ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்பிலிருந்து உள்ளங்கால் வரை வலி!

எனக்கு கடந்த ஓர் ஆண்டாக பிருஷ்ட பாகத்தில் இடுப்புக் குழியில் தொடங்கி உள்ளங்கால் பாதம் வரை ஒரு கால் மாற்றி ஒரு கால் அதிக வலி இருக்கிறது. இதை எப்படி நிவர்த்தி செய்வது?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்பிலிருந்து உள்ளங்கால் வரை வலி!
Updated on
1 min read

எனக்கு கடந்த ஓர் ஆண்டாக பிருஷ்ட பாகத்தில் இடுப்புக் குழியில் தொடங்கி உள்ளங்கால் பாதம் வரை ஒரு கால் மாற்றி ஒரு கால் அதிக வலி இருக்கிறது. இதை எப்படி நிவர்த்தி செய்வது?

சுப்ரமணியம், பொள்ளாச்சி.

கீழ் இடுப்பின் தண்டுவடப் பகுதியிலிருந்து இரண்டு கால்களின் பின்புறம் வழியாகக் கீழிறங்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக, நீங்கள் குறிப்பிடும் வகையில் வலி ஏற்படக் கூடும். அபான வாயுவின் ஆதிக்ய ஸ்தானமாகிய கீழ்ப் பெருங்குடல், இடுப்பு, கால்கள், பாதம் ஆகிய பகுதிகள், இந்த வாயுவின் சீற்றத்தால் பலமிழக்கக் கூடும். குடல் வாயுவைச் சீற்றமடையச் செய்யும் பருப்பு வகைகள், வேர்க்கடலை, கடலை எண்ணெய், குளிர்ந்த நீர், மொச்சைக் கொட்டை, பச்சைப்பயறு போன்றவற்றை நீங்கள் அதிகம் பயன்படுத்தக் கூடாது. இவை அனைத்தும் உணவாகச் சமைக்கப்பட்டால், சூடான நிலையில் இருக்கும்போதே சாப்பிட்டுவிட வேண்டும். ஆறிய நிலையில்தான் இவை வாயுவைக் கிளறச் செய்கின்றன.

குடல் காற்றின் அழுத்தம் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு நீங்கள் கவனித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதற்கு விளக்கெண்ணெய் மிகவும் நல்லது.

விளக்கெண்ணெய் சிறிது கசப்பும் காரமான சுவையும் கொண்டது. வீரியத்தில் சூடானது. நல்ல மலமிளக்கி. செரிப்பதில் கடினமானது. குடல் இறக்கம், விதை வீக்கம், குடல் வாயு, வாதம் சார்ந்த நரம்பு வலி, கபம் சார்ந்த இருமல், மூச்சுத்திணறல், வயிற்றில் நீர் சேர்வதால் ஏற்படும் மஹோதரம், முறைக்காய்ச்சல் போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். இடுப்பில் ஏற்படக் கூடிய வலி மற்றும் வீக்கம், குடல் மற்றும் தண்டுவட வலி ஆகியவற்றை நன்கு குணப்படுத்தும்.

சாதாரண விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்பட்ட ஆயுர்வேத மருந்துகளால் நீங்கள் விரைவில் குணம் பெறலாம். நிம்பா அமிருதாதி ஆவணக்கெண்ணா, நிர்குண்டி ஏரண்டாதி தைலம், ஹிங்கு திரிகுண தைலம், கந்தர்வஹஸ்தாதி ஏரண்ட தைலம் ஆகிய பெயர்களில் எல்லாம் விற்கப்படும் விளக்கெண்ணெய் மருந்துகளை, நீங்கள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.

சப்தசாரம் என்ற பெயரில் விற்கப்படும் கஷாயத்துடன் மேற்குறிப்பிட்ட தைலங்களில் ஒன்றைக் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. குளிப்பதற்கும், குடிப்பதற்கும் நீங்கள் வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். கீழ்த்தண்டு வடத்தை ஸ்கேன் செய்து பார்த்தால் மேலும் இந்த உபாதைக்கான காரணங்களை நன்கு அறியலாம். பொதுவாகவே ஐந்து - எட்டு பல் பூண்டுகளை நூறு மில்லிலிட்டர் பாலில் போட்டு, நானூறு மில்லி லிட்டர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, பால் அளவு குறுகியதும் பூண்டை அகற்றி, பாலை மட்டும் வெதுவெதுப்பாக மாலை வேளைகளில் குடிப்பதை, தமிழக கிராமங்களில் இடுப்பு வலியைப் போக்கிக் கொள்வதற்காக இன்று அளவும் பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் அதையும் முயற்சிக்கலாமே!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com