பிறப்புக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.
இராமேஸ்வரம்-சென்னை விரைவு ரயிலில் முன் பதிவு செய்து கல்யாணசுந்தரம்--மீனாட்சி தம்பதியர் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதிகாலை ஐந்து மணி வாக்கில் ரயில் தாம்பரம் வந்து நின்றது. கனகராஜ், அண்ணா, அண்ணியை அழைத்துப் போக தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தான். இருவரையும் வரவேற்று காரில் வீட்டிற்குக் கூட்டிச் சென்றான்.
கனகராஜின் மனைவி கலா, முக மலர்ச்சியோடு உபசரித்து வகை வகையாக உணவளித்து அவர்களைத் திணறடித்து விட்டாள். ஆனால் உபசரிப்புகள், கவனிப்புகள் எல்லாம் வந்தவர்கள் மீது காட்டுகிற அக்கறையைக் காட்டிலும், தமது வசதிகளை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொண்டனர். 
""எதுக்கண்ணா... மானாமதுரையிலயே கிடந்து பொழுதப் போக்கிக்கிட்டு இருக்கீங்க..முன்னயாவது வேல பாத்தீங்க.. இப்ப ரிட்டயர் ஆயாச்சு.. இப்பவாவது மூணுமாசத்துக்கு ஒரு தடவ இங்க வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு போகலாமே...''
""எங்களுக்கும் வயசாகலையா.. ரயிலேறி வந்து போக முடியல. தொடர்ச்சியா ஒனக்கு லீவு கெடைக்கும் போது- நீயும் கலா குழந்தைகளக் கூட்டிக்கிட்டு மானாமதுரை வரலாமே... ஒனக்கும் ஒரு மாற்றம் கெடைக்குமே... இந்த வருசம் சித்திரைத் திருவிழாவுக்கு லீவப் போட்டாவது அவசியம் வாங்க...''
""சரிங்கண்ணா வரப் பார்க்கிறேன்..''
இந்த இரு அழைப்புக்களும் சம்பிரதாயமானவை என்பது அவர்களின் மனச்சாட்சிக்குத் தெரியும். 
""கூப்பிடலைன்னு கோவிச்சுக்கிடாதே.. கூப்பிட்டேன்னு வந்திடாதே'' என்கிற விசித்திர ஜாலம் அழைப்பிற்குள் ஒளிந்திருப்பது இரண்டு பேர்களின் உள் மனதிற்குப் புரியும். வந்த காரியத்தை நிறைவேற்றிய பின்னர் விடைபெறத் தயாரானார்கள்.
தனது செல்வாக்கைப் பயன்படுத்தி படுக்கை வசதியுடன் பெரம்பலூருக்கு பயணப்பட அவர்களுக்கு ஆம்னிப் பேருந்தில் ஏற்பாடு செய்து கொடுத்தான் கனகராஜ்.
வெவ்வேறுவிதமான ஆடம்பரங்களை அனுபவித்துவிட்டு... தங்கைகள் வீடு வந்த கல்யாணசுந்தரம்--மீனாட்சி தம்பதியருக்கு எளிமை மிக்க யதார்த்தம் தழுவிய வரவேற்புகள் காத்திருந்தன.
மூன்று பேர்கள் வீட்டுச் சாப்பாட்டில் ஒரே விதமான ருசியும் மணமும் கல்யாணசுந்தரத்தை கிறங்கடித்தன. "எந்த வகையான ருசி... எப்படிப்பட்ட மணம்'என்கிற நிஜம் உடனே தோன்றவில்லை. கடைசித் தங்கை கங்கா வீட்டில் சாப்பிடும் போதுதான் அதனை அறிய முடிந்தது. ஆம். மீனாட்சியும் இத்தனை வருஷமா நன்றாகத்தான் சமைத்துப் போடுகிறாள். ஒரு நாளும் அவள் சமையலை அவர் குறை சொன்னது கிடையாது. ஆனால் தங்கைகள் வீட்டில் சாப்பிடும்போதும், சாப்பிட்ட பிறகும் மனம் எங்கோ போகிறதே... சிறுவயது கல்யாணசுந்தரமாய் மாறிவிட்டதாக, அந்தக் காலச் சூழ்நிலைக்கு காலம் பின்னோக்கி நகர்ந்துவிட்டதாக மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி... புத்துணர்ச்சி... என்ன காரணம்? சட்டென மின்னல் வெட்டியது. ஆம். நான் சாப்பிட்டது தங்கைகளின் சமையலை அல்ல. நான் சாப்பிட்டது அம்மாவின் சமையல்.
அது அந்தக் காலத்தில் ரசித்து ருசித்து சாப்பிட்ட அம்மாவின் கைமணம்.
மூன்று தங்கைகளும் உணவு சமைக்க அம்மாவால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்லவா? அப்போது அம்மாவின் நினைவுகள் கல்யாணசுந்தரம் நெஞ்சத்தில் நிழலாடத் தவறவில்லை. அம்மாவின் நினைவால் கல்யாணசுந்தரத்தின் கண்கள் கலங்கின.
க.ல்யாணசுந்தரத்தின் கண்கள் கலங்குவதைக் கண்ட கங்கா, ""என்னண்ணா சாம்பார்ல காரம் சாஸ்தியோ?'' என்று வினவினாள். 
""ஆமாம்மா கொஞ்சம் சாஸ்திதான்'' உண்மைக்குப் புறம்பான சங்கதியைச் சொல்லி நிலைமையைச் சமாளித்தார் கல்யாணசுந்தரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.