உலகைக் கவர்ந்த தொல் தாவரவியல் நிபுணர்!

தாவரவியல் என்பது பொதுவாக உலகிலுள்ள பலவகையான தாவரங்களை ஆராய்வது என்பது அனைவருக்கும் தெரியும்.
Updated on
2 min read

தாவரவியல் என்பது பொதுவாக உலகிலுள்ள பலவகையான தாவரங்களை ஆராய்வது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தத் தாவரங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தன என்று ஆராய்வது தொல் தாவரவியலாகும் . புதைபடிவங்களிலிருந்து கிடைக்கும் தாவரப் படிமங்களை ஆராய்வது இத்துறையாகும். இது நிலவியல், மானுடவியலின் ஆராய்ச்சிகளுக்கும் உதவக்

கூடியது.

 மிகுந்த பொறுமையும் கடின உழைப்பும் தேவைப்படும் இந்தத் துறையில் உலகப் புகழ் பெற்ற ஆராய்ச்சியாளராக  விளங்கினார் பீர்பல் சாஹ்னி.

 பிரிக்கப்படாத பாரதத்தில், மேற்கு பஞ்சாபில் (தற்போதைய பாகிஸ்தான்) ஷஹரான்பூர் மாவட்டத்தில் உள்ள பெஹ்ரா கிராமத்தில், 1891,நவ. 14-இல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான பேராசிரியர் ருச்சி ராம் சாஹ்னியின் மூன்றாம் மகனாகப் பிறந்தார் பீர்பல் சாஹ்னி. 

 இவரது இல்லத்துக்கு மோதிலால் நேரு, மதன்மோகன் மாளவியா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி வருவர். அதன் காரணமாக, தேசப்பற்றும் நாட்டுக்குச் சேவை செய்யும் எண்ணமும் சிறு வயதிலேயே பீர்பலுக்கு

ஏற்பட்டன.

 பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் (1911) பயின்ற பீர்பல், மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். கேம்பிரிட்ஜில் இம்மானுவேல் கல்லூரியில் தாவரவியலில் பட்டம் (1914) பெற்ற பீர்பல், தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

 அப்போது, உலகப் புகழ்பெற்ற தாவரவியல் விஞ்ஞானியான பேராசிரியர் ஆல்பிரட் செவர்டு வழிகாட்டுதலில் பீர்பல் ஆய்வுகளில் ஈடுபட்டார். துடிப்புள்ள இளைஞனான பீர்பலின் அறிவும் செயல்திறம் செவர்டு தம்பதிக்கு மிகவும் பிடித்துப் போயின; அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதி அன்பு காட்டினர்.

அவரது வழிகாட்டலில் இந்தியாவின் கோண்ட்வானா பிரதேசத்திலுள்ள தாவரங்கள் குறித்த மீள் ஆய்வை பீர்பல் மேற்கொண்டார். புகழ் பெற்ற லாசன்ஸ் தாவரவியல் குறிப்பேடு (கஹஜ்ள்ர்ய்’ள் ற்ங்ஷ்ற்க்ஷர்ர்ந் ர்ய் ஆர்ற்ஹய்ஹ்) அவரால் மீள் ஆய்வு செய்யப்பட்டது. இளம் வயதிலேயே இந்திய தாவர வல்லுநர் என்று பெயரெடுத்தார் பீர்பல்.

உறையில்லாத வித்துத் தாவரங்கள் குறித்த ஆய்வுக்காக பீர்பலுக்கு டி.எஸ்சி. பட்டம் (1919) வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் தாய்நாடு திரும்பினார்.

 1920-இல் சாவித்ரி சூரியை பீர்பல் சாஹ்னி மணம் புரிந்தார். பீர்பல் சாஹ்னியின் தாவரவியல் ஆராய்ச்சிகளில் சாவித்ரி வாழ்நாள் முழுவதும் உடனிருந்தார்; பீர்பல் சென்ற இடமெல்லாம் துணையாகச் சென்று அவரது ஆராய்ச்சிகளுக்குப் பேருதவி புரிந்தார்.

காசியிலுள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றிய பீர்பல் (1920), அடுத்த ஆண்டு, லக்னோ பல்கலைக்கழகத்தில் புதிதாகத் துவங்கப்பட்ட தாவரவியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார். அங்கிருந்த தாவரவியல் ஆய்வுக்கூடம் பீர்பலின் வாழ்க்கையில் முக்கியமான மையமானது. பீர்பலின் ஆராய்ச்சி தொடர்பான மாதிரிகள், நூல்கள், ஆதாரங்களின் ஆவண மையமாக அது மாறியது.

 தாவரவியல், தொல் தாவரவியலில் பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் பீர்பல் எழுதியிருக்கிறார். அவரது தொடர்ந்த ஆராய்ச்சிகளுக்காக 1929-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்  டாக்டர் பட்டம் வழங்கி கெüரவித்தது.

 இந்தியாவில் தொல் தாவரவியல் துறையை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கான கல்வி மையம் உருவாக்கப்பட வேண்டும் என்பது பீர்பலின் கனவு. அதை நனவாக்க தனது வாழ்நாளெல்லாம் இடையறாது பாடுபட்டார்.

 1939-இல் சக விஞ்ஞானிகளுடன் இணைந்து "தொல் தாவரவியல் சங்கம்' என்ற அமைப்பை பீர்பல் நிறுவினார். அந்த சங்கத்தின் தொடர் முயற்சிகளால் 1946, செப். 10-இல் தொல்தாவரவியல் கல்வி மையம் லக்னோவில் துவங்கப்பட்டது. அதன் முதல் இயக்குநராக பீர்பலே பொறுப்பேற்றார்.

நிலவியலிலும் தொல்லியலிலும் ஆர்வம் கொண்டிருந்த பீர்பல் சாஹ்னி, இந்திய நிலவியல் அளவீட்டுக் கழகத்தின் ஆய்வுகளுக்கு உதவி புரிந்தார்.

தாவரவியலில் புகழ்பெற்ற உலக விஞ்ஞானிகளுடன் தொடர்ந்த நல்லுறவை பீர்பல் கொண்டிருந்தார். பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் 1939-இல் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் பல உலக அளவிலான கெüரவங்கள் பீர்பலைத் தேடி வந்தன.

தேசிய அறிவியல் அகாதெமியின் தலைவராகவும் (1937- 1939), இந்திய அறிவியல் காங்கிரஸின் தலைவராகவும் (1940) செயல்பட்ட பீர்பல், 1950-இல் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற சர்வதேச தாவரவியல் காங்கிரஸின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 ஆனால், அவரது இடையறாத உழைப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. 1949- ஏப். 10-இல் பீர்பல் சாஹ்னி காலமானார். அதற்குள் அவரது கல்வி

மையக் கனவு உயிர் பெற்றிருந்தது. அதை அவரது மனைவி சாவித்ரி சாஹ்னி புகழ்பெற்ற நிறுவனமாக வளர்த்தெடுத்திருந்தார்.

 அறிவியலின் ஒரு பிரதானத் துறையாக இருந்தபோதும் வெகுமக்கள் பிரபலம் அல்லாத துறையாக தொல்தாவரவியல் உள்ளது. ஆயினும் அத்துறைக்கு இந்தியாவில் உயிர் கொடுத்த பீர்பல் சாஹ்னியை விஞ்ஞான உலகம் என்றும் மறக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com