ஸ்மிதாவுக்கும் எனக்கும் போட்டி இருந்து கொண்டே இருந்தது மனம் திறக்கிறார் : ஷபனா ஆஷ்மி
மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டீல் ஒரு வித்தியாசமான நடிகை. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.




மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டீல் ஒரு வித்தியாசமான நடிகை. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். சினிமாவில் நடிக்க வந்தபோது ஜீனத் அமன், பர்வீன் பாபி போல் கவர்ச்சி நடிகையாக விரும்பாமல் கலைப்படங்களில் நடிப்பதையே மிகவும் விரும்பினார்.
""கமர்சியல் படங்களில் நடிக்க தேவையான நடிகைகள் கிடைப்பார்கள். என்னைப் பொறுத்தவரை கலைப் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்'' என்று கூறியதோடு அதை செயல் படுத்தியும் வந்தார். முதன்முதலாக ஷ்யாம் பெனகலின் "சரண்தாஸ் சோர்' (1974) மூலம் அறிமுகமான ஸ்மிதா பாட்டீல் தொடர்ந்து ஐந்தாண்டுகள் சீரியஸôக கலைப்படங்களில் மட்டுமே நடித்தார். பூமிகா ( 1977) மூலம் சிறந்த நடிகைக்கான முதல் தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறந்த படங்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன். நல்ல இயக்குநர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் நான் கமர்சியல் படங்களில் நடிக்க முன் வருவேன் என்று எதிர் பார்க்க வேண்டாம். அப்படி நடிக்க வந்தால் ஸ்மிதா பாட்டீலின் திரையுலக வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே கருதலாம்'' என்று தீர்மானமாக கூறிவந்தவர் பின்னாளில் தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று.

அவர் நடித்த படங்களில் மிக சிறந்தவைகளாக "மன்தான்' ( 1976) "ஜெயிட் ரீட் ரெய்ட்' ( 1977 - மராத்தி) "உம்பர்தா' ( 1982 மராத்தி) "மண்டி' ( 1983) "மிர்ச் மசாலா' ( 1987) ஆகியவற்றை கூறலாம். ஸ்மிதா பாட்டீலுக்கு இணையாக ஷப்னா ஆஷ்மியுடன் நடித்த அர்த் ( 1982) படம் அவருக்கு ஒரு சவாலான படமாக அமைந்தது. அந்தப் படத்தில் இருவரது நடிப்பும் பெரிதும் பாராட்டைப் பெற்றன. அதன்பின்னரே தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்ட ஸ்மிதா பாட்டீல், ""கலைப் படங்களின் மூலம் நல்ல பெயர் கிடைக்கலாம். ஆனால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. என்னை வைத்து படம் தயாரிப்பவர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கலாம். எனக்குத் தேவையான புகழை நானே தேடி கொள்ள முடியும்'' என்று கூறியதோடு, கமர்சியல் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
"தர்த்கா ரிஷ்டா', "நமக்ஹலால்', "சக்தி' ஆகிய 3 படங்கள் ( 1982) ஒரே ஆண்டில் வெளியாயின. பெண்ணுரிமைக்கு ஆதரவாக அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை இவர் கூறுவதுண்டு தன்னைப் பற்றிய விமர்சனங்களைப் பற்றி கவலைப் படுவது இல்லை. "" என்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் என்றுமே கருதியதில்லை. எல்லா நேரத்திலும் நான் நல்லவளாகவே இருக்க வேண்டுமென்று நினைத்தால் என்னுடைய திறமை யந்திர வாழ்க்கை போலாகி விடும்'' என்பார்.
இவர் நடித்த காலத்தில் உடனிருந்த பாலிவுட் நடிகைகள் போல் ஒரே மாதிரியான பாத்திரங்களை ஏற்று நடிக்க இவர் பொருத்தமற்றவராகவே கருதபட்டார். "பூமிகா' ( 1977) "சக்கரா' ( 1980) ஆகிய படங்களில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், ஏழுமுறை பிலிம்பேர் விருதும், 1985- ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் பெற்ற இவரைப் பற்றி ஷப்னா ஆஷ்மி ""காமிராவுக்கென்றே பிறந்தவர் இவர்'' என்று குறிப்பிடுவதுண்டு.
