கோலிவுட் அப் டேட்!

ஆஸ்கர் நூலகத்தில் தமிழ்த் திரைப்படத்தின் திரைக்கதை: 'பார்க்கிங்' படத்திற்கு பெருமை
கோலிவுட் அப் டேட்!
Published on
Updated on
2 min read

ஆஸ்கர் நூலகத்தில் தமிழ்த் திரைப்படத்தின் திரைக்கதை!

அறிமுக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் கடந்தாண்டு 'பார்க்கிங்' திரைப்படம் வெளியாகியிருந்தது. ஹரீஷ் கல்யாணும் எம்.எஸ்.பாஸ்கரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு எனப் பல விஷயங்களுக்காக இந்தத் திரைப்படம் அதிக அளவில் பாராட்டப்பட்டது. தற்போது இத்திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இதுதொடர்பாக ஹரீஷ் கல்யாண் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானாகத் தேடிப் போகும்!' என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். இதுபோல பல இந்தியத் திரைப்படங்களின் திரைக்கதைகள் ஆஸ்கர் நூலகத்தை அலங்கரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரோபோவாக கீர்த்தி சுரேஷ்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. அமிதாப் பச்சனும் கமல்ஹாசனும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற ஜூன் 27-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் இடம்பெறும் 'புஜ்ஜி' என்ற சிறிய ரோபோவை அறிமுகப்படுத்தும் வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. பிரபாஸூக்கு நெருங்கிய நண்பராக இந்த ரோபோ, திரைப்படத்தில் பயணிக்கிறது. இந்த 'புஜ்ஜி' என்ற ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருக்கிறார்.

கார்த்தி - அரவிந்த்சாமி காம்போ!

'96' திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமார் தற்போது கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார் என்ற செய்தி முன்பே வெளியாகியிருந்தது. கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். கார்த்தியின் 27-ஆவது திரைப்படமான இதற்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் கார்த்தியுடன் அரவிந்த் சாமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகருடன் இணையும்

கே.ஜி.எஃப். டைரக்டர் 'கே.ஜி.எஃப்.' திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகுக்கே பரிச்சயமானவர் இயக்குநர் பிரசாந்த் நீல். இவர் பிரபாஸை வைத்து இயக்கியிருந்த 'சலார்' திரைப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இதன் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர். தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வருகிற 'தேவாரா' திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

இதை முடித்து விட்டு பிரசாந்த் நீல் இயக்கும் இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்கும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

கான் திரைப்பட விழாவில்...

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் கடந்தாண்டு 'தக்ஸ்' திரைப்படம் வெளியாகியிருந்தது. இதில், ஹிருது ஹாரூன் என்பவர் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பிரான்ஸில் நடைபெற்று கொண்டிருக்கும் 77-ஆவது கான்ஸ் திரைப்பட விழாவில் இவர் நடித்திருக்கிற 'ஆல் வி இமாஜின் ஏஸ் லைட்' என்ற திரைப்படம் கடந்த 23-ஆம் தேதி திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹிருது ஹாரூன் நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை இயக்குநர் பாயல் கபாடியா இயக்கியிருக்கிறார். கான்ஸ் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்தை பார்த்தவுடன் பார்வையாளர்கள் அனைவரும் 8 நிமிடத்திற்கு எழுந்து நின்று கைதட்டல்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

அனிருத்துடன் இணைந்திருக்கும் பா. விஜய்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கிற 'இந்தியன் -2' திரைப்படம் வருகிற ஜூன் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான 'பாரா' பாடல் கடந்த 22-ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.

இந்தப் பாடலை பா.விஜய் எழுதியிருக்கிறார். கடைசியாக இவர் அனிருத் இசையமைத்திருந்த 'கத்தி' திரைப்படத்தில் 'நீ யாரோ' பாடலை எழுதியிருந்தார். இந்தப் படமும் 2014-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. சரியாக பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அனிருத் இசையில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய்.

ராஷ்மிகாவின் அசத்தல் லைன் அப்

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது 'புஷ்பா-2' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத் தாண்டி தனுஷின் 'குபேரா' திரைப்படத்திலும் ராஷ்மிகா நடித்துவருகிறார்.

மேலும், தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் திரைப்படமாக உருவாகி வரும் 'ரெயின்போ', ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கேர்ள் ப்ரெண்டு', இந்தியில் 'சாவா' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சல்மான் கானை வைத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சிக்கந்தர்' திரைப்படத்திலும் ராஷ்மிகா நடிக்கிறார்.

இப்படியான அசத்தல் லைன் அப்புகளை வைத்திருக்கும் ராஷ்மிகா, அடுத்தடுத்து மேலும் சில பெரிய திரைப்படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com