வழிவிட்டவள்

உஷாவின் கதை: நிலையாமையும் நம்பிக்கையும்
வழிவிட்டவள்

'என்னோட கொஞ்ச நேரம் அங்கே உன்னால உட்கார்ந்திருக்க முடியுமாம்மா?'' என்று கேட்டான் சந்துரு.

'வெயில்ல நடந்துட்டே இருந்தாத்தான் தலை சுத்தும். விழுந்துடுவோமோன்னு பயம்மா இருக்கும். உட்கார்ந்திருக்கிறதுக்கு என்ன?'' என்று பிச்சு என்கிற பிச்சம்மாள் பையனைப் பார்த்துச் சொன்னாள்.

'அதுக்கில்லைம்மா? அங்க திண்ணையில் உன்னை உட்கார்த்திட்டு, மாடிக்குப் போய் நான் ஜாதகப் புத்தகங்களைக் கேட்டு வாங்கி எழுதணும். குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும். எதிர்த்தாப்புல ஐயப்பன் கோயில் இருக்கில்லையா? அங்க ராஜேந்திரா காபி கடை இருக்கு. வாங்கிட்டு வர்றேன். சூடா குடி. அப்புறம் நான் மேலே போய் எழுத உ ட்கார்றேன். சரியா? உன்னால மாடிப்படி ஏற முடியாது. ஒடுக்கமா பலகைல படி அமைச்சிருப்பாங்க அங்கே! அதனால சொன்னேன்.''

'காபி எதுக்குடா கண்ணா? இந்த ஃபிளாஸ்க்ல வெந்நீர் வச்சிருக்கனே'' என்று கொண்டு வந்த பிளாஸ்க்கை காட்டினாள் பிச்சு.

'இப்படித் தொட்டதுக்கெல்லாம் காசு செலவழியுமேன்னு பார்க்கப்பிடாது. வெளியே வந்தா தேவையானதை சிலது செய்யத்தான் வேண்டியிருக்கும். வெட்டிச் செலவுன்னு நினைக்கப்படாது. உட்காரு இங்கே. இதோ வர்றேன்'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கடையை நோக்கி நடந்தான் சந்துரு.

உள்ளே நேர் ஹாலில் மேஜை போட்டு உட்கார்ந்திருப்பவர் இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே பார்த்துகொண்டிருப்பது தெரிந்தது.

'ஜாதகம் பதிவு பண்ணியிருக்கேளா?'' என்று அவர் கேட்டார்.

'ஜாதகமும் பதிவு பண்ணியிருக்கோம். மாசப் பத்திரிகைக்கும் பணம் கட்டியிருக்கோம்'' என்று பிச்சு அவரைப் பார்த்துச் சொன்னாள்.

'அப்போ எதுக்கு இங்கே வந்து எடுத்துண்டு. அதான் தபாலிலே வருமே?''

'அது போறலை. ஒண்ணும் அமையலை. இங்க நிறைய இருக்குமாமே. அதனான் என் பையன்தான் சொல்லி கூட்டிண்டு வந்தான்.''

'அது சரி. நீங்க எதுக்கு அலையறேள் இந்தப் பதைபதைக்கிற வெயில்ல? அவன் குறிப்புகளை எடுத்துண்டு வரமாட்டானா?''

'வருவான் மாமா. இங்கே கோயிலுக்கு வந்தோம். அப்டியே இதையும் முடிச்சிண்டு போவமேன்னு. நல்ல ஜாதகமா இருந்தாச் சொல்லுங்களேன். எம் பொண்ணுக்கு. பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா? வைதேகின்னு பேரு..''

'அப்படியா.. இந்தக் காலத்துல எல்லாம் ஐ.டி., சாப்ட்வேர் என்ஜினீயர்ங்கிறா.. அவாளுக்கே பையன் ஜாதகம் கிடைக்க மாட்டேங்குறது. பசங்களுக்கு ஏத்த பெண் ஜாதகமும் வறட்சி

தான். வெறும் டீச்சருக்கு என்ன கிடைக்கும்?'' என்றார் அவர். பரிதாபப்படுகிறாரா அல்லது பரிகாசம் செய்கிறாரா? என்று அவரை பிச்சு கருணையோடு பார்த்தாள். 'வெறும் டீச்சர் என்றால்? என்ன அர்த்தம்?' என்று பிச்சு யோசித்தாள்.

