

உழவுத் தொழிலுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் 'பொங்கல்' பண்டிகை, இறைவழிபாடு, நிகழ்ச்சிகளில் 'மட்பாண்டம்' என்ற மண்பானை முக்கிய இடம் பெறுகிறது.
மனிதர்கள் நாகரிகம் அடைவதற்கு முன் உணவு உற்பத்தி செய்யத் தொடங்கிய புதிய கற்காலத்தில், அன்றாடத் தேவைகளுக்கு கையால் செய்யப்பட்ட பானைகளை வடிவமைத்து வெயிலில் காயவைத்துப் பயன்படுத்தினர்.
இத்தகைய பானைகள், பானை ஓடுகள் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
இதனை அடுத்து வந்த இரும்புக் காலத்தில் மனிதர்கள் சக்கரத்தில் வைத்து வனையப்பட்ட பானைகளை சூளையில் வைத்து சுட்டு பயன்படுத்தினர். சூளையில் வைத்து சுடும்பொழுது பானையின் உட்பகுதி கறுப்பு நிறமாகவும், வெளிப்பகுதி சிவப்பு நிறமாகவும் காணப்படும். இத்தகைய பானைகளையும், பானை ஓடுகளையும் 'கறுப்பு - சிவப்பு பானை' என அழைப்பர். இக்காலத்தில் மனிதர்கள் நாகரிகம் அடைந்த நிலையில் எழுத்துகளையும் தங்களது பெயர்களையும் பானைகள் மீது பொறிக்கத் தொடங்கினர்.
பானை மீது பொறிக்கப்பட்ட எழுத்துகள், பண்டைய தமிழ் எழுத்துகளாக 2,600 ஆண்டுகள் பழமை உடையதாக விளங்குகின்றன. இக்குறியீடுகளின் தொடர்ச்சியாக எழுத்துகள் தோன்றியதற்கும் சான்றுகள் காணப்படுகின்றன.
சிந்து சமவெளி நாகரிகப் பண்பாட்டில் கிடைத்த களிமண் அச்சுகளில் காணப்படும் எழுத்துகளும், தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. இந்தப் பானை ஓடுகளுடன் துளையிட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை உணவு சமைத்தவுடன் நீரை வடியவைக்கப் பயன்பட்டிருக்க வேண்டும். மாங்குடி அகழ்வாராய்ச்சியில் துளையிட்ட பானையின் விளிம்பு பகுதியில் மீன் குறியீடு காணப்படுகிறது.
கீழடி, கொடுமணல், கொற்கை, மாங்குடி, அழகன் குளம், வல்லம், உறையூர், கருவூர், அரிக்கமேடு, தேரிருவேலி மாளிகைமேடு (விழுப்புரம்), பட்டரைப்பெரும்புதூர், சென்னானூர், துலுக்கர்பட்டி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பண்டைய தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
அயல்நாடுகளான யவனம், சீனம் போன்ற அயல்நாடுகளுடன் தமிழ்நாடு கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பை அறிய அரிட்டைன், ரெளலடட், ஆம்பொரா, சீன நாட்டு பானை ஓடுகள் போன்ற தனிச் சிறப்பு வாய்ந்த பானை ஓடுகள் அமைகின்றன.
வேட்கோவர்: ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் இறைவனுக்கு மண்பானையிலேயே அமுது செய்யப்பட்டு படைக்கப்படுகிறது. இத்தகைய மட்பாண்டங்களை உருவாக்கும் குயவர்கள் 'வேட்கோவர்', 'வேள்கோ', 'மண்ணுடையான்' என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றனர். வேட்கோவர்கள், மட்பாண்ட வகைகள் பற்றியும், 'குழிசி', 'குடம்', 'தாழி', 'தசும்பு' போன்ற பெயர்களால் பானைகள் அழைக்கப்பட்டுள்ளதையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.
'குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முதுபாழ் கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்'- (அகம் 77 - 6 - 7) . பண்டைய நாளில் கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஓட்டு பெட்டிகளாக மண்பானைகள் பயன்பட்டதாக அகநானூறு கூறுகிறது. இதனைத்தான் உத்திரமேரூர் கல்வெட்டு 'குடவோலை முறை' என கூறுகிறது.
கோயில்களுக்கு வேண்டிய பானைகள், குடங்கள், சட்டிகள், கலசங்கள், அகல் விளக்குகள் போன்றவற்றையும் குயவர்கள் அளித்திருக்கின்றனர். இவர்களுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள் 'குசக்காணி', 'குசபட்டி', 'குசவன் நிலம்', 'குலாலவிருத்தி' என்றெல்லாம் அழைக்கப்பட்டன.
பண்டைய நாள்களில் இறந்தவர்களை உள்ளே வைத்து புதைக்கும் முதுமக்கட் தாழிகளையும், பெரிய மண்பானைகளையும் அளித்துள்ள குயவர்களை 'கலஞ்செய்கோவே', 'கலஞ்செய்கோவே' (புறம் : 228) என்று புறநானூறு குறிப்பிடுகிறது. இவர்களுக்கு 'குசக்காணம்', 'சக்கரகாணிக்கை', 'திரிகை ஆயம்' போன்ற வரிகள் விதிக்கப்பட்டதை கல்வெட்டுகளில் அறிய முடிகிறது.
நாகப்பட்டினத்தில் சூளாமணி புத்த விகாரம் அமைக்க முதலாம் இராஜராஜசோழனால் 'ஆனைமங்கலம்' என்ற ஊர் தானமாக அளிக்கப்பட்டதும், இதற்கான எல்லைகளை வரையறுத்து அரசனுக்கு கையொப்பம் இட்டு தெரிவித்ததை வேட்கோவர்கள் பலர் கையொப்பம் போட்டிருப்பதும் ஆனைமங்கல செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது.
இதேபோன்று திருமீயச்சூர், திருப்பனையூர், திருவீழிமிழலை போன்று பல கோயில்களுக்கு விளக்கு எரிக்க வேட்கோவர்கள் தானம் அளித்த செய்திகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.