நடுவில் பறவைத் திட்டுகள்..

'அந்தக் காலத்திலேயே ஏரிகள், குளங்களை உருவாக்குவதிலும், தூர்வாரி செப்பனிடுவதிலும் மன்னர்களும் ஜமீன்தார்களும் பெருமையாகக் கருதி செயல்பட்டிருக்கின்றனர்.
நடுவில் பறவைத் திட்டுகள்..
Published on
Updated on
2 min read

'அந்தக் காலத்திலேயே ஏரிகள், குளங்களை உருவாக்குவதிலும், தூர்வாரி செப்பனிடுவதிலும் மன்னர்களும் ஜமீன்தார்களும் பெருமையாகக் கருதி செயல்பட்டிருக்கின்றனர். நாட்டிலேயே மழைநீரை சேமித்தும், தேக்கி வைத்தும் நீர்ப்பாசனத்துக்கு அதிகமான நீர்நிலைகளை ஏற்படுத்தியவர்கள் தமிழர்கள்தான். இதைக் கருத்தில் கொண்டே, 'நீரின்றி அமையாது உலகு' என்பதை உணர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள 'எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுன்டேஷன்' என்ற அமைப்பு லட்சக்

கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளது. இருநூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள், சிறு ஏரிகளையும் தூர்வாரி இருக்கிறது'' என்கிறார் அந்த அமைப்பின் தலைவர் எஸ்.செந்தூர்பாரி.

அவரிடம் பேசியபோது:

'1989- இல் சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்துவந்த எம்.பி. நிர்மல் என்பவரால், சென்னையை சுத்தமாக வைத்துகொள்வதற்காக 'எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்' தொடங்கப்பட்டது. முதலில் வீடுகளுக்கே நேரில் சென்று குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கினோம்.

பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் வரும் என்பதை அப்போதே உணர்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்தோம். இவற்றை நடுவதோடு விட்டுவிடாமல் நாங்களே தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை வேலி போட்டும், நீர் ஊற்றியும் வளர்த்து பாதுகாப்போம். அதன்பிறகு, ஒவ்வொரு மரக்கன்றும் ஓரளவு வளர்ந்து மழைநீரின் மூலமாக தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் தன்மைக்கு வந்துவிடும்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சென்னை திருமுல்லைவாயல் சிட்கோவில் 21 ஏக்கரில் சுமார் 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, அதே இடத்தில் 9 சிறு குளங்களை ஏற்படுத்தியுள்ளோம். அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை மரக்கன்றுகளுக்குப் பாய்ச்சி பாதுகாத்தும் வருகிறோம். தற்போது அந்த இடம் சிறு வனப்பகுதியைப் போல உருவாகி பறவைகளும், முயல்களும் அதிகமாக வரத் தொடங்கிவிட்டன. மாணவர்களும் வந்து அதனைப் பார்வையிட்டு செல்கின்றனர்.

பெருங்குடியில் 5 ஏக்கரில் 5 ஆயிரம் மரக்கன்றுகளும், ராணிமேரி கல்லூரி வளாகத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகளும், பல்லாவரம் ஏரிக்கரையில் ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இதுதவிர ஒரு அரசுப் பள்ளிக்கு 1,000 மரக்கன்றுகள் வீதம் 52 அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர் அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

மழைநீர் கடலில் கலப்பதைத் தடுக்கவும், வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், நீராதாரங்களைப் பெருக்கிடவும், பறவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கவும் நீர்நிலைகளைப் பாதுகாக்க முயன்று வருகிறோம். பிளாஸ்டிக் குப்பைகள், ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலத்தல் உள்ளிட்டவற்றால் சீரழிந்து கிடக்கும் ஏரிகளையும், குளங்களையும் கண்டறிந்து அவற்றை தூர்வாரி செப்பனிட்டு வருகிறோம்.

தமிழகத்தில் 1.30 லட்சம் நீர்நிலைகளில் சுமார் 40 ஆயிரம் நீர்நிலைகளை காணவில்லை என்கிறது ஓரு தகவல். எனவே சீரழிந்துள்ள குளங்களையும், சிறு ஏரிகளையும் கண்டறிந்து அவற்றை நன்றாக தூர்வாரி, கரைகளை உயர்த்தி, அதனை சுற்றி மரக் கன்றுகளை நடுகிறோம். அவற்றின் கரைகளில் நடைமேடைகள், குழந்தைகள் விளையாடும் பூங்காக்களை அமைக்கிறோம்.

முக்கியமாக, குளங்களுக்கு நடுவில் பறவைகள் வந்து தங்கி ஓய்வெடுக்கவும்,இனப்பெருக்கம் செய்யவும்,தாகத்தை தீர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு குளத்திலும் பறவைத் திட்டுகளை அமைக்கிறோம். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்பட பல மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்களை தூர்வாரி,செப்பனிட்டு பறவைத்திட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அரிமா, ரோட்டரி சங்கங்கள்,தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி அமைப்புகள் ஆகியன தங்களது ஊர்களில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, நீராதாரத்தைப் பெருக்கி பாதுகாக்க விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம். ரூ.1 கோடி மதிப்புள்ள அதிநவீன மண் அள்ளும் இயந்திரம் (எஸ்கலேட்டர்) வாடகை இல்லாமல் வழங்குகிறோம். டீசல் செலவும், ஓட்டுநரின் சம்பளம் மட்டும் கொடுத்தால் போதுமானது. நீர்நிலைகளைத் தூர்வாரியவுடன் அந்த இயந்திரத்தை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். எங்களிடம் உள்ள 7 மண் அள்ளும் இயந்திரங்களை கிராமப்புறங்களில் நீர்நிலை

களைத் தூர்வாரும் பணியை செய்து கொண்டிருக்கின்றன.

தஞ்சாவூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகமே எங்களிடம் இயந்திரத்தை கேட்டு வாங்கி பயன்படுத்தியுள்ளன. புதுச்சேரியில் கடந்த ஓரு மாதமாக ஊர் பொதுமக்களே எங்களிடம் இயந்திரத்தை பெற்று தூர்ந்து போன இரு

நீர்நிலைகளை சீரமைத்துக் கொண்டிருக்கின்றனர். எங்களிடம் பெறப்பட்ட இயந்திரத்தின் வாயிலாக, ஓடிஸ்ஸா மாநிலத்தில் கேந்திரபாரா என்ற மாவட்டத்தில் 12 குளங்கள் சீரமைக்கும் பணியை கிராம ஊராட்சி மன்றங்களே செய்து வருகின்றன.

குடிநீர் பற்றாக்குறையைப் போக்கவும், வேளாண்மை செழித்து விளங்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதே எதிர்காலத் தலைமுறைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து. இது ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பும் கூட!'' என்கிறார் செந்தூர்பாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com