திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.
பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.
50 மில்லி நல்லெண்ணெய்யுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாள்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.
நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் பரு நீங்கும்.
வெள்ளரிப்பிஞ்சை தக்காளி சாறில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.
பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்களும் சீக்கிரம் மறையும்.
எலுமிச்சைப்பழச்சாறு, பன்னீர் இரண்டையும் சம அளவு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாள்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சம் பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.
சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு இழைத்து, முகத்தில் தடவினால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
கொழுந்து வேப்பிலையை அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.
அறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் தடவலாம். இது, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்பட்டு பருவை குணமாக்கும்.
பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய, முகப்பரு மறையும்.
முகப்பரு ஏற்பட காரணங்கள்:
பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல்லும் ஒரு முக்கிய காரணி. அன்றாட உணவுப் பழக்கத்தைச் சரி செய்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொடுகுத் தொல்லை, நீளமாக நகம் வளர்த்தல், ஒழுகங்கற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவையும் பருக்கள் வர ஒரு காரணம்.
முகப்பருக்கள் உள்ளவர்கள் தலையணை உறை, சோப், டவல் போன்றவற்றைத் தனியாக பயன்படுத்த வேண்டும்.
முகப்பருக்கள் உள்ளவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையால், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, பருக்கள் வராமல் தடுக்கும்.