அறம் வளர்க்கும் 'அக்னிச் சிறகுகள்'
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பாபநாசம் அருகேயுள்ள திருக்கருகாவூரில் உள்ள 'கருக்காத்த நாயகி', 'கர்ப்பரட்சாம்பிகை' என்றெல்லாம் அழைக்கப்படும் அம்மன்...


தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பாபநாசம் அருகேயுள்ள திருக்கருகாவூரில் உள்ள 'கருக்காத்த நாயகி', 'கர்ப்பரட்சாம்பிகை' என்றெல்லாம் அழைக்கப்படும் அம்மன் உடனாய முல்லை வனநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானத்தை வழங்கி வருகின்றனர் அக்னிச் சிறகுகள் அறக்கட்டளையினர்.
அன்னதானத்தைத் தவிர, அறப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு அறம் வளர்க்கும் அந்த அறக்கட்டளையின் நிறுவனர் கோ. சிவசண்முகத்திடம் பேசியபோது:
'முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்குப் பின்னர், எண்ணற்ற இளைஞர்கள் தாமாக முன்வந்து அறப்பணிகளையும் நற்காரியங்களையும் தொடங்கினர். அதன்படி, 2015-இல் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் 'அக்னிச் சிறகுகள்' அறக்கட்டளை. குஜராத் பூகம்ப நிவாரண உதவி, கஜா புயல், கரோனா காலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நாங்கள் பணியாற்றியுள்ளோம்.
வள்ளலார், பாரதியார் போன்றோரின் வாக்குக்கு இணங்க, அறக்கட்டளையின் சார்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகிறோம். இவ்வாறாக, 180 வாரங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது.
ஜனவரி 12-இல் தேசிய இளைஞர்கள் தினம், ஜூலை 15 -இல் கல்வி வளர்ச்சி நாள், சுதந்திர தின விழா, வள்ளலார் பிறந்த தினம், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம், தஞ்சாவூரில் கல்விப்புரட்சியை ஏற்படுத்திய பூண்டி புஷ்பம் கல்லூரியின் முன்னாள் தாளாளர் துளசி அய்யா வாண்டையார் உள்ளிட்டோரின் பல்வேறு விழாக்களை தகுந்த சான்றோர்களை அழைத்து, செம்மையாக நடத்தி வருகிறோம்.
கண் மருத்துவம், ரத்த தானம், சித்த மருத்துவம், வர்ம சிகிச்சை, பொது மருத்துவம் என மாதம்தோறும் ஒரு முகாமை நடத்தி, எளியோருக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க வழிகாட்டுகிறோம். பொதுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு இருமுறை வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
'ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்' என்று கவிஞர் வாலியின் வரிகளைப் பின்பற்றி, விருதுக்கு உரியவர்களை ஊடகங்களின் செய்திகளிலும், சமூக ஊடகங்களின் தரவுகளிலும் கண்டறிகிறோம்.
இதன்படி, முப்படைகளில் சிறந்து விளங்குவோர், அரசுத் துறைகளில் தனித்தன்மையுடன் பணியாற்றுவோர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரைத் தேர்வு செய்து, விருதுகளை வழங்குகிறோம். பசிப்பிணிப் போக்குபவருக்கு வள்ளலார் விருது, எளியோருக்கு மருத்துவச் சேவை அளிப்போருக்கு மகாத்மா விருது, கல்விப் பணியாற்றுவோருக்கு பூண்டி ஐயா விருது, சமூகப் பணியும் நிர்வாகத் திறமையும் கொண்ட ஆளுமைகளுக்கு மாமன்னன் ராஜராஜன் விருது, வேளாண்- கிராமப்புற வளர்ச்சிக்கு உழைப்பவருக்கு நம்மாழ்வார் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்குகிறோம்.
நான் 23 ஆண்டுகளாக நடத்திவரும் தொடக்கப் பள்ளியில் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, ஒரே குடும்பத்தில் இரு பிள்ளைகள் பயிலும்பட்சத்தில் ஒரு பிள்ளைக்கு இலவசக் கல்வி, பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவிகளை வழங்கி வருகிறேன்' என்கிறார் சிவசண்முகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...