மலர்கள் பெரும்பாலும் சூரியனை வரவேற்று மலரும். ஆனால், சில மலர்கள் நிலவை வரவேற்றும் மலரும். நிலவை வரவேற்கும் பூக்களோ இரவு மட்டுமே மலர்ந்து, காலையில் வாடிவிடுகின்றன. இத்தகைய மலர்கள் நல்ல நறுமணத்தையும் அளிக்கின்றன. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளையும் கவர்ந்து, இனப்பெருக்கமும் செய்துகொள்கின்றன. இந்த வித்தியாசமான பூக்களை அறிவோம்.
பிரம்மக் கமலம்
இது இரவில் முழுமையாக மலர்ந்து, அதிகாலையில் வாடிவிடும். பெரிய, அழகான வெள்ளை நிற இதழ்களைக் கொண்டது. நறுமணம் கூடுதல் சிறப்பு. பூ பூக்கும் நேரத்தில் பிரம்மதேவன் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். இறைவழிபாட்டில் முக்கியத்துவம் பெறும் மலர்.
இரவில் பூக்கும் மல்லிகை (செஸ்டிரம் நோக் டர்னஸ்)
இரவில் தோட்டங்களின் அருகில் நடந்தாலே இனிமையான நறுமணம் உங்களை ஈர்க்கும். சிறிய வெள்ளை நிறப் பூக்களான இவற்றை தொட்டிகள், உள்முற்றம், ஜன்னல்கள் அருகில் வளர்க்கலாம்.
ஈவ்னிங் ப்ரிம் ரோஸ் (மாலை நேர ப்ரீம் ரோஸ்)
இரவு நேர மகரந்தச் சேர்க்கையாளர்களை ஈர்க்கும். சூரியன் மறையும்போது, அதன் மஞ்சள் மலர்கள் மலர்ந்து நறுமணத்தால் அந்து பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இரவில் இனப்பெருக்கமும் செய்கிறது.
தேவதையின் எக்காளம் (ப்ருக் மான்சியா)
'ஏஞ்சஸல்ஸ் டிரம்பெட்' என்றும் அழைக்கப்படும் இந்தப் பூக்கள் கிளைகளிலிருந்து தொங்கும். பெரிய எக்காள வடிவப் பூக்களுடன் இந்தத் தாவரம் உண்மையிலேயே அனைவரையும் கவர்ந்திழுக்கும். காற்றில் பரவும் மென்மையான நறுமணம் கொண்டது. உணவு வகைகள் விஷத் தன்மை கொண்டது. குழந்தைகள், வளர்ப்பு மிருகங்களிடமிருந்து தள்ளி வைக்கவும்.
டியூப் ரோஸ்
அற்புதமான நறுமணத்தை வெளிப்படுத்தும். இதன் வெண்ணிறப் பூக்கள் நீண்ட தண்டுகளில் பூக்கின்றன. இதன் நறுமணம் பெரும்பாலும் மயக்கும். காதல் உணர்வைத் தூண்டும். இதற்கு நீர் நன்கு வடியும் மண்ணும், பகல் நேரத்தில் சூரிய ஒளியும் தேவை.
மிராபிலிஸ் ஜலபா (நான்கு மணி மலர்)
பிற்பகல் நான்கு மணிக்கு மலர்ந்து அதிகாலையில் மூடிக்கொள்ளும். இவை இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை எனப் பலவண்ணங்களில் காணப்படும். முதிர்வடையும்போது நிறம் மாறும். கோடைக் காலம் முழுவதும் பூக்கும்.
கார்டினியா (வெண்மையான ஜாஸ்மினாய்ட்ஸ்)
வெண்மையான பூக்களுக்காக அறியப்படும் இந்தப் பூக்கள் இரவு நெருங்கும்போது, நறுமணத்தை வெளியிடும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










