""எனது பெற்றோர் தந்த ஊக்கத்தால் 6 வயதில் நீச்சல் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். இதுவரையில் பல்வேறு தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்றிருக்கிறேன். எதிர்காலத்தில் இந்தியா சார்பாக சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்பேன். ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை'' என உற்சாகமாகப் பேசுகிறார் மதுமிதா ஸ்ரீராம்.
2019-இல் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் என பாராட்டப்பட்ட மதுமிதா, அதே ஆண்டு மேட்டுப்பாளையத்தில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தென் மண்டல நீச்சல் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்கள், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிடையே நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று பல்வேறு பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார்.
மதுமிதா குறித்து அவரது தந்தை ஸ்ரீராம் கூறியது:
""மதுமிதாவை நீச்சல் கற்க அனுப்பியபோது எங்களுக்கு அவளை நீச்சல் போட்டியாளராக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. வாழ்க்கைக்கு அவசியம் என்பதால் அவளையும், அவளது அக்கா மானசாவையும் சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் நீச்சல் வகுப்பில் சேர்த்தோம். அங்கே மதுமிதா நீச்சலடிப்பதைப் பார்த்து பன்னீர்செல்வம் என்ற நீச்சல் கோச், அவளை நீச்சல் போட்டியாளராக்க உற்சாகமளித்தார். 7 வயதிலேயே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்கள் குவிக்கத் தொடங்கி விட்டாள். அவளது 9-ஆவது வயதில் 2012-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்றாள். அதிலிருந்து அனைத்துப் போட்டிகளிலும் அவளுக்கு வெற்றிதான்'' என்று பெருமிதம் பொங்கப் பேசுகிறார் ஸ்ரீராம்.
விளையாட்டு வீரர்களை கெüரவப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அளிக்கப்படும் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகையையும் பெற்று வரும் மதுமிதா, கடந்த ஜனவரி மாதம் குவாஹாட்டியில் நடந்த கேலோ இந்தியா தேசிய போட்டிகளில் தமிழகம் சார்பில் கலந்துகொண்டார். சர்வதேச நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள அரவிந்த் நயினார் என்பவர், தற்போது மதுமிதாவின் பயிற்றுநராக இருக்கிறார். அவரைப் போல சர்வதேச அரங்கில் வெற்றி பெற வேண்டும் என்பது மதுமிதாவின் இலக்கு. நீச்சல் போட்டிகளுக்காக நாட்டின் பல ஊர்களுக்குச் சென்றுவரும் மதுமிதா, படிப்பிலும் முதலிடங்களைப் பிடிக்கத் தவறுவதில்லை. தற்போது சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பால பவன் சீனியர் செகண்டரி பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
சர்வதேச உறவுகள் குறித்த பட்டப்படிப்புகளில் சேர வேண்டும் என்பதே தனது
விருப்பம் என்கிறார்.