'என்னவோ மாமா. ஒரு கவர்ன்மென்ட் ஆபீஸ்ல வேலை பார்க்குற கிளார்க் கிடைக்க மாட்டானா? அதுக்குக் கூடவா என் பெண் தகுதியில்லாமப் போயிட்டா? அவனும், வர்றவ தனக்கு சமமா சம்பாதிக்கணும். அப்பத்தான் வண்டியோட்ட முடியும்ங்கிற நிலைமை வந்தாச்சு. ஏன்னா முன்னமாதிரி பென்ஷன் கிடையாதோல்லியோ? இப்பத்தான் பங்கு பென்ஷன்ங்கிறாளே? அதுவும் கைக்குக் கிடைக்காமே நிறையப் பேர் திண்டாடிண்டிருக்கா? இப்படியிருக்கச்சே. பிரைவேட் ஸ்கூல் டீச்சரை யார் கட்டுவா சொல்லுங்கோ?''

பிச்சு அமைதியானாள். 'இவரென்ன இப்படி பேசறார்?' என்றிருந்தது. 'அவாவாளுக்குன்னு கடவுள் ஒண்ணைப் போட்டு வச்சிருக்க மாட்டாரா? அந்த அவனைக் கண்ணுல காமிக்காமயா போயிடப் போறார்? பார்த்துக்கலாம்' என்று நினைத்துக் கொண்டாள்.

'அம்மா.. இந்தா..சூடு ஆறுவதுக்கு முன்னாடி குடி..'' என்று சொல்லியவாறே காபி கப்பை நீட்டினான் சந்துரு. பார்த்துப் பதவாகமாய் வாங்கி உதட்டில் வைத்து உறிஞ்சினாள் . போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.

'முன்னால நிக்கிறது நகர்ந்தாத்தானே அடுத்தடுத்து வெளியேறும். அதுக்கு நல்ல நேரம் வரணும்.' என்று பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள்.

'இந்தப் பாழாப் போனவ லேசுல வெளியேற மாட்டா போலிருக்கே! அவளென்ன செய்வாள் இதற்கு? அமைந்தால்தானே? இது வேண்டாம். அது வேண்டாம்னு ஒவ்வொண்ணையும் ஒதுக்கித் தள்ளினா? மனசுக்குப் பிடிச்சாதான் ஒத்துக்குவேன்னு சொல்றாள்' என்று மனதுக்குள் பிச்சு நினைத்துகொண்டாள்.

'உனக்கெப்படி அப்பா அமைஞ்சார். ஆயிரம் கஷ்டம் வந்தாலும் கலங்காத மனுஷனா நீ பிடிச்சிட்டே. நானும் அப்படி ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கணும்னு நினைக்கிறபோது, அதிலென்ன தப்பு? ஏன் அலுத்துக்கிறே? உனக்கென்ன அப்படி அவசரம்? என்னை வீட்டை விட்டு சீக்கிரம் கழுத்தைப் பிடிச்சு தள்ளறதுதான் உனக்குக் குறிக்கோளா? நான் வெளியேறிட்டேன்னா மத்ததெல்லாம் சரியாயிடுமா? உன் கஷ்டமெல்லாம் தீர்ந்திடுமா? உன் தரித்திரம் போயிடுமா? கொஞ்சம் பொறு. எனக்கேத்த ஆளாப் பார்த்துத் தேர்ந்தெடுத்துண்டு நானே போயிடுறேன். அதுவரை கொஞ்சம் பொறுமையாயிரு..! குணநலன்தான் எனக்கு முக்கியம். பணநலனில்லே! அது அளவா இருந்தாப் போதும். சமாளிச்சிப்பேன். அந்த தைரியம் எனக்கு உண்டு. எனக்கப்புறம் மீதம் ரெண்டு பேர் இருக்காங்கிற நினைப்பும் உண்டு. பொறுப்பும் உண்டு. புரிஞ்சிதா?' என்றல்லவா வைதேகி விடாமல் பேசுகிறாள்.

