

எட்டு வயதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பத்தாம் வயதில் பிளஸ் டூவில் வெற்றி பெற்று, பதிமூன்றாம் வயதில் இதழியல் படிப்பில் பட்டம் பெற்று, பதினைந்தாம் வயதில் மக்கள் தொடர்பில் முதுநிலைப் பட்டத்தைத் தனதாக்கி, பதினேழாம் வயதில் "விளையாட்டு துறையில் மேலாண்மை' என்ற தலைப்பில் டட்.ஈ ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதுடன், விளையாட்டிலும் தேசிய அளவில் சாம்பியனாகவும், பியானோ வாசித்துப் பாடவும், இரண்டு கைகளால் ஒரே சமயத்தில் எழுதவும், இருபத்தைந்து நிமிடங்களில் ஹைதராபாத் பிரியாணி சமைக்கும் திறமையும், இரண்டு நொடிகளுக்குள் அ முதல் ழ வரை டைப் செய்யும் வேகமும், தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், கவிதை பழமொழிகளைச் சரளமாக சொல்லி மூன்று மொழிகளில் சொற்பொழிவுகளில் அசத்துவதுமான திறமைகள் பதினேழு வயதில் ஒருவரிடம் இருப்பது சாத்தியமா?
இத்தனை திறமைகளுடன் இருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த நைனா ஜெயஸ்வால்.
"நான் பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்குப் போகவில்லை. வீட்டில் பெற்றோர் தான் சொல்லிக் கொடுத்தனர். ஆந்திர கல்வி வாரியம் என் வயதைக் காரணம் காட்டி பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்தியாவில் நடத்தும் பள்ளித் தேர்வில் பங்கேற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பிறகு கல்லூரியில் சேர்ந்து முதுநிலை வரை படித்தேன். வீட்டில் இருக்கும் போது இரண்டு கைகளாலும் எழுத ஆரம்பித்தேன். விரைவாக டைப் செய்யவும் பழகினேன்.
அப்பா, தாத்தா இருவரும் டேபிள் டென்னிஸ் விளையாடுவார்கள். தலைமுறை தலைமுறையாக விளையாடி வருகிறோம். என் அடுத்த இலக்கு ஒலிம்பிக். இசையையும், பியானோ வாசிக்கவும் அப்பாதான் கற்றுக் கொடுத்தார். ஆசிரியரான என் அப்பா 2008-ஆம் ஆண்டு முதல் வேலையை விட்டுவிட்டு எனக்கு முழு நேர பயிற்சியாளராக மாறிவிட்டார்.
- வல்லபி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.