பள்ளிச் செல்லும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் இணையத்திலேயே இளையத் தலைமுறையினர் மூழ்கிவிடுகின்றனர். ஆனால், சின்னஞ்சிறு வயதிலேயே பாடத்தில் கவனம் செலுத்துவதோடு, நல்ல நூல்களை வாசித்து நூலாக்கியுள்ளார் பதினான்கு வயது சிறுவன் சர்வேஸ்.
சேலம் கோரிமேடு இந்திரா நகரைச் சேர்ந்த சுய தொழில் புரியும் சிவக்குமார் வங்கிப் பணியாளர் சவிதா தம்பதியின் மகன் சர்வேஸ், தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது வாசிப்பில் இருந்து கிடைத்த நுணுக்கங்களைப் பயன்படுத்தி, நேர மேலாண்மை, கற்கும் உத்திகள், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, தேர்வு எழுதும் முறைகள், இலக்கை உருவாக்குதல் குறித்த தெளிவான வழிமுறைகளை தனித்தனி துணைத் தலைப்புகளுடன் எழுதியுள்ளார். அவரே கணினியில் தானே தட்டச்சு செய்து, அழகிய அட்டையும் வடிவமைத்துள்ளார்.
'தி கேதரிங் இயர்ஸ்' என்ற 84 பக்க நூலை வாழப்பாடி விவேகா பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இணையவழியில் நோஷன் பிரஸ் நிறுவனமும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சர்வேஸிடம் கேட்டபோது, 'பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் கடந்த இரு ஆண்டுகளில் 30 புத்தகங்களை முழுமையாகப் படித்துள்ளேன். ஆங்கில வழியில் படித்து வருவதால் ஆங்கில மொழி புத்தகங்களை படித்து எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. பள்ளிப் பருவ வயதுக்குத் தேவையான வழிமுறைகளை, என்னை போன்றே மற்ற சிறுவர் சிறுமியர் பலரும் எளிதாகப் புரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் சிறு சிறு குறிப்புகளாக எழுதினேன்.
இதனை அச்சிட்டு முதன் முதலில் புத்தகமாக பார்த்ததும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே நூல்கள் எழுதுவதையும் தொடர்வேன்' என்கிறார் சர்வேஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.