"நிஷாந்த்', "அர்த்', "மண்டி', "ஊஞ்ச் நீச் பீச்' ஆகிய நான்கு படங்களில் ஷப்னாவுக்கு ஸ்மிதாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு நடிப்போம். நாங்கள் இருவருமே ஒரே மாதிரியான சினிமாவில் ஒரே காரணமாக இருக்கலாம். ஒரே மாதிரியான சினிமாவில் ஒரே டைரக்டரிடம் நடித்தவர்கள் என்ற பெருமையும் எங்களுக்கு உண்டு. இன்றும் ரசிகர்கள் மனதில் "ஷப்னா பாட்டீல், ஸ்மிதா ஆஸ்மி' என்று குறிப்பிடுமளவுக்கு எங்கள் பெயர் நிலைத்திருக்கிறது. அவர் இறந்து 29- ஆண்டுகளாகிவிட்டன. இன்று கமர்சியல் சினிமாவுக்கு இணையாக உள்ள கலைப் படங்கள் அவரது பெயரை குறிப்பிடாமல் இருப்பதில்லை.
நாங்கள் இருவரும் எப்போதுமே நண்பர்களாக இருந்ததில்லை. எங்களுக்கும் போட்டி இருந்து கொண்டே இருந்தது. இதற்கு சில மீடியாக்களும் காரணமாக இருந்தன. எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளில் சிலது உண்மையாகவும் இருந்திருக்கலாம். அவரைப்பற்றி கூறிய கருத்துகளுக்காக நான் வருத்தப்பட்டதும் உண்டு. இருவரையும் ஒன்று சேர்க்க சிலர் முயற்சித்தாலும் எங்களுக்குள் இருந்த பொது உணர்வை காப்பாற்ற முயற்சித்தோமே தவிர நண்பர்களாக இருக்கலாம் என்ற உணர்வு எங்களுக்குள் தோன்றவில்லை'' என்று ஷபனா ஆஷ்மி அண்மையில் கூறியுள்ளார்.
"" "பீகி பால்கன்' ( 1982) படப்பிடிப்பின் போதுதான் முதன்முதலாக ராஜ்பப்பர் இவருடன் நடித்தார். தொடர்ந்து "ஜவாப்', "மேராகர் மேரா பச்சே' ( 1985) "தீஸ்ரா கினாரா', "தாலிஸ்' (1986) ஆகிய படங்களில் ஸ்மிதா அவருடன் இணைந்து நடித்தார். ""முதல் படத்திலேயே எங்களுக்குள் ஏற்பட்ட சிறு உரசல் எங்களுடைய காதலுக்கு அஸ்திவாரமாக அமைந்தது'' என்று ராஜ்பப்பர் கூறினாலும், அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பதால் ஸ்மிதாவுக்கு அவரை திருமணம் செய்து கொள்வதில் தயக்கமிருந்தது. ஆனால் ராஜ்பப்பரின் மனைவி நதிரா இவர்கள் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
""ஸ்மிதா என்னுடைய கணவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியுமென்று கருதினால் அது எனக்கும் மகிழ்ச்சிதான்'' என்றாராம்.
ஆனால் இவர்களது மண வாழ்க்கை நீடிக்கவில்லை. பிரசவத்தின் போது அவரது மகன் பிரதிக் பிறந்தவுடன் இருவாரங்கள் கழித்து ஏற்பட்ட உடல் நல பிரச்னை காரணமாக 1986 - ஆம் ஆண்டு டிசம்பர் 13 தேதி ஸ்மிதா காலமானார். அவரது நினைவாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் போது 2013-ஆம் ஆண்டு மே 3-ஆம்தேதி இந்திய தபால்துறை அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...