மனிதநேயம் இன்னும் இறந்துவிடவில்லை! ருத்திகா சுரஜி
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "தேன்கிண்ணம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் கிருத்திகா சுரஜித். அடிப்படையில் நடனக் கலைஞரான இவர், நடனம், இசை இதைத்தாண்டி


ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "தேன்கிண்ணம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் கிருத்திகா சுரஜித். அடிப்படையில் நடனக் கலைஞரான இவர், நடனம், இசை இதைத்தாண்டி மனிதநேயம் மிக்கவர் என்பதை நிரூபித்திருக்கிறார். சமீபத்தில் சென்னையை புரட்டிப்போட்ட இயற்கை பேரிடரின் போது தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வியப்பில் ஆழ்த்தினார். இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

""கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக "தேன்கிண்ணம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறேன். இது தவிர்த்து, பண்டிகை காலங்களில் பிரபலங்களின் சிறப்பு நேர்காணல்களையும் தொகுத்து வழங்கி வருகிறேன்.
தேன்கிண்ணம் நிகழ்ச்சியைப் பொருத்தவரை நான் மிகவும் விரும்பி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி. பொதுவாகவே எனக்கு பழைய பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம். அதிலும், இந்த நிகழ்ச்சியின் போது அந்தப் பாடல் உருவான கதை, ரெக்கார்டிங்கின்போது நடந்த சுவாரஸ்யங்கள் என ஒவ்வொரு பாடலின் போதும் அந்தப் பாடலைப் பற்றிய தகவலை கூறி வழங்குவது மிகவும் பிடித்திருக்கிறது. இதன்மூலம் நானே நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதுபோன்று இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார் வீட்டு நட்பு கிடைத்தது மறக்க முடியாது. அதன் மூலம் அவருடைய ஒவ்வொரு பிறந்ததினத்தின் போதும் அவருடைய குடும்பத்தினர் நடத்தும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னையே அழைப்பது சந்தோஷமாக இருக்கிறது.
தொடர்களில் நடிப்பதற்கும், மற்ற நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதற்கும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் ஒரு நடன கலைஞர் என்பதால் அதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இதனால் நடிக்கவோ, மற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவோ நேரம் கிடைப்பதில்லை. மேலும் நடிப்பது என்பது ஒரு தனி சானல்.
இதைத்தவிர நடன நிகழ்ச்சிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
தற்போது மார்கழிமாதம் ஆரம்பம் ஆகிவிட்டதால், ஸ்டேஜ் நிகழ்ச்சிகள் அதிகம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மழை சென்னையைப் புரட்டிப் போட்டுவிட்டதால், நடன கலைஞர்களுக்குள்ளே இரண்டுவிதமான கருத்து நிலவி வருகிறது. ஒரு தரப்பில் நடன நிகழ்ச்சிகளும், இசைக்கச்சேரிகளும் நடத்தக் கூடாது என்கின்றனர். மற்றொரு தரப்பில் நிகழ்ச்சிகள் நிச்சயம் நடத்த வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தை, மழையால் பாதித்து தங்களுடைய உடைமைகளையும், வாத்தியங்களையும் இழந்துவிட்டு நிற்கும் கலைஞர்களுக்கு செலவிட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். எனக்கும் இரண்டாவது தரப்பு வாதத்தில் தான் நம்பிக்கை.
ஏனென்றால், மழையின்போது நானும், என் கணவரும், எங்களது நண்பர்களும் சேர்ந்து மழையினால் பாதித்தவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை வழங்கினோம். படித்தவர்கள், வசதியானவர்கள், வறுமை உள்ளவர்கள் என பாரபட்சம் இல்லாமல் மழை அனைவரையும் புரட்டிப்போட்டுவிட்டது. அவர்களை பார்க்கும் போது கண்கலங்கி இரண்டு நாட்கள் தூங்க முடியாமல் தவித்து போனோம். 2 நாட்கள் 500 பேர் வீதம் நண்பர்கள் உதவியுடன் எங்கள் வீட்டில் வைத்து சமைத்து பொட்டலம் போட்டு கொண்டு போய், சைதாப்பேட்டை, வேளச்சேரி பகுதிகளில் எல்லாம் கொடுத்துவிட்டு வந்தோம். மேலும் பேஸ்புக், டிவிட்டர் மூலம் உதவி வேண்டும் என்று கோரியவர்களுக்கும் உதவினோம். அது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. மேலும் வாத்தியங்களையும் உடமைகளையும் இழந்தவர்களுக்காக ஏதாவது செய்ய திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் இந்த வருத்தத்திலும் ஓர் ஆறுதல் என்னவென்றால் பலவித கருத்து வேறுபாடுகள் உள்ள நமது மக்கள், ஒரு பேரிடர் என்று அறிந்ததும். அவரவர் ஒன்று கூடி தங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு வழங்கியதுதான். வெளிநாடுகளில் உள்ள எங்களது நண்பர்கள் சிலர் அங்கிருந்து பணம், பொருள் உதவி செய்ததையும் மறக்க முடியாது. இதைப் பற்றி எல்லாம் சொல்ல வார்த்தைகளே இல்லை. மனித நேயம் இன்னும் இறந்துவிடவில்லை என்பது பெரும் ஆறுதலாக இருந்தது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...