வைதேகியுடனான முந்தைய சம்பாஷனைகள் பிச்சுவை அதிர வைத்தது. 'இங்கேயிருந்து எத்தனை ஜாதகக் குறிப்புகள் எடுத்துண்டு போனா என்ன? அவளுக்குப் பிடிக்கணுமே?பொண்ணைப் பையனுக்குப் பிடிக்கிறதாங்கிறதைவிட, பையனை என் பொண்ணுக்குப் பிடிக்கிறதாங்கிறதுதான் இப்போ அதிமுக்கியமாப் போச்சு. எப்படி நடக்கப் போறதோ?யாரைத் தேரந்தெடுக்கப் போறாளோ? ஈஸ்வரா! என்று எதிரே சற்றுத் தள்ளி, உயர் கட்டடங்களையும் மீறி வானளாவ நின்ற கோயில் கோபுரக் கலசங்களைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் பிச்சு.

'பொண்ணு போட்டோ வச்சிருக்கேளா?'' என்று உள்ளிருந்து குரல் வந்தது மீண்டும். பேச்சு நின்று ஒரு மணி நேரம் ஆகப் போகிறது. இதென்ன திடீரென்று? திரும்பிப் பார்த்தாள் பிச்சு.

'போட்டோ இருக்கான்னு கேட்டேன். அதைத்தானே கொண்டாங்கிறா இப்போ!'' என்று மறுபடியும் கேள்வி வேகமாய் வந்தது.

'இருக்கே மாமா. இதோ. ஒன்றுதான் இருக்கு. அதுவும் எப்பயோ எடுத்தது..'' என்று தான் வைத்திருந்த ஒரு பழைய பர்ஸின் உள் பகுதியில் பார்வையாய் வைத்திருந்ததை உருவி நீட்டினாள் பிச்சு.

'ரொம்பப் பழசு போலிருக்கே. லேட்டஸ்டா எடுத்து ஒரு பத்து போட்டோக்கள் கைவசம் வச்சிக்க மாட்டேளா? இதெல்லாம் சொல்லித் தரணுமா? இப்போ உங்க பொண்ணுக்கு என்ன வயசிருக்கும்?'' சளைக்காமல் கேட்டார்.

'முப்பது ஆயிடுத்து மாமா. நாலஞ்சு வருஷமாப் பார்த்திண்டிருக்கேன். அமையலை. என்னைப் பிடிச்சு ஆட்டி வைக்கிறது. என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ? எதிலயும் மாட்டிக்காமே அவர் போய்ச் சேர்ந்துட்டார். புண்ணியவாளன். நான் மாட்டிண்டு முழிக்கிறேன். இன்னிக்குத் தேதிக்கு இதைவிட அழகாயிருப்பா நேர்ல. நிறம்தான் கொஞ்சம் மட்டு. ஆனா முகம் திருத்தமாயிருக்கும் மாமா. உங்களப் பார்த்த விசேஷம். எம்பொண்ணுக்கு ஏதாச்சும் ஒண்ணு அமையட்டுமே. உங்களுக்குக் கோடிப் புண்ணியம். முடிச்சு வையுங்கோ'' என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

'வருத்தப்படாதீங்கோ. இந்த ஜாதகப் பரிவர்த்தனை சங்கம் பத்தி யாருமே உங்களுக்குச் சொல்லலை போலிருக்கு? நம்மடவாளுக்குன்னு வருஷக் கணக்கா இயங்கிண்டிருக்கு தெரியுமோல்லியோ? இப்பவாச்சும் வழி தெரிஞ்சிதே? எவ்வளவோ பேருக்குக் காரியம் கைகூடின அதிர்ஷ்டமான இடமாக்கும் இது! புண்ணியச் சேத்திரம்னு சொல்லணும்..''

