நுண்ணுயிரியியல் துறைக்கு தேசிய விருது!

நுண்ணுயிரியியல் நோய்தடுப்பு அமைப்புக் கல்வி அல்லது நோய்தடுப்பியல் கல்வியை உள்ளடக்கியதே நுண்ணுயிரியியல் துறையாகும். இந்த துறை உலக அளவில் முன்னேறி வரும் துறையாக உள்ளது. 
நுண்ணுயிரியியல் துறைக்கு தேசிய விருது!
Updated on
2 min read


நுண்ணுயிரியியல் நோய்தடுப்பு அமைப்புக் கல்வி அல்லது நோய்தடுப்பியல் கல்வியை உள்ளடக்கியதே நுண்ணுயிரியியல் துறையாகும். இந்த துறை உலக அளவில் முன்னேறி வரும் துறையாக உள்ளது. 
நம்நாட்டு  கல்லூரிகளில் உள்ள  சிறந்த நுண்ணுயிரியியல் துறைக்கு தேசிய அளவில் "சிறந்த நுண்ணுயிரியியல் துறை' என்ற  விருதை  தில்லியுள்ள மைக்ரோபயாலஜிஸ்ட்ஸ் சொசைட்டி என்ற அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருகிறது. இது இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியுள்ள தனியார் நிறுவனம் ஆகும். இந்த விருதினை இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் உள்ள நுண்ணுயிரியியல்துறை   பெற்றுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் சி. அசோக் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
தில்லியில் உள்ள மைக்ரோபயாலஜிஸ்ட்ஸ் சொசைட்டி நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் கலை மற்றும் 
அறிவியல் கல்லூரிகளில் உள்ள நுண்ணுயிரியியல்துறை மற்றும் உயிர் தொழில் நுட்பவியல்துறை ஆகியவற்றுக்கு தேசிய அளவிலான விருதுகளை வழங்கி வருகிறது.மேலும் இந்த அமைப்பு தேசிய அளவிலான சிறந்த விஞ்ஞானி, சிறந்த பேராசிரியர், மூத்த ஆய்வாளர், தனித்துவம் மிக்க தொழில் துறை நுண்ணுயிரியியலாளர்  எனற வகைகளிலும் தேசிய அளவில் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு எங்கள் கல்லூரியில் உள்ள நுண்ணுயிரியியல்துறைக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது. முதலில் இதே நிறுவனம் நடத்திய மாநில அளவிலான விருதுக்கு 2020 அக்டோபர்மாதம் இணையதளம் மூலம் விண்ணப்பித்தோம். அப்போது கல்லூரியில் உள்ள இந்த துறை சார்பில் நடத்தப்பட்ட கரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம், கிராமப்புற மாணவர்களுக்கு உடலில் உள்ள இரும்பு
சத்தின் அளவைப் பரிசோதனை செய்து, இரும்புச் சத்தினை அதிகப்படுத்த தேவையான 
ஆலோசனைகள் வழங்கியது பற்றியும்  விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரிப்பது குறித்த பயிற்சி அளித்தது பற்றியும்  தெரிவித்து, அவை சார்ந்த  ஆவணங்களையும்  இணைத்து அனுப்பினோம்.
அதனைத் தொடந்து மாநில அளவில் சிறந்த உயிரியியல்துறையாகத் தேர்வு செய்யப்பட்டோம்.  தேசிய அளவிலான போட்டியில் அவர்களாகவே எங்களைச் சேர்த்துவிட்டனர். 
இயற்கை உரம் உற்பத்தி செய்யவும், ஆய்வு செய்யவும், பெங்களூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் நேரில் சென்று ஆலையைப் பார்வையிடவும், தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.
இரும்புச் சத்து குறைபாடுகள் குறித்து ஆராய தனியார் மருத்துவ ஆய்வகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம் இரும்புச் சத்து குறைபாடு  காணப்படும் மாணவர்களுக்கு அதனை அதிகரிக்க, அங்குள்ள நிபுணர்கள் விழிப்புணர்வு முகாம் நடத்த முடிந்தது. விவசாயிகளை  கல்லூரிக்கு வரவழைத்து இயற்கை உரம் தயாரிப்பு குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளித்ததோடு அவர்களின்  நிலத்திற்குச் சென்று உரமிடுதல் குறித்த தகவல்களைக் கூறியுள்ளோம். இப்படிப்பட்ட செயல்பாடுகள் மூலம் எங்கள் கல்லூரிக்குச்  சிறந்த நுண்ணுயிரியியல்துறை விருதுகிடைத்துள்ளது. 
இதற்கான அறிவிப்பை அந்த அமைப்பின் விருதுவழங்கும் குழுத்தலைவர் 
எஸ்.டி.பாட்டில், அந்த அமைப்பின் தலைவர் ஏ.எம்.தேஷ்முக்  ஆகியோர் 2020 டிசம்பர் 4 -ஆம் தேதி அறிவித்தனர். தொடந்து அதற்கான சான்றிதழை இணையதளம் மூலம் அனுப்பியுள்ளனர். 
இந்த விருதுபெற்றதன் மூலம் எங்கள் கல்லூரி பேராசிரியர்களுக்கு மிகுந்த ஊக்கமும், இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகமும் ஏற்பட்டுள்ளது'' என்றார் அசோக். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com