சமூக வலைதளங்கள்... தப்பித்து வாருங்கள்!

உலக அறிவைப் பெறுவதற்காக அறிமுகமான வலைதளங்கள், இப்போது பொழுதுபோக்குக்கான சமூக வலைதளங்களாகிவிட்டன. நாளுக்குநாள் சமூகவலைதளங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே
சமூக வலைதளங்கள்... தப்பித்து வாருங்கள்!
Updated on
2 min read


உலக அறிவைப் பெறுவதற்காக அறிமுகமான வலைதளங்கள், இப்போது பொழுதுபோக்குக்கான சமூக வலைதளங்களாகிவிட்டன. நாளுக்குநாள் சமூகவலைதளங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமானோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் சிறுவர்களும், இளைஞர்களும்தான் அதிகம்.

குழந்தைகள் பலரும் இணையத்தில் அதிக நேரம் செலவழிப்பதாகக் கூறும் பெற்றோர்களுக்கே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் உள்ளன. பெற்றோருக்குப் பயந்து ரகசியமாக இணையத்தைப் பயன்படுத்தும் இளைஞர்களின், குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஸ்மார்ட்போனைக் கையில் எடுத்தவுடன் தானாக விரல்கள் முகநூலையோ அல்லது இன்ஸ்டாகிராமையோ நோக்கி படையெடுத்துச் செல்வது நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கம்தான். பொது இடங்களிலும் சரி, பேருந்து, ரயில் பயணங்களிலும் சரி, வீட்டில் இருக்கும்போது கூட அதில் மூழ்கியிருக்கும் அளவுக்கு இன்றைய தலைமுறையினரை இணையம் ஆக்கிரமித்துள்ளது.

உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளவும் அதிகமான தகவல்தொடர்பை ஏற்படுத்தவும், வணிகத்திற்காகவும் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தப்பட்டன. இணையம் வழியாக கல்வியைப் பெறுவதும், வணிகம் செய்வதும் வரவேற்கத்தக்கவையே.

இணையத்தின் பயன்பாட்டை இன்றைய இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும். கல்வி சார்ந்தும் அறிவு சார்ந்தும் இருக்கும் இணையதளங்களை மட்டும் குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் பலரும் இணையத்தையும், சமூக வலைதளங்களையும் கற்றலுக்கான ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் தேவையற்ற விஷயங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம். இதோ சில வழிகள்:

சமூக வலைதளத்திலிருந்து வெளியேறுங்கள்: சமூக வலைதளங்களுக்கு அடிமையான ஒருவருக்கு அதிலிருந்து விடுபடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நாளில் எவ்வளவு நேரம் இணையத்துக்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்று கணக்கிடுங்கள். உங்களுடைய நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு இதுதான் சிறந்த வழி. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் இருந்து வெளியேறிவிட வேண்டும். அல்லது அவற்றை உங்களுடைய பொழுதுபோக்குக்காக அல்லாமல், உருப்படியான செயல்களுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

சுய பரிசோதனை: சமூக வலைதளங்களிலிருந்து உடனே வெளியேற முடியாதவர்கள் நாள் ஒன்றுக்கு நாம் எவ்வளவு நேரத்தை இணையத்தில் செலவழிக்கிறோம் என்பதைக் குறித்து வையுங்கள். அது உங்களின் அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவும் ஒரு கால அட்டவணையைத் தயார் செய்யுங்கள். காலை எழுவதிலிருந்து இரவு தூங்கும் வரை ஒவ்வொரு மணி நேரமாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அந்த ஒரு மணி நேரத்தில் என்ன செய்தீர்கள் என்பதை அதில் நிரப்புங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களின் உயர்வுக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதையும் எழுதிக் கொள்ளுங்கள். நாள் முடிவில் இந்தப் பட்டியலைப் பாருங்கள். வார முடிவிலும் இந்தப் பட்டியலைப் பாருங்கள். உங்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது இதனால் தெளிவாகும். உங்களை நீங்களே நீங்களே மதிப்பீடு செய்வதை விட உங்களைச் செதுக்கும் உளி வேறு ஒன்று இருக்க முடியாது.

சிறப்பு செயலிகள் : கையடக்க ஸ்மார்ட்போனில் நமக்கு வேண்டும் அனைத்தும் கிடைக்கின்றன. ஒரு விஷயத்தை நினைவுபடுத்த, தேவையான தகவல்களைச் சேமித்து வைத்துக் கொள்ள, அறிவுரைகளை வழங்க என பல செயலிகள் உள்ளன. அதேபோல குறிப்பிட்ட சமூக வலைதளங்களை மட்டுமே பயன்படுத்தவும், அவற்றை குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்தவும் நம்மை எச்சரிக்கும் செயலிகளும் உள்ளன. அறிவுப்பூர்வமான விஷயங்களைத் தரும் செயலிகளும் உள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால் இணையத்தில் நேரம் செலவழிப்பது குறையும்.

இணைய நேரத்தைத் திட்டமிடுங்கள்: சமூக வலைதளங்களிலிருந்து வெளியே வந்தாலும் இணைய பயன்பாடு சில நேரங்களில் அவசியம் தேவைப்படுகிறது. படிக்கும் ஒரு மாணவருக்கு பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் கூகுளில் தேடி தெரிந்து கொள்ளலாம்.

ஒருநாள் முழுவதும் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று திட்டமிடும் நாம் இணையத்தில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும். எந்தவொரு சமூக வலைதளமாக இருந்தாலும், நாள் ஒன்றுக்கு இவ்வளவு நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். அதற்காக அலாரம் செட் செய்துகொள்ளலாம்.

இதர செயல்களில் கவனம் செலுத்துங்கள்: வேலை செய்யும் போதோ, கடினமான பாடங்களைப் படிக்கும்போதோ சற்று நேரம் இடைவெளி எடுத்துக்கொள்வது அதன் மீதுள்ள சலிப்பைத் தடுக்க உதவும். இடைவெளி எடுத்துக் கொள்வது தகவல்களை நினைவில் தக்க வைத்துக் கொள்ளவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு இடையேயும் 5 நிமிடம் இடைவெளி எடுத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த 5 நிமிட இடைவெளி நேரத்தில் நடைப்பயிற்சி, இயற்கையை ரசிப்பது, அருகிலுள்ள நண்பர்களுடன் உரையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது நாள் முழுவதும் நம்மைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இணையத் தாக்கத்திலிருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com