'ஆகட்டும் மாமா.. உங்க வாய் முகூர்த்தம். அவளுக்கு மாங்கல்யதாரணம் ஆகணும். அந்த அம்பாள் மீனாட்சிதான் கருணை செய்யணும்.''

'ஆகும். எல்லாத்துக்கும் வேளை கூடி வரணுமோல்லியோ.. மனுஷப் பிரயத்தனங்கள் மட்டும் போறாதே!'' என்று தேஜúஸாடு கூடிய அவர் முகத்தை ஒரு முறை நன்றாகப் பார்த்துக் கொண்டாள் பிச்சு.

நல்லதாவே பேசுறார் மனுஷன். 'பகவானே முன்னே வந்து கேட்குற மாதிரியிருக்கு.நல்ல நேரம் கூடி வரட்டும்' என்று நினைத்துக் கொண்டாள். கண்களில் நீர் கசிந்தது.

'ஆஞ்சநேயர் கோயில், பஜனை மடம், விஸ்வ விநாயகர் கோயிலுன்னு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஜாதகம் கொண்டு வந்து படலம் படலமாக் காட்டத்தான் செய்யுறா? எதுவுமே நமக்குப் பொருந்தி வரலை. முடிஞ்சதெல்லாம் நீக்குவாளோ?, மாட்டாளோ? பட்டியல் நீண்டுண்டேதான் போறது. ஏழெட்டு ஜாதகமுனு கஷ்டப்பட்டு குறிச்சிண்டு போனாலும் லெட்டர் போட்டா பையன் ஜாதகம் ஜெராக்ஸ் அனுப்ப மாட்டேங்கிறா? பதிலே போட மாட்டேங்கிறா? நாமளே பொண்ணு ஜாதகத்தை ஜெராக்ஸா எடுத்து எடுத்து அனுப்பினாலும் பதில் எதுவும் வர்றதில்லை. ஒரு போட்டோ அனுப்புங்கோன்னாவது யாராவது கேட்க மாட்டாளோ? மூச். நாயா அலைஞ்சதுதான் மிச்சம். மலைப்பா போச்சு மாமா. எங்காத்து மொதப் பொண்ணை என்னைக்கு வெளியில் தள்றேனோ அன்னைக்குதான் விடியல். அப்புறம்தான் மத்ததை நகர்த்த முடியும் என்னால. இன்னும் ரெண்டு வச்சிண்டிருக்கேனே. புத்தி கெட்டவ! என்ன பண்ணச் சொல்றேள். பெத்தாச்சு.. கழுத்தை நெரிச்சா கொல்ல முடியும்? இல்ல விஷம் வச்சுக் கொல்ல முடியுமா? இந்தக் காலத்துல .எல்லாரும் ரொம்ப உஷாரா இருக்கா? ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணுன்னு இருந்துடறா? ரொம்பத் தப்பினா ரெண்டு கண்ணுல படறது. பெரும்பாலும் ஒண்ணுதான். ஒண்ணுக்கு ஒண்ணு துணை வேண்டாமோ? வேண்டாம்ங்கிறா? அதுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தா துணை தானா வந்துட்டுப் போறதுன்னு விட்டுட்டா?இந்தப் புத்தி மூத்த தலைமுறைக்கு இல்லாமப் போச்சு பாருங்கோ? ''

என்று பிச்சு தன்னை மறந்து, அவர் கேட்கிறாரா என்பதைக் கூடக் கவனிக்காமல் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தாள். புலம்பல்தான் என்று மனசு உறுத்திற்று. எந்தவழியிலாவது காரியம் ஆகாதா என்ற ஆதங்கம் தெறித்தது.

'அம்மா.. வா.. போகலாம். எடுத்தாச்சு..'' என்று சொல்லியவாறே கீழே இறங்கி வந்தான் சந்துரு. மரப் படிகளில் இறங்கி வருவது சத்தத்தைக் கிளப்பியது. அவன்தான் பொறுமையோடு அலைகிறான். விடாமல் ஜாதகங்களை எடுத்து வருகிறான். வண்டிக்கு அச்சாணிபோலக் கடமையைச் செய்கிறான்.

