சின்னத்திரை தொடர்கள்... திண்டாட்டத்தில் தயாரிப்பாளர்கள்!
தனியார் தொலைக்காட்சிகள் எல்லாம் பெரும்பாலும் தொடர்களை நம்பியே பயணித்து வந்தது.


தனியார் தொலைக்காட்சிகள் எல்லாம் பெரும்பாலும் தொடர்களை நம்பியே பயணித்து வந்தது. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும், குறைந்தது 20 தொடர்களாவது தினமும் ஒளிப்பரப்பாகி வந்த நிலையில், கரோனாவினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும், தொடர்களின் படப்பிடிப்பு எல்லாம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது தளர்வு ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்தில் 20 பேருக்கு மேல் இருக்கக்கூடாது, இண்டோரில்தான் நடத்தவேண்டும், கேரவனில் ஏசி போடக்கூடாது போன்ற சிலபல நிபந்தனைகளுடன் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், அரசு அனுமதியளித்தும் இதுவரை எந்தவொரு தொடரின் படப்பிடிப்பும் தொடங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம், என்று சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளரான நடிகை ராதிகா சரத்குமாரிடம் விசாரித்தோம். அவர் கூறியதாவது:
""ஷூட்டிங் தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்திருப்பது உண்மைதான். ஆனால், தற்போது அனுமதி கிடைத்தும் ஷூட்டிங் தொடங்குவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், ஷூட்டிங்கை தொடங்க முடியாமல் இருக்கிறோம். காரணம், 20 பேரை மட்டுமே வைத்து ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.
பொதுவாக, ஒரு தொடர் தயாராகும்போது, ஒருநாள் ஷூட்டிங்கில் 100 பேர் வரை வேலை செய்வார்கள். அப்படியில்லாமல், மிகமிகக் குறைந்தபட்சமாகப் பார்த்தாலும், ஒரு நாள் சூட்டிங்கில் 7-8 பேர் வரை நடிகர், நடிகைகளே இருப்பார்கள். அவர்களுடைய உதவியாளர்கள் அவர்களுடன் இருப்பார்கள். இவர்களைத்தவிர, டெக்னிஷியன்கள் இருப்பார்கள். எனவே, குறைந்தது 40-50 பேராவது கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அதேபோன்று நிறைய நடிகர், நடிகைகள் வெளியூரிலிருந்து வருபவர்கள், அவர்கள் சென்னை வரும்போது, அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது. அப்படியே அவர்களை வீட்டிலேயே தனிமையாக இருக்கச் சொன்னாலும், அவர்கள் தங்குவதற்கு இடம் வேண்டும். தற்போது அவர்களை தங்க வைக்க ஓட்டல் அறைகளும் கிடைக்காது. பெரும்பாலும் பூட்டிக் கிடக்கின்றன. அதுபோன்று ஒவ்வொரு ஷூட்டிங் நடக்கும் லோகேஷனும் வெவ்வேறு இடங்களில் இருக்கிறது. அந்த இடங்களில் சில இடங்கள் கரோனா ரெட் சோனில் இருக்கின்றன. எனவே, இடத்தின் உரிமையாளர்கள் வாடகைக்கு விட மறுக்கிறார்கள். வேறு இடத்தைப் பார்த்தால் கன்டினியூட்டி வராது.
இதைத்தவிர, நடிகர், நடிகைகளே ஷூட்டிங் ஸ்பாட்க்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அதிலும், 60 வயதைத் தாண்டியவர்கள் ஷூட்டிங் வர மறுக்கிறார்கள். அதுபோன்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் டிரஸிங் செய்பவர்கள் நடிகர், நடிகைகளுக்கு கரோனா இருந்தால் என்ன செய்வது என்று பயப்படுகிறார்கள். ஆர்ட்டிஸ்ட்கள் டெக்னிஷியன்களுக்கு கரோனா இருந்தால் என்ன செய்வது என்று பயப்படுகிறார்கள்.
இதையெல்லாம்தாண்டி, யூனிட்டில் யாருக்காவது கரோனா வந்துவிட்டால், அரசாங்கத்திற்கு 40 லட்ச ரூபாய் அபாரதம் கட்ட வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.
பெப்சி அமைப்பு என்ன சொல்கிறது என்றால், "தொழிலாளர்கள் வேலையில்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். எனவே, குறைந்தது 30 பேருக்காவது கண்டிப்பாக வேலை தர வேண்டும். தவிர, ஷூட்டிங்கில் கலந்து கொள்பவர்களுக்கு தயாரிப்பாளர்கள் செலவில் இன்ஸ்சூரன்ஸ் எடுத்துத் தர வேண்டும்' என்று சொல்கிறார்கள். அவர்கள் கேட்பது நியாமானதாக இருந்தாலும், டிவி, ஷூட்டிங்கில் எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில், இது எல்லாம் கட்டுப்படி ஆகாத நிலையிருக்கிறது.
இந்நிலையில், அனுமதி கிடைத்தாலும் இதையெல்லாம் சரிசெய்து, ஷூட்டிங் தொடங்க வேண்டும் என்றால், குறைந்தது இன்னும் ஒரு மாதத்திற்கு மேல்தான் ஆகும்.
இதற்கிடையில் பெப்சி அமைப்பு, 20 பேர் என்ற எண்ணிக்கையை உயர்த்தி உத்தரவிடவும், அப்படியே மேலும் சில தளர்வுகள் கேட்டும் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. இது ஒரு புறமிருக்க..
ஜூன், ஜூலை மாதங்களில் கரோனா சென்னையில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் தொடங்குவது என்பது இப்போதைய சூழலில் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...