வாழுங்கள்... கவலையில்லாமல்!

கவலை இல்லாத மனிதன் இந்த உலகில் எங்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்வில் எதிர்பாராமல் வருகின்ற சிக்கல்களும் அதை கையாளத் தெரியாமல் மனம் தவித்து கவலையுறுவதும் தான், நம்மில் பலரின்
வாழுங்கள்... கவலையில்லாமல்!
Updated on
2 min read

கவலை இல்லாத மனிதன் இந்த உலகில் எங்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்வில் எதிர்பாராமல் வருகின்ற சிக்கல்களும் அதை கையாளத் தெரியாமல் மனம் தவித்து கவலையுறுவதும் தான், நம்மில் பலரின் மிக முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. 

ஒவ்வொரு சூழ்நிலையிலும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நம்மை நாமே தயார்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் எதைத் திட்டமிட்டுச் செய்தாலும் பல நேரங்களில் எதிர்பாராத சிக்கல்களில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். அவ்வாறு எதிர்பாராமல் வரும் சிக்கல்களினால் ஏற்படும் கவலைகளில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள சில யோசனைகள்: 

பொருளாதாரச் சிக்கல்கள்: சாமானியனோ செல்வந்தரோ பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபட திட்டமிடுவது அவசியமாகிறது. மாதச்சம்பளம் பெறுகிறவர்கள் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபட ஓர் இலகுவான யோசனை என்னவென்றால் திடீர் செலவுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு சிறிய தொகையை எடுத்து வைப்பதுதான். 

உடல்நலப் பிரச்னைகள்: இயல்பாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் நமக்கு எதிர்பாராமல் வரும் மற்றொரு பிரச்னை உடல்நலக் குறைவு. இதைச் சமாளிக்க முதலில் நீங்கள் மருத்துவரின் ஆலோசனைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் வராமல் முறைப்படி உடல்நலத்தை பேணுவதன் மூலம் ஆரோக்கியம் சீராக இருப்பதோடு நம் வங்கி இருப்பும் கரையாமல் இருக்கும்.

பொருத்தமற்ற கவலைகள்: இப்போது வன்முறைச் செயல்கள் அதிகரித்துவிட்டன. சின்ன வாக்குவாதம் கூட வன்முறைக்குக் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற வன்முறையால் சில குடும்பங்கள் கூட சிதைந்து விடுவதுண்டு. எனவே எந்த ஒரு விசயத்தையும் கவனமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டும். தேவையில்லாமல் கவலைப்படக் கூடாது. 

போக்குவரத்து சிக்கல்கள்: நம்மில் பெரும்பாலானோர் பயணத்திற்கு கார் அல்லது, பைக்குகளை நம்பிதான் இருக்கிறோம். இந்த நிலையில் நமது வாகனம் எதிர்பாராமல் எந்த நேரத்தில் நமக்கு தலைவலியைக் கொடுக்கும் என்று தெரியாது. ஏதேனும் முக்கியமான பயணத்தில் அல்லது அவசர பயணத்தில் இருக்கும் போது அது பழுதடைந்து நடுவழியில் நின்று சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும். இதுபோன்ற சூழலில் இருந்து தப்பிக்க முறையான வாகனப் பராமரிப்பில் கவனம் வேண்டும். 

கருத்து வேறுபாடு: கருத்துவேறுபாடு என்பது நம் நண்பர்கள் அல்லது உறவினர்களிடையே எந்த நேரமும் ஏற்படக்கூடும். உங்கள் கருத்தை வலியுறுத்திச் சொல்லும் போது பிறர் மனம் புண்படாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். நாம் எப்போதும் பிறரைச் சார்ந்து இருக்க கூடிய ஒரு கூட்டு வாழ்க்கையில் இருக்கிறோம் என்பதை நினைவு கொண்டு உங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். 

உங்கள் கருத்துக்களை பிறர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. எல்லாரிடமும் சுமூகமான உறவைப் பேணுவதின் மூலம் தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து நாம் விடுபடலாம். 

வேலை இல்லை என்ற கவலை: இருக்கும் வேலை இல்லாமல் போகலாம். அல்லது முதலிலேயே வேலை கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்படலாம். அதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் செலவுகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். உங்கள் கையிருப்பைக் கணக்கிட வேண்டும். தேவையற்ற செலவுகளைச் செய்யக் கூடாது. பின்னர் உங்கள் வருமானத்திற்கான வழிமுறைகளைக் கண்டுபிடியுங்கள். வேலை கிடைத்துவிட்டால், ஏற்கெனவே, நீங்கள் வேலை இழந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து ஏற்கெனவே செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். 

இல்லற வாழ்வில் சிக்கல்கள்: இல்லற வாழ்வில் சிக்கல்கள் ஏற்பட்டால் அது உங்கள் பணியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளின் மனதையும் பாதிக்கும். எனவே தம்பதியினர் மனதளவில் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்வது அவசியம். எந்த நேரம் ஏதாவது ஒன்றுக்காக நாம் கவலைப் பட்டுக் கொண்டே இருப்பது தேவையற்றது. கவலைப்படுவதானால் நாம் எதையும் மாற்றிவிட முடியாது என்பதுதான் உண்மை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com