காதல் திருமணமானாலும், வீட்டார் ஏற்பாடு செய்த திருமணமாக இருந்தாலும் சரி , திருமணம் நடந்த சில காலங்கள் வசந்த காலங்கள் தான். ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்வதிலும், குடும்பத்தினரை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதிலும் தன்னை பெரிய ஆளாகவும் நல்லவராகவும் சித்தரிப்பதிலும் சிறிது காலம் கடந்து விடுகிறது.
நாளடைவில் தம்பதியர் இருவருக்கும் நடுவில் பெரிய விரிசல் உருவாகி மோதலாக உருவெடுக்கிறது. இருவரும் மாறி மாறி காயப்படுவது மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளையும் காயப்படுத்தி விரிசல் பெரிதாவதை கண்கூடாக காணலாம்.இன்றைய காலத்தில் தம்பதியர் உடனடியாக நீதிமன்றம் செல்வதை நாகரீகமாக கொண்டாடுகிறார்கள்.
பல குடும்பங்கள் பேச்சு வார்த்தை இல்லாமல் கடமைக்காக ஒரே வீட்டில் முகம் பார்க்கக்கூட பிடிக்காமல் வாழக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளி விடுகின்றனர். போகப்போக வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுகிறது. உறவுகளுக்குள்ளே இடைவெளி உருவாகிறது. இதை "ஞ்ழ்ங்ஹ் ஹழ்ங்ஹ" என்று சொல்வார்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தான் இன்றைய காலகட்டத்தின் டிஜிட்டல் தலையீடான முகநூல், வாட்ஸ்அப் போன்ற இணையதளங்கள் மூலமாக அறிமுகமாகும் - அறி முகம் இல்லாத நபர்கள் ஊடே நுழைந்து... அழகைப் பாராட்டுவதும், அக்கறையாய் பேசுவதும்... பணம் மற்றும் உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறுவதும்.. பலரின் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறது. இம்மாதிரி நேரங்களில் பணத்துக்காக ஏமாற்றும் கூட்டத்தின் வலையில் கூட பல பெண்கள் சிக்கிக்கொள்வதை கேள்விபட்டிருக்கிறோம்.
ஏற்கெனவே "இப்படி செய்திருக்கலாம். "அப்படி நடந்திருக்ககூடாது, மன்னிப்பு யார் முதலில் கேட்பது ?' " நான் ஏன் இறங்கி போக வேண்டும்' என்றெல்லாம் குமைந்து கொண்டிருக்கும் மனம் எதையும் யோசிக்காமல் தம்பதியரிடையே உள்ள இடைவெளியில் மூன்றாவது நபர் வந்து நுழைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ரகசியமாக தொடங்கும் நட்பு தம்பதியர் பிரிகிற அளவிற்கு மிகப்பெரிய குளறுபடியையும் உருவாக்குகிறது.
உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்கும்போது மூளை முழுவதுமாக செயல்படுவதில்லை. எனவே முடிவுகள் அறிவுபூர்வமாக இல்லாமல் உணர்வு பூர்வமாகவே இருக்கிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. சில நேரங்களில் குழந்தைகள் பிறந்த பிறகு கூட தம்பதியரிடையே இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. அது குழந்தைகளின் ஆளுமையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பு உணர்வு இல்லாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
தினந்தோறும் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள் வரும் தலைமுறையினருக்கு திருமணத்தில் நம்பிக்கையில்லாமல் போகும் அளவிற்கு சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. திருமணம் செய்யவே பயப்படும் பல இளம் தலைமுறையினர் திருமண பந்தம் இல்லாமல் வாழ்க்கை நடத்தும் கலாசார சீரழிவையும் கண்டு பல நேரங்களில் வலியுடன் கடந்து போகவேண்டியுள்ளது.
சந்தோஷமான திருமண வாழ்க்கை வாழ பின்வரும் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும்:
திருமணத்திற்கு முன்பாக ஆணும் பெண்ணும் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் தயாராக வேண்டும். பணத்தை ஆடம்பரத்துக்காக செலவு செய்யும்போது அதற்கான தயாரிப்பு பயிற்சி வகுப்புகள் இப்போது பல இடங்களில் நடைபெறுகிறது. அதற்காக நேரம் ஒதுக்கி செல்வது அவசியம்.
வாழ்க்கை துணையை மட்டுமல்ல; புதிய ஒரு குடும்பத்தையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க மனதை தயார் செய்தல் வேண்டும்.
வாழ்க்கையில் பணத்துக்கு மட்டுமல்ல; குடும்ப உறவுகளுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையே சிறிய விரிசல் ஏற்படும் போதே மற்றவர்களை உள்ளே விடாமல், அதை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரச்னை என்று வந்து விட்டால் இருபக்க உறவுகளிடமும் ஆலோசனை கேட்காமல் நடுநிலையோடு சிந்திக்க கூடிய அல்லது பேசக்கூடிய ஒரு நபரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.
மன்னிப்பு கேட்க வேண்டிய இடத்தில் "மன்னிப்பு' கேட்பதும் நன்றி சொல்ல வேண்டிய இடத்தில் "நன்றி' சொல்வதும் மனம் விட்டு பேசுவதும் உறவை வளர்ப்பதற்கு சிறப்பான பங்களிப்பாக இருக்கும்.
தினமும் ஒரு முறையாவது சமையலையோ , உடையையோ பரஸ்பரம் பாராட்டுதல் மிகச் சிறந்த பலன் தரும்.
கணினி அல்லது கைபேசியில் மட்டுமே நேரத்தை செலவிடாமல் உண்மையான உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இருவரும் சார்ந்த எல்லா விஷயங்களுக்கும் முறையான கருத்து பரிமாற்றம் திட்டமிடல் வேண்டும்.
குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்னையின்போது தாம்பத்ரிய உறவைப் பற்றிய கொச்சையான பேச்சுகளை தவிர்க்க வேண்டும்.
அதிரடியாக முடிவுகள் எடுப்பதற்கு பதிலாக ஆலோசித்து முடிவுகளை எடுத்தால் இல்லறம் சிறக்கும். இனிய நினைவுகள் இனிக்கும்.