தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

நவீன தகவல் தொடர்பின் அதிசயம்!

நவீன உலகில், மனித வாழ்க்கையின் அத்தியாவசியமான இணையத்தை கம்பிகள் இல்லாமல் எளிதாக, வேகமாகப் பயன்படுத்த உதவும் முக்கிய தொழில்நுட்பம்தான் 'வைஃபை'.

News image
Updated On :28 ஜூன் 2026, 4:08 am IST

நவீன உலகில், மனித வாழ்க்கையின் அத்தியாவசியமான இணையத்தை கம்பிகள் இல்லாமல் எளிதாக, வேகமாகப் பயன்படுத்த உதவும் முக்கிய தொழில்நுட்பம்தான் 'வைஃபை'.

வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்களில் வைஃபை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காற்றில் பயணிக்கும் எண்ணற்ற மின்காந்த அலைகளில் ஒன்றான வைஃபை அலைகளில் சில குறைபாடுகள் இருந்தாலும், சரியான பாதுகாப்பாலும், பொறுப்பான பயன்பாட்டாலும் நன்மைகளை முழுமையாகப் பெறமுடியும்.

காற்றில் பயணிக்கும் எண்ணற்ற அலைகள்

காற்றில் வானொலி, தொலைக்காட்சி ஒளிபரப்பு, கைப்பேசி, வைஃபை, செயற்கைக்கோள் தொடர்பு உள்ளிட்ட அலைகள் தொடர்ந்து பயணிக்கின்றன. காற்றில் ஒரு சிறிய பூஜ்ஜியம் (0) வரைந்ததாகக் கற்பனை செய்தால், அதன் வழியாகவே எண்ணற்ற மின்காந்த அலைகள் கடந்து செல்கின்றன. இவ்வாறான அலைகளே நமது தகவல் தொடர்பு, இணைய சேவைகளைச் சாத்தியமாக்குகின்றன.

வைஃபையின் நன்மைகள்

வைஃபையால் கம்பிகள் தேவையில்லாத வயர்லெஸ் தொழில்நுட்பம், கைப்பேசி, கணினி, ஸ்மார்ட் டி.வி. போன்ற பல சாதனங்களை ஒரே நேரத்தில் இணைக்க முடியும். இணையத்தை எளிதாகவும் வேகமாகவும் பயன்படுத்தலாம். நிறுவல், பராமரிப்பு செலவும் குறைவாகும். குறிப்பிட்ட வரம்புக்குள் எங்கிருந்தும் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

குறைபாடுகள்

பாதுகாப்பு அமைப்புகள் சரியாக இல்லாவிட்டால், தகவல் திருட்டு ஏற்படலாம். சுவர்கள், பிற மின்னணு சாதனங்கள் சிக்னலைப் பாதிக்கும். பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் இணைய வேகம் குறையலாம். ரௌட்டரிலிருந்து அதிக தூரம் சென்றால், சிக்னல் பலவீனமடையும். மின்சாரம் இல்லாதபோது வைஃபை செயல்படாது.

உடல்நல பாதிப்புகள்

சாதாரண அளவில் பயன்படுத்தப்படும் வைஃபை சிக்னல்கள், மனித உடலுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் சோர்வு, தூக்கக் குறைவு, தலைவலி, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சிலர்

வைஃபை, கைப்பேசி அலைகளில் இருந்து வரும் மின்காந்த அலைகளுக்குத் தங்களது உடல் அதிகமாக எதிர்வினை ஆற்றுவதாகக் கூறுகின்றனர். வைஃபை, ரெளட்டர்கள் அருகில் இருக்கும்போது தோலில் எரிச்சல், அரிப்பு, சிவந்து போதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.

வைஃபை சாதனங்கள் மிகக் குறைந்த அளவிலான அயனியாக்கமற்ற கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இவை எக்ஸ்-ரே போன்ற ஆபத்தான கதிர்வீச்சுகள் கிடையாது.

மடிக்கணினி அல்லது கைப்பேசியை நீண்ட நேரம் தோலின் மீது நேரடியாக வைத்துப் பயன்படுத்தும்போது, அந்தச் சாதனங்கள் வெளியிடும் வெப்பம் தோலில் நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம்.

எதிர்கால சாத்தியக் கூறுகள்

தொழில்நுட்பம் வளர வளர (உதாரணமாக 5ஜி, 6ஜி, அதற்கும் மேல்), அதிக அதிர்வெண் கொண்ட அலைகள் பயன்படுத்தப்படும். இந்த அதிவேக அலைகள் மனித தோலின் மேல் அடுக்குகளால் அதிகமாக உறிஞ்சப்பட வாய்ப்புள்ளது.

எளிய முன்னெச்சரிக்கைகள்

எதிர்காலத்தில் வரவிருக்கும் பக்கவிளைவுகளில் இருந்து தப்பிக்க எளிய முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். வைஃபை, ரெளட்டரை அடிக்கடி அமரும் அல்லது தூங்கும் இடத்திலிருந்து குறைந்தது சில அடிகள் தள்ளி வையுங்கள். தூங்கச் செல்லும் போது வைஃபை, கைப்பேசி இணையத்தை அணைத்து வைப்பது நல்லது.

மடிக்கணினியை மேஜையின் மீது வைத்துப் பயன்படுத்தலாம். மின்னணுச் சாதனங்களை அளவோடு பயன்படுத்தலாம்.

தாவர வளர்ச்சியும், வைஃபையும்

ஓர் அறையில் வைஃபை, ரௌட்டருக்கு அருகில் ஒரு செடியையும், மற்றொரு அறையில் வைஃபை இல்லாமல் அதே வகைச் செடியையும் வளர்த்து ஒப்பிடலாம். இதுவரை மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான ஆய்வுகளில், சாதாரண வைஃபை சிக்னல்கள் தாவர வளர்ச்சியை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கின்றன என்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. ஒளி, தண்ணீர், வெப்பநிலை, மண்ணின் தரம் போன்ற காரணிகளே தாவர வளர்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஜோதிமணி பாண்டியன், காரைக்குடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.