40 ஆண்டுகளாக திறக்காத கோயில்!
பிரியா பாஸ்கரன். காஸ்ட் அக்கவுண்டிங் முடித்துவிட்டு, இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்டு, சுத்தம், சுகாதாரம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள "சானிடேஷன் ஃபர்ஸ்ட்' என்ற பன்னாட்டுத் தொண்டு


பிரியா பாஸ்கரன். காஸ்ட் அக்கவுண்டிங் முடித்துவிட்டு, இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்டு, சுத்தம், சுகாதாரம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள "சானிடேஷன் ஃபர்ஸ்ட்' என்ற பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றும் தமிழ்நாட்டுப் பெண்மணி. ஆனால் பல்வேறு கோயில்களுக்கும் சென்று, தான் கண்டதை முகநூல் மற்றும் பிளாக் மூலம் "ஆலயம் கண்டேன்' என்ற தலைப்பில் ஆன்மிக அன்பர்களோடு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பகிர்ந்து கொள்பவர். அவரது எழுத்துக்குக் கிடைத்த மகத்தான வரவேற்பின் காரணமாக, "ஆலயம் கண்டேன் அறக்கட்டளை' என்ற அமைப்பினை உருவாக்கி, பல்வேறு கோயில்களுக்கும் சிறு அளவில் உதவிகள் செய்து வருகிறார். இவரது ஆன்மிக செயல்பாட்டுக்காக ரோட்டரி சங்க விருது பெற்றவர்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் பிரியா பாஸ்கரனுடன் ஒரு பேட்டி:
உங்களைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்?
என் அப்பா பின்னி மில்ஸில் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவருக்கு பணி மாற்றம் இருக்கும். எனவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நான் வளர்ந்தேன். அப்பாவுக்கு, பல்வேறு ஊர்களுக்கும் பயணிப்பது மிகவும் பிடிக்கும். எங்கு சென்றாலும் குடும்பத்துடன் செல்வார். ஆகவே, நான் இந்தியாவெங்குமாக பல கோயில்கள், சுற்றுலாத்தலங்களுக்குச் சென்றிருக்கிறேன். எனவே, பயணம் என்னுடைய ரத்தத்தில் இறண்டறக் கலந்துவிட்ட ஒன்று. ஆனால் எனது ஆர்வமெல்லாம் அதிகம் அறியப்படாத பழைமையான, சிறிய கோயில்கள்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம், கோயில் தரிசனத்துக்குப் புறப்பட்டு விடுவேன்.
கோயில்கள் குறித்த தகவல்களை சமூக ஊடகம் மூலமாக பகிர்ந்துகொள்ளும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
பல்வேறு கோயில்களுக்கும் செல்லும்போது, அங்கே உள்ளவர்களிடம் பேசி, அந்தக் கோயில்கள் குறித்த பல்வேறு ஆதாரபூர்வமான தகவல்களை சேகரிப்பதும், புகைப்படங்கள் எடுப்பதும் எனது வழக்கம். அது குறித்து எனக்குத் தெரிந்த உறவினர்கள், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன். நாம் தெரிந்துகொண்ட அதிகம் அறியப்படாத கோயில்களைப் பற்றி சமூக ஊடகம் மூலாக பக்ரிந்துகொண்டால், பலருக்கும் உபயோகமாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றியது. எனவே, முகநூல் மூலமாக புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆனால், ஒரு பிளாக் துவங்கி, அதில் தகவல்களைப் பதிவிட்டால் பலருக்கும் நிரந்தர பயன் தருமே என்று தோன்றியது. 2010-இல் என் பதிவுகளை ஆரம்பித்தேன்.
கூவம் நதிக்கரை கோயில்கள் குறித்த உங்கள் ஆய்வு பற்றி சொல்லுங்களேன்?
கூவம் என்பது சாக்கடை நீர் பாயும் ஒரு நீர்வழி என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் என்ற கிராமத்தில் துவங்கி, சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் ஓடி வங்கக்கடலில் கலக்கும் நதிதான் கூவம். அதன் கரையில் வழி நெடுக ஏராளமான கோயில்கள் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவற்றில் பல பல்லவ, விஜயநகர, சோழ மன்னர்களால் கட்டப்பட்டவை. பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்ற பெருமைக்குரியவை. சில ஆண்டுகளுக்கு முன்பு, "சென்னை தினம்" கொண்டாட்டத்தின்போது கூவம் நதியை ஒட்டி அமைந்துள்ள சில கோயில்களைப் பற்றி பேசச் சொன்னார்கள். அதன் பிறகு எனக்கு ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, கூவம் நதிக்கரையை ஒட்டி நெடும்பயணம் மேற்கொண்டு, 113 கோயில்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவற்றைத் தொகுத்து "புனித கூவம் நதிக்கரை கடவுள்கள்" என்ற புத்தகமாக வெளியிட்டோம். அதில் பலரும் அறியாத ஏராளமான அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, கூவம் கிராமத்திலேயே, திருப்புராந்தகர் கோயில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற ஊர் அது.
