1,330 குறள்களும் மனதில்..

வள்ளுவன் தந்த உலகப் பொதுமறையான திருக்குறளில் மூன்று அதிகாரங்களில், 1330 குறள்களையும் தனது மனதில் பதிய வைத்துள்ளார்.
எஸ்.கண்ணப்பன்
எஸ்.கண்ணப்பன்
Published on
Updated on
1 min read

வள்ளுவன் தந்த உலகப் பொதுமறையான திருக்குறளில் மூன்று அதிகாரங்களில், 1330 குறள்களையும் தனது மனதில் பதிய வைத்து, எந்த வரிசை எண்ணைக் கூறினாலும் அந்தக் குறளையும், அந்த அதிகாரத்தையும் கூறி வியப்பில் ஆழ்த்தி வருகிறார் எழுபத்து மூன்று வயதான எஸ்.கண்ணப்பன்.

படித்ததை, கேட்டதை, நடந்ததை மறக்காமல் நினைவில் வைத்திருந்து அதை தேவையான நேரத்தில் பயன்படுத்துவதுதான் நினைவாற்றல். இவையே மனிதர்களின் பெரும்பாலான வெற்றி, தோல்விகளை உறுதி செய்கிறது. இந்த ஆற்றலில் திருக்குறளை இளையத் தலைமுறையினரிடம் பரப்பி வருகிறார் சிவகங்கை நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேதியியல் ஆசிரியர் கண்ணப்பன்.

நினைவாற்றலுக்கு வயது தடை இல்லை' என்பதற்கான உதாரணமான அவரிடம் பேசியபோது:

சிவகங்கை மாவட்டம், நடராஜபுரத்தில் 1952 -இல் பிறந்தேன். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேதியியல் பட்டமும், மதுரை தியாகராஜர் கல்லூரியில் ஆசிரியர் பட்டமும் பெற்றேன். சோழபுரம் கவியோகி சுத்தானந்தபாரதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, 2010 -இல் ஓய்வு பெற்றேன். தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது, தேசிய நல்லாசிரியர் விருதுகளையும் பெற்றுள்ளேன்.

நான் வேதியியல் படித்திருந்தாலும் தமிழில் அதிக நாட்டம் இருந்தது. ஓய்வு பெற்றவுடன் தமிழில் இலக்கியங்கள், காப்பியங்களை படித்து மொழி அறிவை வளர்த்துகொண்டேன்.

குறிப்பாக, கருத்துச் செறிவும், இன்று வரை அனைத்துக்கும் பொருந்தக் கூடிய திருக்குறள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. மூன்று அதிகாரங்களில் உள்ள 1,330 குறள்பாக்களையும் மனப்பாடம் செய்ய சுயமாகப் பயிற்சி எடுத்தேன். கடந்த ஓராண்டுக்கு முன் அது சாத்தியமானது.

முதலாவதாக, நான் பணியாற்றிய பள்ளியில் மாணவ, மாணவர்கள் முன்னிலையில் மனதில் இருத்திய 1330 குறள்பாக்களையும் ஒப்புவித்தேன். அது மட்டுமில்லாமல். ஒரு குறளின் எண்ணை யார் கூறினாலும் அதன் அதிகாரத்தின் தலைப்பையும் கூறுவேன். எண் சொன்னால் குறளையும், குறள் சொன்னால் அதன் வரிசை எண்ணை சொல்லும் திறமையை வளர்த்துகொண்டேன்.

திருக்குறளை மாணவர்களிடம் பரப்பும் நோக்கில் தற்போது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குச் சென்று பயிற்சியளித்து வருகிறேன். இது எனது நினைவாற்றலை கூர்மைப்படுத்திக்கொள்ள உதவுகிறது. தற்பொழுது குறளின் கடைசி வார்த்தையை (சீர்) சொன்னால் அதற்கான குறளைச் சொல்லுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறேன் என்கிறார் கண்ணப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com