'ஆச்சா.. போகலாமா? நாங்க வரோம் மாமா. நீங்கதான் சொல்லணும். தெரிஞ்சவா சொன்னாத்தான் புண்ணியம். காரியமாகும்.''

'இருங்கோ.. இருங்கோ.. நீ எடுத்த குறிப்புகளைக் கொண்டா பார்ப்போம்'' என்றார் அவர்.

உள்ளே நுழைந்தான் சந்துரு. அவர் மேஜைக்குப் பின்னே, 'கைலாசநாதன், காரியதரிசி' என்ற போர்டு இருப்பதைப் பார்த்தான்.

ஒவ்வொன்றாகக் குறிப்பாய் கவனித்தார். பிறகு, 'சரி.. கொண்டு போய் உங்க பொண்ணோட ஜாதகத்தோட பொருந்தறதா பாருங்கோ. எட்டுப் பொருத்தம், ஒன்பதுன்னு அலையாதீங்கோ. ஆறு, ஏழு பொருந்தினாப் போதும். குறிப்பாக, வம்ச விருத்தி வேணும். அதான் முக்கியம். கவனத்துல வச்சிக்குங்கோ?'' என்றவர் ஒரு குறிப்பிட்ட குறிப்பைச் சுட்டி, 'இது பொருத்தமா இருக்கான்னு பார்த்திட்டு வந்து எனக்குச் சொல்லுங்கோ?'' என்றார்.

'ஆகட்டும் மாமா.'' என்று பிச்சு நம்பிக்கையோடு கிளம்பினாள். 'வரேன் அங்கிள்'' என்று சொல்லிவிட்டு படியிறங்கினான் சந்துரு.

'ஒரு நிமிஷம். உங்க பொண்ணு ஜாதகம் பதிஞ்சிருக்கேளே. அது சீரியல் நம்பர் என்னன்னு சொல்லுங்கோ? கேட்க விட்டுட்டேன்..''

'நானூற்றி முப்பத்தியேழு மாமா. வைதேகின்னு பேரு. வோல்டாஸ் காலனில இருக்கோம்.''

வந்த கையோடு குறித்து வந்த இடங்களுக்கு எழுதிப் போட்டாயிற்று. 'இனி பதில் வருமா, போன் வருமா' என்று காத்திருக்க வேண்டும். கடிதம் எழுதுவதே குறைந்து போன காலம். இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களுக்கு இன்னும் எழுத்து மூலமான அக்கறை இருக்கத்தான் செய்கிறது. அப்போதுதான் நம்பிக்கையும் வருகிறது. நமக்குத்தான் வேளை வர வேண்டும். தினமும் தபால்காரரை எதிர்பார்த்து திண்ணையிலேயே பழி கிடக்க வேண்டும். வெறுமே அவர் கடந்து போகையில்தான் எத்தனை ஏமாற்றம்? இந்த உலகமே இரக்கமற்றதாய்த் தோன்றும் அந்தக் கணம்.

ஒரு வாரம் கழித்து மதியம் கடந்த பொழுதில், அந்த போன் வந்தது.

'அதிசயமா இருக்கே. அடடா.. சந்துரு கூட இல்லையே.. வெளில போயிட்டானே. இந்த நேரம் பார்த்து வருதே.. ஈஸ்வரா.. என்னவோ ஏதோ' என்று மிகுந்த பதற்றத்தோடு அந்தச் சின்னக் கையடக்க சாதா போனை எடுத்து சந்துரு சொல்லிக் கொடுத்திருந்ததுபோல் பச்சை பட்டனை விரல் நடுங்க அழுத்தினாள் பிச்சு.

'ஹலோ.. ஹலோ..'' என்றாள். 'லைன் கிடைத்ததா?' என்ற பதற்றம் வேறு. வேறு என்னென்னவோ சத்தமெல்லாம் குறுக்கிட்டது. பிறகு நின்றது.

