பாலத்தின் அடியில் பள்ளிக்கூடம்!
கல்விதான் ஒருவனை உயரத்திற்கு எடுத்துச் செல்லும் கருவி. சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளின் கல்வி என்பது கனவாகவே இருந்து வருகிறது. அதுவும் பிச்சை எடுப்பவர்களின்


கல்விதான் ஒருவனை உயரத்திற்கு எடுத்துச் செல்லும் கருவி. சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளின் கல்வி என்பது கனவாகவே இருந்து வருகிறது. அதுவும் பிச்சை எடுப்பவர்களின் குழந்தைகளின் கல்வி?
பிச்சை எடுப்பது தவறு என்ற நிலையில், அத்தகைய பெற்றோர்களின் குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்? அவர்களுக்குக் கல்வி கிடைத்தால் அவர்கள் வளர்ந்து எதிர்காலத்தில் புதிய சமூகத்தைப் படைக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா? என்று ஒருவர் யோசித்துள்ளார். அப்படி யோசித்ததன் விளைவாக உருவானது
தான், சமூகத்தில் புறந்தள்ளப்பட்டவர்கள், அடுத்து என்ன செய்வது என புரியாமல் திணறுபவர்களின் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம்.
டெல்லியில் வசித்து வரும் ராஜேஷ்குமார்சர்மா என்பவர்தான் சமூகத்தில் பின்தங்கியுள்ள குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக யோசித்தவர். டெல்லியில் யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள மெட்ரோ பாலத்தின் கீழ் கடந்த 13 ஆண்டுகளாக சமூகத்தில் பின்தங்கிய 300 குழந்தைகளுக்கு ராஜேஷ் கற்பித்து வருகிறார். "தி ஃப்ரீ ஸ்கூல் அண்டர் தி பிரிட்ஜ்' என்று பெயரிடப்பட்ட இந்த பள்ளி, இரண்டு ஷிப்ட்களில் இயங்குகிறது. மாணவர்களுக்கு அவர்களின் ஓய்வு நேரத்தில் கற்பிக்க முன்வந்த ஏழு ஆசிரியர்களும் இந்த பள்ளியில் உள்ளனர்.
மற்ற பள்ளிகளைப் போலல்லாமல், பாலத்தின் அடியில் எந்த அமைப்பும் இல்லாமல் திறந்த நிலையிலுள்ள இந்த பள்ளியில் கருப்பு பெயிண்ட் அடித்த சுவர்களே கரும்பலகைகளாக உள்ளன. சாக்பீஸ், டஸ்டர்கள், பேனாக்கள் மற்றும் பென்சில்கள் போன்ற அடிப்படை எழுதுபொருட்களை வைத்துக் கொண்டு இங்கு ஆசிரியர்கள் அடிப்படைக் கல்வியைக் கற்பித்து வருகின்றனர். மாணவர்கள் தரையில் தரைவிரிப்புகளை விரித்து அமர்ந்து படிக்கிறார்கள். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஆண்,பெண் இருவருக்கும் தனித்தனி கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளதுதான். அடிப்படை கல்வியுடன், சுத்தம் குறித்தும் இங்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறார் ராஜேஷ்.
சிறுவயதாக இருக்கும் போது குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக தன்னால் முழுமையாகக் கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை எனக் கூறும் ராஜேஷ், ""மிகவும் கஷ்டப்பட்டு படித்தாலும் கூட பணமின்மையால் பி.எஸ்சி-யைக் கூட முடிக்க இயலவில்லை. அதனால், கல்வியின் பயன் ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அதன் விளைவாகத்தான் இதை தொடங்கி நடத்தி வருகிறேன்.
எனது குடும்பம் பெரும் வசதியான குடும்பம் இல்லை. நான் நடத்தி வரும் சிறிய மளிகைக் கடையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பித்தான் எனது குடும்பம் இருந்து வருகிறது. இருந்தாலும், கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு, என்னைப் போன்ற ஆர்வம் மிக்கவர்களை இப்பணியில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து நடத்தி வருகிறேன்'' என்று கூறும் ராஜேஷ், ""சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து குடிநீர் கேன்களை வழங்கி வருகின்றனர். சிலர் அவ்வப்போது பள்ளிக்கு வந்து பிஸ்கட் பாக்கெட்டுகள், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவைக் கொடுக்கிறார்கள். சில இளைஞர்கள் தங்கள் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடுகிறார்கள். பாலத்தின் அடியில் உட்கார்ந்து ஒன்றாக உணவை உட்கொள்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அல்லது எந்த பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைப் போலவே, இவர்களும் சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை உணர வைக்கிறது'' என்கிறார்.
தெருவில் கிடக்கும் வீணான பொருள்களை வாழ்விற்காக பொறுக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள், பிச்சைக்காரர்களின் குழந்தைகள், கைரிக்ஷா இழுப்பவர்களின் குழந்தைகள்தான் இங்கு கல்வி கற்று வருகிறார்கள்.
யார் என்ன ஆனால் நமக்கென்ன? என்று கவலைப்படாமல் , "தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று வாழ்பவர்களின் மத்தியில், வறுமையின் காரணமாக கல்வி கற்க முடியாமல் தான் பாதிக்கப்பட்டது போன்று பிறரும் பாதிக்கப்படக் கூடாது என நினைத்துச் செயலாற்றி வரும் ராஜேஷின் பார்வை, இன்றைய சமுதாய மக்கள் அனைவருக்கும் தேவை என்றால் அது மிகையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...