ஆலயம் கண்டேன் அறக்கட்டளையின் பணிகள் பற்றி?
நான் பல்வேறு கோயில்களையும் பற்றி எழுதுவதை ஏராளமானவர்கள் படிக்கிறார்கள். அவற்றில் பல கோயில்கள் சிதிலமடைந்து, அன்றாட பூஜைக்கே வசதியில்லாதவை. கோயிலின் பழம் பெருமைகளையும், அவற்றின் இன்றைய நிலையையும் புகைப்படங்களோடு பார்க்கும், படிக்கும் பலர், மிகவும் மன வேதனைப் பட்டு, நாங்கள் அந்தக் கோயில்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறோம் என ஆர்வத்துடன் முன்வந்தார்கள். கோயில்களை புதுப்பித்துக் கட்டிக் கொடுப்பது என்றால் அது பல லட்சம் ரூபாய் தேவைப்படும் பெரும் பணி. அவற்றை எடுத்துக்கொண்டு செய்து முடிப்பதிலும் பல்வேறு வகையான சிக்கல்கள் வரக்கூடும். எனவே, கோயில்களின் சிறு தேவைகளுக்கு மட்டும் ஆர்வம் உள்ளவர்களின் துணையோடு உதவுவது என முடிவு செய்தேன். அதன்படி கோயிலின் மின்சாரக் கட்டணம் செலுத்துவது, குடிநீர் வசதி, ஆழ்துளைக் கிணறு, இன்வர்ட்டர் வசதி போன்ற உதவிகளைச் செய்து கொடுக்கிறோம். நெற்குன்றத்தில் வரதராஜ பெருமாள் கோயில் ஒரு குடிசையில் அமைந்திருந்தது. அதன் நிலை கண்டு வேதனையடைந்த அன்பர்களின் உதவியோடு சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டி சிறு கோயிலாக அதனை அமைத்துக் கொடுத்தோம். சில கோயில்களுக்கு நிதி திரட்டி, வங்கியில் டெபாசிட் செய்து, வட்டியில் நித்திய பூஜைகளுக்கு உதவிட ஏற்பாடு செய்திருக்கிறோம்.
ஸ்தலபுராணப் பணி பற்றி?
நான் கோயில்களுக்குச் சென்று சேகரிக்கும் ஊரின் சிறப்பு, கோயிலின் வரலாறு மற்றும் தனித்துவமான விஷயங்கள், எப்படி அங்கே செல்வது, கோயிலில் நடைபெறும் உற்சவங்கள், திருவிழாக்கள், கோயில் திறந்திருக்கும் நேரம், கோயில் தொலைபேசி எண், இணைய முகவரி போன்ற தகவல்களை எனது ஆலயம் கண்டேன் இணைய தளத்தில் பதிவு செய்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை, ஏதாவது ஒரு கோயிலின் தகவல்களைத் தொகுத்து சிறு புத்தகமாக ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு, அந்தக் கோயிலுக்குக் கொடுக்கிறேன். அவர்கள் அதனை இலவசமாக வினியோகிக்கிறார்கள்.
உங்களின் மறக்க முடியாத கோயில் விசிட் எது?
"நிறைய சொல்லலாம். கேசாவரம் என்ற கிராமத்தில் கோயிலே கண்ணுக்குத் தெரியாமல் புதர் மண்டிக் கிடந்தது. கோயிலுக்குச் செல்லும் வழியை ஆக்கிரமித்து, கத்தரித்தோட்டம் போட்டிருந்தார்கள். தாராபுரம் பகுதியில் தச ஆஞ்சநேயர் தரிசனம் (பத்து கோயில்கள்) செய்தது நெகிழ வைத்த அனுபவம். அவற்றுள் ஒன்று நாற்பது ஆண்டுகளாக திறக்கப்படவே இல்லை. அந்தக் கோயிலை திறக்கச் செய்து, ஆஞ்சநேயரை தரிசனம் செய்ததை இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...