நாங்கள் தலைக்கனம் கொண்டவர்கள் அல்ல - பூஜா ஹெக்டே!
வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிப்பில் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை டேவிட் தவான் இயக்கி இருக்கிறார்.
படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் பூஜாவுடன் செல்பி எடுக்க முயன்றபோது, அவரைப் பொருட்படுத்தாமல் பூஜா கடந்து சென்றிருக்கிறார். இது
குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் அவரது செயலைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.
இந்நிலையில் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' படத்துக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பூஜா ஹெக்டேவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், 'திரைத்துறையினருக்கு உயிர் கொடுப்பதே ரசிகர்கள்தான். சில நேரங்களில் அவசரமான சூழ்நிலைகள் அல்லது அதிக கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களைக் கவனிக்க முடியாமல் போகலாம். ஆனால், அதற்கு நாங்கள் தலைக்கனம் கொண்டவர்கள் என்று அர்த்தமல்ல.
ரசிகர்கள்தான் எங்களின் பலம். அவர்கள் எப்போதும் எங்களுக்கு தெய்வங்களைப் போன்றவர்கள். எனவே இதுபோன்ற சம்பவங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்' என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

30 ஆண்டுகளுக்குப் பின் உதகையில் ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் நீலகிரி மாவட்டம், உதகைக்கு அண்மையில் வருகை தந்திருக்கிறார். மைசூரில் இருந்து முதுமலை வழியாக வாடகை கார் மூலம் தனியாக உதகைக்கு வருகை தந்த ரஜினிகாந்த், பிரபல ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமான உதகையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறார்.
ரஜினிகாந்த்தின் இந்தத் திடீர் வருகை குறித்து நீலகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலருக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் இவரைச் சந்தித்துள்ளனர். தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் ரஜினிகாந்த்தைச் சந்தித்து புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.
பல ஆண்டுகள் கழித்து உதகைக்கு வருகைத் தந்திருக்கும் ரஜினிகாந்த் குறித்து கருத்து தெரிவித்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், '30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தலைவர் பட ஷூட்டிங் என்றாலே உதகையில்தான் இருக்கும். அதனால் சென்னைக்கு அடுத்தபடியாக தலைவரை உதகையில்தான் எப்போதும் பார்க்க முடியும்.
'உழைப்பாளி' படம் ஷூட்டிங் முடிந்து சென்றவர், அதற்குப் பிறகு உதகைக்கு வரவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக உதகைக்கு வராமல் இருந்தவர், திடீரென அண்மையில் வந்தார். இரவு ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் நேற்று காலை மைசூர் திரும்பி விட்டார். ஜெயிலர் -2 ஷூட்டிங் நடப்பதாகத் தெரிகிறது' என்றனர்.

எவ்வளவு காலமோ அவ்வளவு - கார் பந்தயம் குறித்து அஜித்!
தமிழில் முன்னணி நடிகரான அஜித்குமார், சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பிரான்ஸில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார். அதில் ஐந்தாவது இடத்தை அஜித்குமாரின் அணி பிடித்திருந்தது.
இந்நிலையில், பந்தயத்துக்குப் பிறகு ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டி கொடுத்த அஜித்குமார், 'நான் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்பேன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன். ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
கார் பந்தயத்தில் எனக்குள்ள ஈடுபாட்டின் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக நான் துபையில் வசித்து வருகிறேன். ஆனால், என் குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள்.
பந்தயங்களில் நான் தொடர்ந்து பங்கேற்க வேண்டியிருப்பதால், தற்போது பந்தயப் பயிற்சிகளுக்காக அதிக நேரத்தைச் செலவழித்து வருகிறேன். நாங்கள் இப்போது எங்களுடைய 2027-ஆம் ஆண்டுக்கான பந்தயத் திட்டத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









