வாழைத்தண்டு பச்சடி
தேவையான பொருள்கள்:
வாழைத்தண்டு - 1 துண்டு
இஞ்சி - 10 கிராம்
புளிக்காத தயிர் - 1 டம்ளர்
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாழைத்தண்டு, இஞ்சி, கொத்துமல்லி மூன்றையும் சிறியதாக வெட்டிக் கொள்ளவும். அதில் புளிக்காத தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால் வாழைத்தண்டு பச்சடி தயார். இந்த வாழைத்தண்டு பச்சடி உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். சிறுநீரகத்துக்குச் சிறந்தது. குழந்தைகள் விரும்பி உண்ணும் சிறந்த உணவு.
•••
எலுமிச்சை புதினா ஜுஸ்
தேவையான பொருள்கள்:
எலுமிச்சை - 1
புதினா - 1 கைப்பிடி
செய்முறை: புதினா, எலுமிச்சை சாறு இரண்டையும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, உப்பு அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இது வெயிலுக்கு ஏற்ற சுவையான பானம். தவிர, வெறும் எழுமிச்சை சாறுடன் இஞ்சி விழுதைச் சேர்த்தும் அருந்தலாம்.
•••
வெள்ளரிக்காய் பச்சடி
தேவையானப் பொருள்கள்:
தயிர் - 1 கிண்ணம்
வெள்ளரிக்காய் - 1
மாங்காய் - சிறிது
தக்காளி - 1
செய்முறை: வெள்ளரிக்காய், தக்காளி, மாங்காய் ஆகியவற்றை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதைத் தயிரில் சேர்த்து சிறிது நேரம் கழித்துப் பரிமாறலாம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்க சிறந்த வழி.
••••
மசாலா மோர்
தேவையான பொருள்கள்:
மோர், சீரகம், குருமிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: சீரகம், இஞ்சி, குருமிளகு, பச்சைமிளகாய் மூன்றையும் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை மோரில் சேர்த்து சிறிது நேரம் கழித்து அருந்தலாம்.
•••
கேரட் பக்கோடா
தேவையானவை:
கேரட் : 200 கிராம்.
கடலைப்பருப்பு - 100 கிராம்
மிளகாய் வற்றல் - 6
ரவை - 1 மேசைக் கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகுப் பொடி - இரண்டு சிட்டிகை
வெங்காயம் பெரியது - 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: முதலில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊற வைத்து பின்னர் நீரை வடிகட்டிவிட வேண்டும். பருப்பில் மிளகாய் வற்றல், சோம்பு போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர்,பருப்புக்கலவையுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், ரவை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து உதிரியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்த மாவை உதிரி உதிரியாகக் கிள்ளிப் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.
••••
கேரட் பிரதமன்
தேவையானவை:
கேரட் - 1/4 கிலோ
வெல்லம் - 1/4 கிலோ
தேங்காய் - 2
நேந்திரம்பழம் - 1
செய்முறை: தேங்காயைத் துருவி மூன்றுமுறைப் பாலை தனித்தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டைத் துருவி நன்றாக வேக வைத்து வெல்லத்தைப் போட வேண்டும். வெல்லம் வாசனைப் போன பிறகு இரண்டாவது, மூன்றாவது பாலைவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் பழத்தை நறுக்கிப் போட வேண்டும். பின் முதன் முதலாக எடுத்த தேங்காய்ப் பாலை விட்டு ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்க வேண்டும்.
••••
வெள்ளரி தூத்பேடா
தேவையானவை:
நடுத்தரமான வெள்ளரிக்காய் - 400 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 100 கிராம்
மைதாமாவு - 100 கிராம்
கெட்டிப்பால் - 400 மில்லி
வெள்ளரிவிதை - 1 மேசைக்கரண்டி
வென்னிலா எசன்ஸ் - சில துளிகள்
பச்சைக் கலர் - சில துளிகள்
செய்முறை : வெள்ளரிக் காய்களைக் கழுவித் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வெள்ளரி விதைகளை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். மைதாமாவை லேசாக வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலை வாணலியில் கொதிக்க விட்டு வெள்ளரி விழுதைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பால்வற்றி விழுது சுருண்டு வரும் பொழுது பாதி நெய்யைவிட்டு கிளற வேண்டும். சர்க்கரையைச் சேர்த்து நிதானமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும். சர்க்கரை நன்கு சேர்ந்து தளதள என்று கொதிக்கும்போது மைதாவைப் போட்டுக் கட்டித் தட்டாமல் கிளறி பாக்கி நெய்யை விட வேண்டும். கலர், எஸன்ஸ் சேர்க்க வேண்டும். ஒன்றாகச் சேர்ந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிய உருண்டைகளாகச் செய்து பேடா மாதிரி தட்டி வெள்ளரி விதைகளைத் தூவ வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.