'யாரு பிச்சு மாமி பேசறேளா. நான்தான் சங்கத்திலேர்நது செக்ரட்டரி பேசறேன். என்னைத் தெரியறதா?'' என்று எதிர்க் குரல்

சத்தமாக வந்தது.

'நமஸ்காரம் மாமா. பையன் வெளிய போயிருக்கான். அதான் கொஞ்சம் பதட்டமா இருந்தது. எடுக்க லேட்டாயிடுத்து.''

'அதானே பார்த்தேன். மணியடிச்சிண்டே இருக்கேன்னு. பரவால்லை. ஒரு விவரம் சொல்லணும். அதுக்காகத்தான்!''

'எப்படி மாமா போன் நம்பர் கிடைச்சது?'' என்று பதற்றம் குறையாமல் கேட்டாள் பிச்சு.

'என்ன இப்படிக் கேட்கிறேள். உங்க பொண்ணு ஜாதகத்துல பின்னாடி எழுதியிருக்கேளோன்னோ? குறிப்பை வச்சு ஜாதகத்தை எடுத்துட்டேனே? வேறே என்ன வேலை எனக்கு? மறந்துட்டேளா! என்னைக்கோ

பதிஞ்சது. ஞாபகமில்லை போலிருக்கு!''

'அப்படியா.. நினைவில்லே மாமா.. பையன்தானே பாரம் வாங்கிப் பதிவு செஞ்சான். நான் என்னத்தக் கண்டேன். சொல்லுங்கோ?'' என்று தன்னைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு பேசியவாறே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். 'அப்பாடா.' என்று ஆசுவாசமாய் இருந்தது.

'ஒண்ணுமில்லே. உங்க பொண்ணுக்கு ஒரு ஜாதகம் அமைஞ்சிருக்கு. அதான் சொல்லலாமேன்னு..''

'அப்டியா மாமா.. ரொம்ப சந்தோஷம். நான்தான் அன்னைக்கே சொன்னேனே. உங்களாலதான் விடியணும்னு.. விடிஞ்சிடுத்து மாமா'' என்று சற்றே குதூகலமாய்க் கேட்டாள் பிச்சு. அவர் குரல் நம்பிக்கையளித்தது.

'அவா வேத்துப் பிரிவுதான். முதல்லயே சொல்லிப்புடறேன். ஆனா நம்மடவா. பிரிவெல்லாம் பார்க்கப்படாதுன்னு பெரியவாளே சொல்லியிருக்காளோன்னோ? தெரியுமோல்லியோ? நல்ல மனுஷாளாங்கிறதுதான் முக்கியம். தெரிஞ்சிதா?''

'நீங்க சொன்னா சரிதான். பரஸ்பர அன்புதான் முக்கியம்.''

'இந்தக் காலத்துல என்னென்னவோ நடந்துடறது. கலப்புத் திருமணங்கள் சகஜமா நடந்துண்டிருக்கு. நல்ல குடும்பமா, மரியாதையான, பொறுப்பான மனுஷாளா? பையன் பொறுப்பா, சமத்தா பொண்ணை வச்சுக் காப்பாத்துவானா? குடித்தனம் பண்ணுவானா? ரெண்டு பேரும் சந்தோஷமாயிருப்பாளாங்கிறதுதான் முக்கியம். புரிஞ்சிண்டேளா? இன்னொண்ணு...''

'என்னது? அதான் எல்லாம் சொல்லிட்டேளே மாமா?'' என்று படபடத்தாள் பிச்சு.

'பார்த்தேளா.. அதுக்குள்ளேயும் பதட்டப்படுறேளே. பையனுக்கு சித்தே வயசுஜாஸ்தி.. முப்பத்தியெட்டு. உங்க பொண்ணுக்கு அமையாம இழுத்த மாதிரி அவனுக்கும்!''

'என்ன மாமா. முப்பத்தியஞ்சுக்குள்ளன்னாக் கூடப் பரவால்லே.. முத்திக் குரங்கான்னா தெரியறது? தாம்பத்யமெல்லாம் குறையில்லாமக் கழியணுமே மாமா! நாளைக்குக் குழந்தை பிறக்கிறதுல ஏதாச்சும் பிரச்னைன்னா.?''

'எடுத்த எடுப்புல நீங்களே இப்படிப் பேசுறது நல்லாயிருக்கா? நாற்பதுலயும் அம்பது ஆரம்பத்துலயும் கூட இந்தக் காலத்துல குழந்தை பெத்துக்கிறா? அது அவா அவா இஷ்டம். வசதி வாய்ப்புகளைப் பொறுத்தது. மெடிக்கலா எவ்வளவோ முன்னேறியிருக்கிற காலமாக்கும் இது! எதுக்கும் அச்சப்படத் தேவையில்லே. முப்பதுகள் வயசு ஜோடிக்குப் போய் இப்படி பயப்படுறேளே? அதெல்லாம் சேமமா நடக்குமாக்கும். நல்லதையே நினையுங்கோ?''

'ஹலோ மாமா. நீங்க நல்லதைத்தான் சொல்றேள். கேட்டுக்கிறேன். சம்மதம்தான்.''

'வாரிசு இல்லாமப் போயிடுமோன்னு பயப்பட வேண்டாம். அதெல்லாம் அவா பார்த்துப்பா. நன்னாவே நடக்கும். டக்குன்னு முடிச்சு பொண்ணை வெளியேத்தப் பாருங்கோ? இதைவிட நல்லதா ஒரு வரன் அமையாது. பையனும் பார்க்க லட்சணமாயிருக்கான். ரெண்டு பேருக்கும் நன்னாப் பொருந்திப் போறது ஜாதகம். நீங்க சொல்ற எட்டென்ன? பத்துமே பொருந்தறதாக்கும். ரஜ்ஜூ பொருத்தம் அமர்க்களம்!''

'அதெப்படி மாமா.. எங்கயுமே எல்லாமும் பொருந்தாதே. ஆறேழு பொருந்தறதே துர்லபமாச்சே?'' என்று விடாமல் கொக்கி போட்டாள் பிச்சு.

' அந்த ஆறேழுலதான் இந்த ரஜ்ஜூ வந்து உட்கார்றது. மனசு பொருந்திப் போனா எல்லாமே பொருந்திட்டமாதிரிதான் அர்த்தம். அதுக்கு முன்னாலேஎந்த எந்தக் கிரக விசாரம் நிற்கும்? அதைச் சொல்ல வந்தேன்.''

'உங்களை மலைபோல நம்பறேன் மாமா. எனக்குப் பரிபூரண சம்மதம்.''

'மத்த விபரங்களை அப்புறம் அவாளோட பேசிட்டுச் சொல்றேன். வச்சிடட்டுமா? தைரியமா இருங்கோ? எல்லாம் நல்லபடியா முடியும். உங்க பொண்ணும் நிச்சயம் சம்மதிப்பா?வேளை வந்தாச்சு..''

டொக்கென்று சத்தம் கேட்டது எதிர் வரிசையில். பேச்சு முடிந்தது.

ஒரு நிமிடம் கண்ணை மூடிக் குலதெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டாள் பிச்சு. உடம்போடு உண்டான சிலிர்ப்பு. தன்னை மீறிக் கலங்கிய கண்கள்.

அங்கே, 'உங்களுக்கு ரொம்ப நன்றி அங்கிள். இதை முடிச்சுக் கொடுத்ததுக்கு நீங்களே பார்த்து, பொறுப்பு எடுத்துண்டு சொன்னதுக்கு என்னோட பணிவான நமஸ்காரங்கள். அவருக்குக் கொஞ்சம் கால் ஊனம்ங்கிறதை மட்டும் அம்மாட்ட சொல்ல வேண்டாம். அது அவ்வளவாத் தெரியாது. உன்னிப்பாக் கவனிச்சிப்பார்த்தாத்தான் புரியும். பின்னாடி நான் சொல்லிச் சமாளிச்சிக்கிறேன். கல்யாணம் ஆனப்புறம் என்ன? சரின்னு போய்த்தானே ஆகணும். என் மனசுக்குப் பிடிச்சிப் போச்சு அவரை. மன ஊனம் இல்லாத நல்ல மனுஷன் .

ரொம்ப வருஷப் பழக்கம் அவர். துளியும் தெரியாது எங்க அம்மாவுக்கு. எப்படி சொல்றதுன்னே சில வருஷத்தைக் கழிச்சிட்டேன். அவரும் என்னை நம்பியே இருந்திட்டார். அந்தளவுக்கு ரெண்டு பேரும் மனசு ஒன்றிப் பழகிட்டோம். என் கூட வேலை பார்த்தவர்தான். அப்புறம் ஃபேமிலிக்காக மாறுதல்ல போயிட்டார். ஆனா மனசு மாறவே இல்லை. இனி மீதிக் காலமும் அவரோடவே போயிடட்டும்ங்கிற முடிவுக்கு நானும் வந்திட்டேன். நான்தானே வழிவிடணும் எங்காத்துக்கு? குத்துக்கல்லா இருக்கிறவ நான்தானே? அதத்தானே அம்மா சொல்லிச் சொல்லிக் குத்திக் காட்டறா? மனசுதான் வாழ்க்கை'' என்று கண்களில் நீர் பனிக்க வைதேகி சங்கச் செக்ரட்டரியை விழுந்து

நமஸ்கரித்தாள்.

'உனக்குப் பெரிய்ய்ய மனசும்மா.'' என்று நெஞ்சுருகக் கூறி இருகரங்களாலும் மனசார ஆசீர்வதித்தார் அவர்.

'நீ கொடுத்த அந்தப் பையனோட ஜாதகத்தை உன் தம்பி குறிச்சிருந்தானாக்கும். அதக் குறிப்பாப் பாருங்கோன்னு நானும் சொல்லியிருந்தேன். என்ன பண்ணினாளோ? இப்போ உங்கம்மாட்டயே விலாவாரியாப் பேசியாச்சு. காரியமும் முடிஞ்ச மாதிரிதான். சந்தோஷம்தானே?''

'சந்தோஷம்ங்கிறதைவிட திருப்திங்கிறதுதான் சரி. நான் கிளம்பறேன் அங்கிள். ஏண்டீ லேட்டுன்னு அம்மா துளைச்செடுப்பா. யாரோட ஊர் சுத்திட்டு வர்றேன்னு கூட ஒரு நாள் கேட்டிருக்கா! அப்பா இல்லாத குறைக்கு இப்படிப் பல வசவுகள். எல்லாம் மரத்துப் போச்சு அங்கிள்.''

'அடுத்தாப்ல தம்பதி சமேதரா நீங்க ரெண்டு பேரும்தான் ஒத்துமையா இருந்து உன்னோட தங்கைமார்கள் ரெண்டு பேத்தையும் படிப்படியாக் கரையேத்தணுமாக்கும். அந்தப் பொறுப்புமே இனிமே உனக்கும் அவருக்கும்தான். அப்புறம்தான் உனக்கு மொத்தமா விடியும். ஞாபகம் வச்சிக்கோ?''

'கண்டிப்பா அங்கிள். என் கடமையை நான் மறக்கவே மாட்டேன். பொறுப்பா எனக்கு உதவுறதுக்கு ஒரு தம்பியையும் வச்சிருக்கேனே! மலைபோல அவன் எனக்கு இருக்கான்! தங்கக் கம்பி. என் மேலே ரொம்ப அக்கறை உண்மையிலேயே அவனுக்குத்தான்னு சொல்லணும்'' என்று புன்னகையை உதிர்த்துவிட்டு விடைபெற்றுக் கொண்டாள் வைதேகி.

ரயில் நிலையம் அருகே அமைந்த அந்தத் திறந்தவெளிக் காலனி வழியே நுழைந்து அவள் நடந்து வந்து கொண்டிருந்தபோது, விரிந்து கிடந்த தண்டவாளங்கள் தொலைதூரத்தில் ஒன்றுகூடி நீண்டிருப்பதைக் கண்ணுற்றாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com